சென்னை:
கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட், ராஜ் ஐயப்பா, கீதா கைலாசம், பால சரவணன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளி வந்து இருக்கும் படம்தான் “தருணம்”. இப்படத்தை தேஜாவு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமான அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கிய அடுத்த படைப்புதான் இது.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
மத்திய ரிசர்வ் காவல் துறையில் அதிகாரியாக பணியில் இருக்கிறார் கதாநாயகன் கிஷன் தாஸ். அவருடன் காவல்துறையினரும் இணைந்து சில தீவிரவாதிகளை பிடிக்க செல்லும்போது துப்பாக்கி சூடு நடக்கிறது. அதில் அவரது நண்பர் இறந்து விடுகிறார். இந்த சூழ்நிலையில் கிஷன் தாஸை காவல்துறை சஸ்பெண்ட் செய்கிறது. அந்த சமயத்தில் ஸ்ம்ருதி வெங்கட்டுடன் நட்பு ஏற்படுகிறது. அந்த நட்பு காதலாக மாறி இருவரது வீட்டிலும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர் இந்த சூழ்நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும்போது ஸ்ம்ருதி வெங்கட்டின் ஆண் நண்பன் ராஜ் ஐயப்பா, அவரது வீட்டில் இறந்து கிடக்கிறார். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன ஸ்ம்ருதி வெங்கட் என்ன செய்வது என்று புரியாமல் இருக்கும்போது கிஷன் தாஸ் அவர் வீட்டுக்கு வருகிறார். ராஜ் ஐயப்பா இறந்து கிடப்பதை பார்த்தவுடன் தனது காதலிக்கு உதவி செய்ய முன் வருகிறார் கிஷன் தாஸ்.
தனது வருங்கால மனைவி ஸ்ம்ருதி வெங்கடை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்யும்போது, ராஜ் ஐயப்பாவின் பிணத்தை அவரது அப்பார்ட்மெண்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்துகிறார். ராஜ் ஐயப்பாவின் மரணம் தொடர்பாக யாருக்கும் சந்தேகம் வராத அளவில் கண்காணிப்பு கேமரா மற்றும் காவலாளிகள், அங்கு குடியிருக்கும் மக்களுக்குத் தெரியாமல் எந்தவித சந்தேகமும் உருவாகாத வண்ணம் அந்த கொலை வழக்கிலிருந்து எப்படி ஸ்ம்ருதி வெங்கட்டை காப்பாற்றுகிறார் என்பதுதான் ‘தருணம்’ படத்தின் மீதி கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் கிஷன் தாஸ் திரைப்படதுறையில் இப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், ஏற்கனவே இவர் ‘முதலும் நீ முடியும் நீ’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். தனது வருங்கால மனைவியை கொலை குற்றத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக அவர் செயல்படும் செயல்கள் முன்கூட்டியே யோசித்து அந்த விசாரணையில் இருந்து தப்பிக்க ஸ்மிருதி வீட்டில் நடந்த கொலையை தற்கொலையாக மாற்றுவதற்கு முயற்சி செய்யும் காட்சிகளில் நடிப்பு அபாரம்.
ஸ்ம்ருதி வெங்கட் தன் வீட்டில் நடந்த கொலைலிருந்து தப்பிப்பதற்காக பயமும், பதட்டமும் கலந்து கண்களிலும் முகத்திலும் வெளிப்படுத்தி, நடிப்பில் கலக்கி இருக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜ் ஐயப்பா, அவரது அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம், கிஷன் தாஸ் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலசரவணன் ஆகியோர் ஒரு சில காட்சிகள் வந்தாலும், தங்களுக்கு கொடுத்த வேலையை மிக சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
தர்புகா சிவா இசையமைத்த பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கிறது. அஸ்வின் பின்னணி இசை அமைத்திருக்கிறார். ஆனால் படத்துக்கு கை கொடுக்கும் விதத்தில் பின்னணிஇசை அமையவில்லை.
ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி, கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்கு தகுந்தவாறு மிக சிறந்த முறையில் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
‘தேஜாவு’ படத்தை இயக்கிய அரவிந்த் ஸ்ரீனிவாசன் இப்படத்தை வழக்கமான ஒரு காதல் கதையாக இல்லாமல் கிரைம் கலந்த த்ரில்லர் கதையை இயக்கியிருப்பது புதிய முயற்சியாக இருந்தாலும், வித்தியாசமான பாதையில் பயணித்திருக்கிறார். கதாநாயகி செய்த கொலையில், இருந்து தப்பிக்க முயற்சிக்கும்போது நமக்கு பதட்டத்தை ஏற்படுத்தி ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைத்து விடுகிறார் இயக்குனர்.
மொத்தத்தில், ‘தருணம்’ ஒரு புதுமையான திரில்லர் படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.