CHENNAI:
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ தண்டேல் ‘எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரகாஷ் பெலவாடி, கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரிலான இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இதனை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார்.
எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு , நடிகர் நாக சைதன்யா, நடிகை சாய் பல்லவி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ் – வெங்கட் பிரபு , நடிகர் கருணாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசுகையில்,
திரைத் துறையில் தயாரிப்பாளராக 10, 15 ஆண்டுகளை கடந்து செல்வது என்பது சவாலாக இருக்கும் தருணத்தில் தொடர்ந்து 50 வருடங்களாக திரைப்படங்களை வழங்கி வருகிறார் கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான அல்லு அரவிந்த். இந்த வகையில் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது. நாக சைதன்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பி இருக்கிறேன். ஆனால் தற்போது அவர் நடித்த படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சாய் பல்லவி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால்.. அந்தத் திரைப்படம் நன்றாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையை சாய் பல்லவி தமிழக மக்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறார். அவர் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் இந்த திரைப்படம் நன்றாக இருக்கும் என்று நானும் நம்புகிறேன். நடிகர் கருணாகரன் தற்போது பான் இந்திய நடிகராக உயர்ந்திருக்கிறார் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி அன்று திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கும் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில்,
கருணாகரன் விவரிக்கும் போது நிறைய பயணம் செய்ததாக குறிப்பிட்டார். கதை நிகழும் இடத்தைப் பற்றி சொல்லும் போதும்.. அதனை முன்னோட்டத்தில் பார்க்கும் போதும்.. இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. ராக்ஸ்டாரின் பாடல்களும் நன்றாக இருந்தது. படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நடிகர் கருணாகரன் திறமையானவர். காமெடி மட்டுமல்ல அவர் எந்த கேரக்டரிலும் நடிக்கக்கூடியவர். இந்தப் படத்தின் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். அவருக்கும் தெலுங்கிலும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். படம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில்,
நானும் டிஎஸ்பியும் சிறிய வயதில் இருந்து ஒன்றாக – வெட்டியாக சுற்றிக் கொண்டிருந்தோம். தற்போது தான் இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பம் பிரபலமாகி இருக்கிறது ஆனால் 90 களிலேயே தேவி ஸ்ரீ பிரசாத் – எஸ் பி பி சரண் ஆகியோர் இணைந்து இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பத்தினை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்தக் குழுவில் நான் இருந்தாலும் என்னை பாட அனுமதிக்க மாட்டார்கள். அவரும் இந்த படத்திற்காக தன்னுடைய கடும் உழைப்பை வழங்கியிருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இயக்குநர் சந்து – இதற்கு முன் இயக்கிய ‘ கார்த்திகேயா ‘ உள்ளிட்ட படங்களை பார்த்திருக்கிறேன். அவரும் நாக சைதன்யாவும் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறார்கள். இயக்குநர் சந்து வெவ்வேறு ஜானர்களில் படங்களை இயக்கி வருகிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். எங்களின் கருணாகரனை தெலுங்கில் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். இதற்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாக சைதன்யா திறமையானவர். அர்ப்பணிப்புடன் உழைப்பவர். நன்றாக தமிழ் பேச கூடியவர். தமிழ் இயக்குநர்கள் அவரிடம் சென்று கதையையும் , காட்சியையும் தமிழிலேயே விளக்கிச் சொல்லலாம். அவரும் ஒரு காட்சியை மேம்படுத்துவதற்காக நிறைய மெனக்கெடுவார். நாங்கள் இருவரும் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசை. ஆனால் அது தெலுங்கு படமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் தெலுங்கு – தமிழ் என கலவையாக இருக்கக் கூடாது. மிகப்பெரிய திரையுலக ஆளுமை மிக்க குடும்பப் பின்னணியில் இருந்து வந்தாலும் எளிமையாக பழகக் கூடியவர். இதற்காகவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று புதிய உயரத்தை தொட வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
இசையமைப்பாளர் ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் பேசுகையில்,
நாக சைதன்யா என் நண்பர். என் சகோதரர். திறமையானவர். தண்டேல் படத்தின் போஸ்டரை பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டேன். அவர் இந்த கதாபாத்திரத்திற்காக தன்னுடைய உடல் அமைப்பை மாற்றி அமைத்து இருந்தார். இது நம்முடைய வழக்கமான நாக சைதன்யா இல்லையே..! என்ற எண்ணம் வந்தது. படத்திற்காக கடும் உழைப்பை வழங்கிய அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
சாய் பல்லவி இந்த பெயரை உச்சரித்தாலே போதும். அனைவருக்கும் பிடித்து விடும். இந்தியாவின் சிறந்த இயக்குநரான மணிரத்தினமே சாய் பல்லவியின் ரசிகர் தான். இந்த திரைப்படத்தில் அவரும் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அவர் சிறந்த நடிகை மட்டுமல்ல. நன்றாக நடனம் ஆடக்கூடிய கலைஞர். அவருடைய படங்களில் இடம்பெறும் பாடல்களில் அவர் நடனமாடி இருக்கிறாரா..? என்பதை நான் ஆவலுடன் எதிர்பார்ப்பேன். ஒரு பாடலுக்கு என்ன தேவையோ.. அதனை அந்த பாடலுக்குள்ளேயே சின்ன சின்ன நடன அசைவுகள் மூலம் அழகூட்டுபவர்.
இந்த படத்தின் காட்சிகள் எல்லாம் சிறப்பாகவும், பிரமிப்பாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருக்கும் கார்த்தி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் , வெங்கட் பிரபு ஆகியோருக்கும் என்னுடைய நன்றிகள். நான் பாடலாசிரியர்களுக்கு எப்பொழுதும் முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்குவேன். ஏனெனில் நான் பிரபல கதாசிரியர் சத்தியமூர்த்தியின் மகன். அவர் கதாசிரியர் மட்டுமல்ல. பாடலாசிரியரும் கூட. ஒரு பாடலுக்கு அழகாக டியூன் அமைத்தாலும் அதனை வெளிப்படுத்துவது பாடல் வரிகள் தான். இந்த வகையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேகா எழுதியிருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். பிப்ரவரி 7ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் தண்டேல் திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகை சாய் பல்லவி பேசுகையில்,
இந்தப் படத்தின் பாடல்கள் தெலுங்கு ரசிகர்களிடத்தில் மிகவும் பிரபலம். இதற்காக பணியாற்றிய ராக் ஸ்டார் டிஎஸ்பிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். தெலுங்கு திரையுலகத்திற்கு அறிமுகமாகும் கருணாகரனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அவரை தெலுங்கு திரையுலகம் சார்பாக வரவேற்கிறேன். படப்பிடிப்பில் மொழி தெரியாவிட்டாலும் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். தண்டேல் படக் குழுவுடன் பணியாற்றிய ஒன்றரை ஆண்டு காலத்தில் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். எதிர்வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்குச் சென்று படத்தை பார்க்க வேண்டும். அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். ” என்றார்.
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசுகையில்,
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் எனக்கு மகன் போல. அவரை சிறிய வயதில் இருந்தே எனக்கு தெரியும். அவரிடம் இங்கிருந்தே ஒரு கேள்வியை கேட்கிறேன். எப்படிடா இப்படி 25 வருடமாக தொடர்ந்து ஹிட் பாடல்கள் வழங்கிக் கொண்டிருக்கிறாய்? அவருடைய அப்பா எனக்கு நல்ல நண்பர். கருணாகரன் இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். படத்தில் அவருடைய நடிப்பு பேசப்படும். ஆடுகளம் நரேன் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்தத் திரைப்படத்தை தமிழில் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தவுடன் என் நினைவுக்கு வந்தவர் எஸ். ஆர். பிரபு மட்டும் தான். அவர் இந்த திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதால் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திரைப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகர் கார்த்தி பேசுகையில்,
இங்கு வந்த பிறகுதான் நாக சைதன்யா என்னிடம், இந்த கதை 2018 ஆம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவம் என்று சொன்னார். கேட்பதற்கு இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. நம் ஊரில் மீன் பிடிக்கும் மீனவர்கள் பாகிஸ்தான் எல்லைக்கு சென்று மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் குஜராத்திற்குச் சென்று படகில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி பாகிஸ்தானுக்கு சென்று மாட்டிக் கொள்கிறார்கள் என்றார். பிறகு அங்கிருந்து எப்படி தப்பித்து வந்தார்கள் என்பதை ஒரு அழகான காதல் கதையாக இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. எவ்வளவு பெரிய திரில்லாக இருந்தாலும் அது டைட்டானிக்காக இருந்தாலும் அதற்குள் ஒரு லவ் ஸ்டோரி தேவைப்படுகிறது. அந்த லவ் தான் மனதில் நிற்கிறது. 20 பேரிடம் ரைட்ஸ் வாங்கி அதை ஒரு அழகான காதல் கதையாக உருவாக்கி வழங்கியிருக்கிறார்கள் என்றால் இந்த கதை மீது தயாரிப்பாளர் எவ்வளவு நம்பிக்கை இருக்க வேண்டும். இந்தப் படத்திற்காக ஒன்றரை ஆண்டு காலம் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாகவே இந்த படத்தை இந்தியா முழுவதும் நம்பிக்கையுடன் வெளியிடுகிறார்கள்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இதற்கு முன் இயக்கிய படங்களும் வெற்றி படங்கள்தான். கடல் பின்னணியில் நிறைய படங்களை பார்த்திருக்கிறோம். தற்போது மீண்டும் ஒரு புதிய அனுபவத்திற்கு தயாராகி இருக்கிறோம். இதற்காக அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் திரை உலகில் பீஷ்மரை போன்றவர். திரை உலகிற்கு தயாரிப்பாளர்கள் வருவார்கள். செல்வார்கள். நீண்ட காலம் தாக்குப் பிடிப்பது கடினம். பெரிய பெரிய நிறுவனங்களே படத் தயாரிப்பு வேண்டாம் என நிறுத்திவிட்டார்கள். இந்த சூழலில் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார் அல்லு அரவிந்த். அவர் சினிமாவில் படங்களை வியாபார நுணுக்கங்களுடன் தயாரிக்கிறார். அவர் தேவி ஸ்ரீ பிரசாத் பார்த்து எப்படிடா இத்தனை ஆண்டுகளாக ஹிட்டு கொடுக்கிறாய்? என கேட்கிறார். அதை போல் நான் அவரைப் பார்த்து, எப்படி சார் தொடர்ந்து ஹிட் படங்களை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? என கேட்கிறேன்.
கருணாகரன் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். அவரும் ஒரு அற்புதமான நடிகர். அவர் தெலுங்கிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஆடுகளம் நரேன் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அவருக்கு தொடர்ந்து சீரியசான கதாபாத்திரங்களை வழங்கி சீரியசான நடிகராக்கிவிட்டார்கள். ஆனால் அவர் அற்புதமாக காமெடியும் செய்வார். ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் காமெடியில் கலக்கியிருப்பார். நான் துருக்கி நாட்டிற்கு சென்றிருந்தபோது அங்கும் டிஎஸ்பி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. இதுதான் அவருக்கு கிடைத்திருக்கும் புகழ். அவர் எப்போதும் உழைத்துக் கொண்டே இருப்பார். அவருடைய ஸ்டுடியோவுக்கு சென்றால்.. இசையை பற்றி மட்டுமே பேசிக் கொண்டே இருப்பார். அவர் இந்த நாட்டிற்கு சொந்தம். அவை எப்போதும் எனர்ஜியுடன் இருக்கிறார். இதற்காகவே நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். இந்தப் படத்தின் பாடல்களும் அற்புதமாக இருக்கிறது. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா இசையமைப்பாளர்களுக்கும் காதல் கதை கிடைத்து விட்டால் போதும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவார்கள். இந்த திரைப்படத்திலும் டிஎஸ்பி தன் திறமையை வெளிப்படுத்தி அனைத்து பாடல்களையும் ஹிட் ஆக்கி இருக்கிறார்.
சாய் பல்லவி மிகவும் ஸ்பெஷல் ஆனவர். அவர் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தன் திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். காதலிப்பதாகட்டும்.. அதில் காதலை கொட்டி தீர்ப்பார். இதனாலேயே இளைஞர்கள் எல்லாம் உங்கள் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். நடனம் சொல்லவே வேண்டாம். வலியை கடத்துவதாக இருந்தாலும் அதிலும் முத்திரை பதிக்கிறீர்கள். வயதிற்கு மீறிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அனுபவமும் வித்தியாசமாக இருக்கிறது. அமரன் படம் பார்த்துவிட்டு உங்களிடம் பேசியிருக்கிறேன். ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியின் தியாகம் என்ன? என்று பொதுமக்களுக்கு தெரியாது. அதை அமரன் படத்தில் நீங்கள் விவரித்திருந்த விதம் அவர்களின் வலியை எங்களுக்கு புரிய வைத்தது. இதற்காக நன்றி.
நாக சைதன்யா அவருடைய தாத்தா எனக்கு தெரியும். அவரைத் தொடர்ந்து நாகார்ஜுனாவை தெரியும். அவர் ‘இதயத்தை திருடாதே’ படத்தை பார்த்த பிறகு.. அவரைப் போல் டிரஸ் செய்து கொள்வது.. அதேபோல் ஓடுவது. என பல முயற்சிகளை பலரும் செய்தார்கள். ஆனால் அவர் செய்த ஸ்டைலில் யாராலும் செய்ய முடியவில்லை. அவரைப் போல் அழகாக பேசவும் தெரியாது. அவருடன் தெலுங்கு திரைப்படத்தில் பணியாற்றிருக்கிறேன். நான் அங்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்வார். அவ்வளவு அக்கறையுடன் பார்த்துக் கொள்வார். அன்பை பொழிவதில் தன்னிகரற்றவர். அவருடன் பணியாற்றி 10 வருடங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் தற்போது நான் என்ன படம் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து வைத்திருப்பார். அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று சொல்வார். படம் பார்த்து பிடித்து விட்டால்.. உடனடியாக ட்வீட் செய்வார். இது போல் எனக்காக எப்போதும் அன்பு காட்டி வரும் அவருக்கு நான் திருப்பி என்ன செய்வதென்று தெரியவில்லை.
நாக சைதன்யாவை முதன் முதலில் திரையில் பார்த்த போது கூச்ச உணர்வு உள்ள ஒரு இளைஞரை அழுத்தம் கொடுத்து நடிக்க வைக்கிறார்களோ..! என தோன்றியது. ஆனால் அவர் முகத்தில் ஒரு அப்பாவித்தனம் தெரியும். அந்த அப்பாவித்தனத்தை தான் ஏராளமான பெண்கள் ரசிக்கிறார்கள். அவருடைய அப்பாவித்தனமும் பிடித்தது. அவருடைய அப்பாவையும் பிடித்தது. அவருடைய தாத்தாவையும் பிடித்தது. நாக சைதன்யா கடுமையாக உழைப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படத்தில் அவருடைய வளர்ச்சி தெரிகிறது. இந்தத் திரைப்படத்திற்காக ஒன்றரை ஆண்டு காலம் தன் உடலமைப்பையும் மாற்றி நடித்திருக்கிறார். உழைப்பு ஒரு போதும் வீண் போகாது. உங்களுடைய கடும் உழைப்புக்கு இந்த படம் சரியான பரிசை வழங்கும். இந்தப் படம் தமிழிலும் பெரிய வெற்றியை பெறும் என்று உறுதியாக நம்புகிறேன். விவேகா- தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஹிட்டான பாடல்கள்- சாய் பல்லவி திரைத்தோற்றம்- உண்மை சம்பவம் – புது ஐடியா – என பல பாசிட்டிவ்வான விசயங்கள் இருப்பதால் இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெரும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.
நடிகர் நாக சைதன்யா பேசுகையில்,
கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி. உங்களுடைய இயக்கத்தில் வெளியாகும் ‘ரெட்ரோ’ படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். தண்டேல் படத்தின் தொடக்கம் என்பது, இயக்ங சந்து என்னை சந்தித்து உண்மை சம்பவத்தை ஒரு சின்ன ஐடியாவாக டாக்குமென்டரி ஸ்டைலில் சொன்னார். ஸ்ரீகாகுளம் எனும் கிராமத்தில் இருந்து குஜராத்திற்கு சென்று அதன் பிறகு ஒன்றரை வருஷம் பாகிஸ்தானுக்கு சென்று திரும்பவும் வருவது.. என ஒரு பெரிய நீண்ட பயணம் இதில் இருக்கிறது. அந்த உண்மைக் கதையை கேட்டவுடன் ஒரு நடிகராக நான் ஆச்சரியமடைந்தேன். அதன் பிறகு ஸ்ரீகாகுளம் சென்று அங்குள்ள கிராமத்தில் வசிக்கும் மீனவர்களிடத்தில் பழகி அவர்களுடைய வாழ்வியல் முறையை தெரிந்து கொண்டேன். அந்தப் பயணம் மறக்க முடியாதது . அந்த அனுபவமும் மறக்க முடியாதது.
இது போன்ற வாய்ப்பு மிகவும் அரிதாகத்தான் கிடைக்கும். இதற்காக என்னை நான் மாற்றி க் கொண்டேன். இது போன்ற கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்பதால் இதனை உருவாக்கி இருக்கிறோம். ஸ்ரீகாக்குளம் மீனவர்கள் தான் இப்படத்தின் உண்மையான நாயகர்கள்.
தயாரிப்பாளர்கள் பன்னி வாஸ் மற்றும் அல்லு அரவிந்த் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய மூன்றாவது படமான 100% லவ் படத்திற்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் அல்லு அரவிந்துடன் இணைந்து இருக்கிறேன். இந்த படமும் பெரிய வெற்றியை பெறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். ஒவ்வொரு லவ் ஸ்டோரி திரைப்படத்திலும் பாடல்கள் ஹிட்டாக அமைய வேண்டும். இதிலும் ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் எல்லா பாடல்களையும் ஹிட்டாக்கி இருக்கிறார். இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்த படத்திற்கு பாடல்களுக்கு மட்டும் இசையமைக்காமல் அந்தப் பாடல்களை காட்சிப்படுத்தும் போதும் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து உற்சாகப்படுத்தினார். சாய் பல்லவி அனைவரும் சொல்வது போல் எனக்கும் அவர் ஸ்பெஷலானவர். ஒவ்வொரு நடிகரும், ஒவ்வொரு இயக்குநரும், ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் உங்களைப் பற்றி பேசுவார்கள். அனைவரும் உங்களுடைய ரசிகர்கள் தான். உங்களுடன் பணியாற்றுவது இனிமையான அனுபவம். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தமிழில் வெளியிடுகிறார். இதற்காக அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரும் நானும் பல கதைகளை பேசி இருக்கிறோம். விரைவில் இணைந்து பணியாற்றுவோம் என்று நம்புகிறேன். கருணாகரனுடன் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் அவருடைய பங்களிப்பு நன்றாக இருந்தது. அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தண்டேல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் ” என்றார்.