’தண்டேல்’ திரைப்பட விமர்சனம்!

101

சென்னை:

நாக சைதன்யா, சாய் பல்லவி, பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு பிருத்விராஜ், மைம் கோபி, கல்ப லதா, கல்யாணி நடராஜன், மகேஷ் அச்சந்தா, கிஷோர் ராஜு வசிஷ்டா, மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “தண்டேல்”

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள  ஒரு கடலோர மீன்பிடி கிராமத்தில் ‌ மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அங்குள்ள வாழ்வாதத்திற்காக கடலை நம்பியுள்ள நாகசைதன்யா அவர் தன் தந்தையை  இழந்த பிறகு அடிக்கடி மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் செல்கிறார். அதேபோல் அந்த கிராமத்தில் தனது தாயை இழந்த சாய் பல்லவி தன் தந்தை பிரித்திவிராஜ் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்த நிலையில் சாய்பல்லவி கதாநாயகன் நாகசைதன்யாவை மனமார காதலிக்கிறார். நாக சைதன்யா தன்னுடைய மீனவக் கிராமத்தில் உள்ள நண்பர்களோடு சேர்ந்து சுமார் பல ஆயிரம் கி.மீ.க்கு தொலைவில் இருக்கும் குஜராத் கடற்கரைக்குச் சென்று, மீன்பிடிக்கச் செல்கிறார்கள். மீனவக் குடும்பத்தில் உள்ள அனைவரும் வருடத்தில் ஒன்பது மாதங்கள் மட்டுமே கடலுக்குள் சென்று மீன்பிடிப்பது இவர்களுடைய வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கடலுக்குள் சென்று 9 மாதங்கள் மீன்பிடிக்கும் இவர்கள் மூன்று மாதங்கள் மட்டுமே தனது குடும்பத்தோடு சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்.

மீனவர்களுக்கு தலைமை தாங்கி செல்லும் நாக சைதன்யா மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் நிலையில் ஒரு சூழலில் அங்கு ஏற்படும் ஆபத்தை எண்ணி பயப்படும்  காதலி சாய் பல்லவி, ‘நீ மீன் வேட்டைக்கு செல்லாதே! அதை விட்டுவிட்டு என்னை திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ முடிவு செய்’ என்கிறாள். ஆனால், நமது கிராமத்தில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் மீன் பிட்டிக்கும் தொழில்தான் என்று கூறி  நாக சைதன்யா, தன் காதலி  சாய் பல்லவி பேச்சையும் மீறி மீன்வேட்டைக்கு சென்று விடுகிறார்.

இதனைத் தொடர்ந்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சில நாட்களில், கடும் புயலில் வேறு ஒரு படகு கவிழும் நிலையில் நாக சைதன்யா கடலில் குதித்து அந்தப் படகில் உள்ள ஒருவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார். இந்த சூழ்நிலையில் நாக சைதன்யாவுடன் மீன் பிடிக்க சென்றவர்களின் படகு  பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விடுகிறது. கடலில் ரோந்து சென்றுக் கொண்டிருந்த பாகிஸ்தான் கப்பல் காவல் படையினர் நாக சைதன்யா மற்றும் 21  மீனவர்களை கைது செய்து பாகிஸ்தான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அங்குள்ள கராச்சி மத்திய சிறைக்குள்  அடைத்து விடுகிறார்கள்..

சாய் பல்லவி பேச்சையும் மீறி மீன்வேட்டைக்கு சென்ற  நாக சைதன்யா கராச்சி மத்திய சிறைக்குள் இருப்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைகிறார். தன் பேச்சை கேட்காமல் சென்ற நாக சைதன்யாவை வெறுக்கிறார். அதனால் தன் தந்தை பிருத்திவி ராஜிடம் தனக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்குமாறு சொல்கிறார்.  இறுதியில் நாக சைதன்யா கராச்சி மத்திய சிறையிலிருந்து  மீண்டு வந்தாரா?  காதலி சாய் பல்லவியை நாக சைதன்யா திருமணம் செய்க்கொண்டாரா?  என்பதுதான் “தண்டேல்” படத்தின் மீதிக் கதை.

இப்படத்தில் கதாநாயகனாக நாக சைதன்யா நடித்திருக்கிறார். தனது ராஜு கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மனதில் உள்ள உணர்ச்சிகளை திறம்பட வெளிப்படுத்தி நடிப்பில் அசத்துகிறார், காதல், ஆக்‌ஷன் காட்சிகளில்  உணர்ச்சிகரமான தருணங்கள் என எதுவாக இருந்தாலும், அவர் நம்பத்தகுந்த வகையில் அவரது நடிப்பின் கடின உழைப்பு அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது.

சாய்பல்லவிக்கு காதலாகிக் கசிந்துருகுவதும் காதலனுக்காகக் கலங்குவதும் அவனைக் காப்பாற்ற பொங்குவதும் எனப்பல பரிமாணங்கள் கொண்ட கதாபாத்திரம் என்பதால் அனைத்திலும் நன்றாக நடித்து வரவேற்புப் பெறுகிறார். அவரை இன்னொரு நடிகையர் திலகம் சாவித்திரி என்றே சொல்லலாம். அவரது உன்னதமான நடிப்பு படம் பார்ப்பவர்களின் மனதை கவர்ந்து கண்ணீரை வரவழைத்து கலங்க வைத்து விடுகிறார். நடிப்பு நடனம் என தன் நடிப்பின் மூலம் சாய் பல்லவி அசத்தியிருக்கிறார்.

கருணாகரன், பிரகாஷ் பெலவாடி, திவ்யா பிள்ளை, ராவ் ரமேஷ், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு பிருத்விராஜ், மைம் கோபி, கல்ப லதா, கல்யாணி நடராஜன், மகேஷ் அச்சந்தா, மற்றும் கிஷோர் ராஜு வசிஷ்டா உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து இருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் ஷியாம் தத்தின் ஒவ்வொரு காட்சி கோணங்கள் கிராமத்தின் அழகையும், கடலின் பரந்த தன்மையையும் தனது ஒளிப்பதிவு மூலம் மிக ஆங்கில பட ஸ்டைலில் படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்.

தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்குப் பலம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

கார்த்திக் தீடா என்பவரின் கதைக்கு திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் சந்து மொண்டேட்டி. ஒரு பொதுவான காதலை வைத்துக் கொண்டு ஆந்திர மீனவ மக்களின் வாழ்வியல் முறைகள், அவர்களது கஷ்டங்கள், போராட்டங்கள்,கடலுக்குள் நடக்கும் நிகழ்வுகள் ஆகிய புதிய அம்சங்களைக் காட்சிப்படுத்தியிருந்தாலும் பாகிஸ்தான் சிறையில் இந்திய கைதிகள் அனுபவிக்கும் பிரச்சனைகளை விட, அந்த காட்சிகள் மூலம் தேசப்பற்றை வெளிப்படுத்த முயற்சி செய்து நம் தேசிய கொடியை காட்டி பாகிஸ்தான் கைதிகளை  வெறுப்படைய செய்வது நம்புகின்ற மாதிரி இல்லை.

மொத்தத்தில், ‘தண்டேல்’ படத்தை அனைத்து ரசிகர்களும் பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.