சென்னை:
ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, சுனில், நவீன் சந்திரா, அச்யுத் குமார், வெண்ணிலா கிஷோர், பிரம்மானந்தம், மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “கேம் சேஞ்சர்”. இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் ஷங்கர்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
இப்படத்தின் கதாநாயகன் ராம்சரண் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவி ஏற்றவுடன் விசாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று அங்கு நடக்கும் ஊழல்களை ஒழிக்க முற்படுகிறார். இந்த சூழலில் ஆந்திராவில் முதலமைச்சராக இருக்கும் ஸ்ரீகாந்த் உடல் நிலை சரியில்லாமல் சீரியஸ் கண்டிஷனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். முதலமைச்சரின் இரண்டு மகன்களான ஜெயராமும், எஸ்.ஜே. சூர்யாவும் அடுத்து முதலமைச்சர் ஆக வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருக்கிறார்கள். தங்களது தந்தையை எப்படியாவது கொலை செய்தாவது கட்சியையும், ஆட்சியையும் பிடித்துவிட வேண்டும் என்ற முயற்சியில் எஸ்.ஜ.சூர்யா ஈடுபடுகிறார்.
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் ராம்சரண், தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் மோசடியில் ஈடுபடுபவர்களை விழி பிதுங்க வைக்கிறார். கனிம வளக் கொள்ளை, மணல் கொள்ளை உட்பட அனைத்து சட்ட விரோத செயலர்களுக்கும் தடை போடுகிறார். இதன் மூலமாக கொள்ளை லாபம் பார்த்துக் கொண்டிருக்கும் முதலமைச்சரின் மகன் அமைச்சர் எஸ் ஜே சூர்யாவுக்கும், ராம் சரணுக்கும் மோதல் ஏற்படுகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஒரு அரசு விழா மேடையில் அமைச்சர் சூர்யாவை, ராம்சரண் கன்னத்தில் அறைந்து விடுகிறார்.
இதற்கிடையே, உடல்நலக் குறைவால் ஆந்திரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் முதல்வர் ஸ்ரீகாந்த் இருக்கும்போது பதவி ஆசைக்காக தனது தந்தையை கொன்று விடுகிறார் எஸ்.ஜே.சூர்யா. அதன் பிறகு அடுத்த முதல்வர் என எ ஸ்.ஜே.சூர்யா பதவி ஏற்க தயாராகிறார், முதல்வர் பதவி ஏற்று முதல் வேலையாக தன்னை அவமானப்படுத்திய கலெக்டர் ராம்சரணை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார் எஸ்ஜே.சூர்யா.. முதலமைச்சராகி எஸ்ஜே.சூர்யா கலெக்டர் ராம்சரணை பழிவாங்கினார? இல்லையா? என்பதுதான் “கேம் சேஞ்சர்” படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் கதாநாயகனாக இரட்டை கதாபாத்திரத்தில் ராம்சரண் நடித்திருக்கிறார். தந்தை கதாபாத்திரத்தில் மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களாகவும், மகன் கதாபாத்திரத்தில் அரசு அதிகாரிகளின் பலம் என்ன? என்பதை வெளிக்காட்டும் இரண்டு கதாபாத்திரங்களில் அமர்க்களமாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் கனிவும் சண்டைக்காட்சிகளில் துணிவும் காட்டியிருக்கிறார். எஸ் ஜே சூர்யாவுடன் சவால் விடுவதும், அவருடைய அம்மாவான அஞ்சலி இடம் பணிந்து பேசுவதும், மருத்துவக் கல்லூரி மாணவராக இருக்கும்போது தன்னுடைய கோபத்தை காதலுக்காக விட்டுக் கொடுப்பதுமாய், அந்த வயதுக்குரிய ஒரு கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் ராம்சரண்.
கதாநாயகியாக நடித்திருக்கும் கியாரா அத்வானி, வழக்கமான இயக்குனர் ஷங்கர் இயக்கும் படங்களில் வரும் கதாநாயகிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் கூட இல்லாமல் ஒரு சில காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலுல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அவரது நடன அசைவுகள் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலியின் முதுமைத் தோற்றம் வியப்பு. இளமைத் தோற்றத்தில் வரும் பாட்டும் அதில் அவர் நடனமும் ரசிக்கும்படி இருக்கிறது.
எப்படியாவது முதலமைச்சர் இருக்கையில் அமர வேண்டும் என்ற ஆசையில் வலம் வரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான பாணியில் நடித்திருந்தாலும், எதிர்மறை கதாபாத்திரத்தில் தன் சிறந்த நடிப்பின் மூலம் அற்புதமாக நிறைவு செய்து இருக்கிறார்.
முதல்வரின் மூத்த மகனாக அமைச்சர் மாவீரன் மாணிக்கம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயராம், தான் வரும் அனைத்துக் காட்சிகளிலும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.
ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, சுனில், நவீன் சந்திரா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்கு கொடுத்த பணியை கதையோட்டத்திற்கு ஏற்றவாறு உயிர் கொடுத்து நடித்து சிறப்பு செய்து இருக்கிறார்கள்.
பாடல் காட்சிகள் அத்தனையுமே மிகப் பிரம்மாண்டமாக அனைவரும் ரசிக்கும் விதத்தில் மிக அழகாக வடிவமைத்து ஒளிப்பதிவை தன் கை வண்ணத்தில் படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் திரு.
எஸ்.தமணின் இசையில் ஐந்து பாடல்கள் இருந்தாலும் அனைத்தும் சுமார் ரகம்தான். பின்னணி இசையில் அதிக சத்தம்.
இயக்குநர் ஷங்கரின் வழக்கமான கதையம்சத்தில், பாடல்கள், நகைச்சுவை, அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் முகத்திரையை கிழிக்கும் காட்சிகள் போன்றவைகள் அவர் இயக்கிய தமிழ் படங்களின் கலவையாக கொடுத்து இருக்கிறார். வழக்கமான பாணியில் இந்த படத்தை கையாண்டிருந்தாலும் புதிதாக எதுவும் இல்லாத உணர்வை நமக்கு கொடுக்கிறது. பான் இந்தியா படம் என்பதால் பிரம்மாண்டத்தை அதிகமாக புகுத்தி எவ்விதப் புரிதலுமின்றி திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில், ‘கேம் சேஞ்சர்’ படம் ஷங்கர் இயக்கிய பழைய படம் பார்க்கின்ற மாதிரி இருக்கிறது.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.