சென்னை:
எம்.சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஜெகன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் (எ) பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலட்சுமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ . இப்படத்தை அபிஷன் ஜீவிந்த் எழுதி இயக்கி இருக்கிறார்.
சமீபத்தில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியாலும் உயிர் பயத்தாலும் வல்வெட்டித் துறையை சேர்ந்த ஈழத் தமிழரான சசிகுமார் தனது மனைவி சிம்ரன் மகன்கள் மிதுன் ஜெய்சங்கர் மாஸ்டர் கமலேஷ் ஜெகன் ஆகியோருடன் சட்டத்துக்கு விரோதமாக படகில் ஏறி இலங்கையிலிருந்து யாருக்கும் தெரியாமல் ராமேஸ்வரத்திற்கு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் சிம்ரனின் தம்பி யோகி பாபு தனது சகோதரி குடும்பத்திற்கு உதவி செய்ய எண்ணியதால், அவர்களை சென்னைக்கு அழைத்து வருகிறார். தமிழக கடற்கரைக்கு வந்து சேரும் அவர்கள், போலீசில் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கு வரும் போலீஸ் கான்ஸ்டபிள் ரமேஷ் திலக் விசாரணைக்காக வேனில் அழைத்து செல்ல சசிகுமாரின் கதையை கேட்டு அனைவரையும் விடுவிக்கிறார் .
இந்த சூழலில் யோகிபாபு சசிகுமார் குடும்பத்தினரை வேளச்சேரியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் பக்ஸ் என்ற பகவதி பெருமாளுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு ஒரு வீடு பிடித்துக் கொடுக்கிறார். அங்கிருப்பவர்களிடம் சசிகுமார் குடும்பம் ஈழத் தமிழர்கள், அகதிகள் என்பதை மறைத்து அனைவரிடமும் பாசத்தோடு பழகி, அங்குள்ளவர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள். தன் குடும்பத்தைக் காப்பாற்ற எதிர் வீட்டில் குடியிருக்கும் எம் எஸ் பாஸ்கரிடம் கார் டிரைவராக வேலை பார்க்கிறார் சசிகுமார். இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சசிகுமார் குடும்பம் வந்த அன்று குண்டு வெடிப்பு நடக்கிறது. அந்த குண்டு வெடிப்பு காரணமான குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் புலன் விசாரணை செய்கின்றனர். அங்கு நடந்த குண்டுவெடிப்பில் சசிகுமார் குடும்பத்துக்குத் தொடர்பு இருக்கிறது என்று சொல்லி அவர்களை சுற்றி வளைக்கிறது காவல்துறை. எந்த குற்றமும் செய்யாத சசிகுமார் குடும்பத்தை காவல்துறையினர் கைது செய்தார்களா? அல்லது குண்டுவெடிப்புக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்தார்களா? என்பதுதான் “டூரிஸ்ட் பேமிலி” படத்தின் மீதிக் கதை.
இலங்கை தமிழர் தர்மதாஸாக சசிகுமார், மனிதநேயமிக்க உண்மையானவராக, அகதியாக அதற்கேற்ற பேச்சு உடல்மொழிக்காக மிகவும் சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. தமிழகத்திற்குள் நுழைந்தாலும், புதிய வாழ்க்கையை வாழ்வதற்காக தன்னுடைய கஷ்டங்களை மறைத்து, மகிழ்ச்சியாக குடும்பத்தினருடன் ஒரு நல்ல மனிதராக படத்தில் வாழ்ந்திருக்கிறார்…என்றுதான் சொல்ல வேண்டும். அவரை சந்தேகத்துடன் பார்க்கும் காவல்துறையை சமாளிக்கும் போதும், கண் கலங்கும் போதும் ரசிகர்கள் மனதில் நிலையான ஒரு இடத்தை பிடித்து விடுகிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருப்பதை பாராட்ட வேண்டும்.
தர்மதாஸ் சசிகுமாரின் மனைவி வசந்தியாக சிம்ரன் நடித்திருக்கிறார். அடக்க ஒடுக்கமாக, புடவை கட்டிய பொறுப்புள்ள குடும்பத் தலைவியாக, இரண்டு மகன்களின் அம்மாவாக அளவோடு நடித்து படம் பார்க்கும் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
சசிகுமார் – சிம்ரன் தம்பதியின் மூத்த மகனாக நடித்திருக்கும் மிதுன் ஜெய்சங்கர் மற்றும் இளைய மகனாக நடித்திருக்கும் கமலேஷ் ஜெகன் இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
மற்றும் யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் (எ) பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலட்சுமி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் ரசிக்கும் ரகம்தான். பின்னணி இசையும் இப்படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
அரவிந்த் விஸ்வநாதன் இலங்கை, ராமேஷ்வரம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கும் சம்பவங்களை தத்ரூபமாக படமாக்கி இருப்பதுடன், அதற்கான காட்சி கோணங்களில் ஒளிப்பதிவில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். தனது முதல் படத்திலேயே இப்படியொரு கதையைத் தேர்வு செய்து, அதற்கு சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து, எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் இப்படியொரு தரமான படைப்பைக் கொடுத்து தமிழ் திரை உலகை உள்ள அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குநரை பாராட்டலாம். தொடர்ந்து இவரைத் தேடி பல படங்கள் வரும் என்பதில் ஐயமில்லை.
மொத்தத்தில், இந்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் அனைவரையும் ரசிக்க வைக்கும்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.