சென்னை:
பொதுவாகவே தமிழ் சினிமாவில் சமுத்திரக்கனி நடிக்கும் படங்கள் என்றாலே சமுதாய கருத்தை மையப்படுத்தியும், இல்லை என்றால் குடும்பம் சார்ந்து கதையை உருவாக்கி இருப்பார்கள். தற்போது வெளி வந்து ஓடிக் கொண்டிருக்கும் “ராமம் ராகவம்” படத்தின் கதையும் ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்து இருக்கிறார்கள்.
அப்பாவாக – சமுத்திரக்கனி. அம்மாவாக – பிரமோதினி. மகனாக – தன்ராஜ் கொரனானி. மோக்ஷா சுனில் ஹரீஸ் உத்தமன் , சத்யா ஸ்ரீனிவாஸ் ரெட்டி. பிரித்விராஜ். மற்றும் பலர் நடிப்பில்
அருண்சிலுவேறு இசையில் துர்கா கொல்லிபிரசாத் ஒளிப்பதிவில் தன்ராஜ் கொரனானி, இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் ‘ராமம் ராகவம்’
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சமுத்திரகனி நேர்மையான அதிகாரியாக யாரிடமும் லஞ்சம் வாங்காமல் பணி புரிந்து வருகிறார்.. ஆனால் அவரது மகன் தன்ராஜ் பள்ளிப்பருவத்திலேயே சரியாக படிக்காமல் பல தீய பழக்கங்களுக்கு அடிமையாகி ஊரை சுற்றி வருகிறான். ஒரே மகன் என்பதால் மிகவும் செல்லத்தோடு வளர்த்தாலும், தந்தை சமுத்திரக்கனி கொஞ்சம் கண்டிப்பானவராக இருந்ததாலும் தன் மகனை திருத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார். படிப்பை முடித்தவுடன் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊதாரியாகவும் சூதாடியாகவும் வளருகிறான் மகன் தன்ராஜ்.
இதனால் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவில் அடிக்கடி பிரச்ச்சனை ஏற்பட்டு முட்டல் மோதலாகவே இருந்து வருகிறது. ஆனால் தந்தை சமுத்திரக்கனி மகனின் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள சூழ்நிலையில் புட் கோர்ட்டில் தன் நண்பனுடன் இணைந்து ஒரு உணவு விடுதி வைப்பதற்காக சமுத்திர கனியிடம் ஐந்து லட்சம் ரூபாய் கேட்கிறார் மகன் தன்ராஜ். முதலில் மறுத்த சமுத்திரக்கனி பிறகு தன் மனைவி வற்புறுத்தலுக்கு இணங்க மகனுக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்கிறார். ஆனால் மகன் தன்ராஜ் அந்தப் பணத்தை கிரிக்கெட் சூதாட்டத்தில் விளையாடி இழந்து விடுகிறார்.
இதனால் கோபம் அடைந்த தந்தை சமுத்திரக்கனி மகனை வீட்டை விட்டு விரட்டி விடுகிறார். தன் மகன் பலருக்கு மத்தியில் எந்த கெட்டப் பெயரும் எடுக்காமல் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நினைக்கும் சமுத்திரக்கனியை புரிந்து கொள்ளாத மகன், தந்தையை வெறுக்கிறான். ஒரு கட்டத்தில் தந்தையின் கண்டிப்பு அவருக்கு பிடிக்காமல் தந்தை சமுத்திரகனியை கொலை செய்ய திட்டமிடுகிறார். தந்தை இறந்து விட்டால் அவரது வேலை தனக்கு கிடைக்கும். அந்த வேலை கிடைத்தால் பல லட்சங்கள் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் பெற்ற தந்தையையே கொலை செய்ய முயலும் மகன் தன்ராஜ், தந்தை சமுத்திரகனியை கொன்றாரா? இல்லையா? என்பதுதான் “ராமம் ராகவம்’ படத்தின் மீதிக் கதை.
ஒரு சிறந்த தந்தைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சமுத்திரகனியின் நடிப்பு அனைவரது மனதையும் கவர்ந்து கண் கலங்க வைக்கிறது. தனது அனுபவமான நடிப்பு மூலம் இந்த படத்திற்கு பெரிய அளவில் பலம் சேர்த்து அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்.
சமுத்திரக்கனிக்கு ஜோடியாக பிரமோதினி பிரமாதமாக நடித்து அசத்தியுள்ளார். பெற்ற மகனையும் விட்டுக் கொடுக்க முடியாமல், கணவனின் நியாயத்தையும் புரிந்தவராக, இருவருக்கும் இடையில் அல்லாடும் அம்மா பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். தமிழுக்கு புதிது என்றாலும் அவர் நடித்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து கலக்கி இருக்கிறார்.
ராகவனாக நடித்துள்ள தனராஜ், இப்படத்தை இயக்கியும் உள்ளார். எந்த வித முரட்டுதனம் இல்லாத அமைதியான ஒரு வில்லனாக சிறந்த நடிப்பின் மூலம் அனைவரையும் அசத்துகிறார் தன் தந்தையை பகைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி மது குடிக்கும் காட்சியிலும் மற்றும் தந்தையை கொலை செய்ய ஹரீஸ் உத்தமனோடு இணைந்து செயல்படும் காட்சியிலும் எந்தவித ஆர்வாரம் இல்லாமல் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். அதே சமயம் தன் தவறை உணர்ந்து தவிக்கும் காட்சிகளில் உணர்ச்சிகரமான நடிப்பில் நம்மை மிரட்டுகிறார். தமிழில் முதற்படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியாகப் படத்தை உருவாக்கியுள்ளார்.
அனுமன் பக்தராகவும், பவானி பைனான்ஸ் நடத்துபவராகவும் வருகிறார் சுனில். சத்யாவும், பாலிரெட்டி பிருத்துவிராஜும் படத்தில் தங்களுக்கு கொடுத்த பணியை மிக சிறப்பாக செய்துள்ளனர். பாண்டிச்சேரி தேவாவாக ஹரிஷ் உத்தமன் நடித்துள்ளார். கடைசி கட்ட காட்சியில் அவரது நடிப்பு பாராட்டும் விதத்தில் உள்ளது.
அருண் சிலுவேருவின் பின்னணி இசை. ‘குலசாமி போல’ என்ற யுகபாரதியின் பாடலும், க்ளைமேக்ஸில் மனதைக் கனக்கச் செய்ய வைக்கும் முருகன் மந்திரத்தின் வரிகளில் வரும் பாடலும் கதைக்கருவிற்கு பலம் சேர்த்தாக அமைந்துள்ளன.
தனது கேமரா கோணங்களின் மூலமாக நடிகர்களின் மனதைத் திரையில் உயிரோட்டமாக கொண்டு வந்துள்ளார் ஒளிப்பதிவாளர் துர்கா கொல்லிபிரசாத்.
இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட தந்தை தனக்கு இல்லையே என்று வேதனைப்பட வைக்கின்ற மாதிரி ஒரு உன்னதமான கதையை இயக்கி இருக்கிறார் தன்ராஜ். இன்றைய இளைஞர்களுக்கு ஏற்றவாறு அனைவரும் ரசிக்கக் கூடிய விதத்தில் ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குனர். அவரை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும். அவருக்கு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் “ராமம் ராகவம்” படம் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3.5/5.
RADHAPANDIAN.