சென்னை:
விஜய்சேதுபதி, ருக்மணி வசந்த், யோகிபாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ்.அவினாஷ் திவ்யா பிள்ளை, முத்துக்குமார், ராஜ்குமார், டெனிஸ் குமார் , ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர் ,ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜே, நகுலன் , ஜாக்கிநாரீஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம்தான் ‘ஏஸ்’. இப்படத்தை கதை எழுதி இயக்கி, தயாரித்து இருக்கிறார் ஆறுமுககுமார் .
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விஜய் சேதுபதி தன் குற்றப் பின்னணியை மறைத்து சிறையில் இருந்து வெளியேறும் அவர் மலேசியாவுக்கு சென்று புதிய வாழ்க்கையை தொடங்க முடிவு செய்கிறார். மலேசியாவுக்கு சென்று பிழைப்பு நடத்தி புதிய வாழ்க்கையை தொடங்கலாம் என்று செல்கிறார். மலேசியாவில் உள்ள ஏர்போர்ட்டில் இந்தியாவிலிருந்து வரவிருக்கும் ஒருவரை வரவேற்க காத்திருந்த யோகி பாபு, தவறாக விஜய் சேதுபதியை தனது இருப்பிடத்திற்கு அழைத்து வருகிறார். தன்னை பணக்காரர் என்று கூறிக் கொண்ட யோகி பாபு விஜய் சேதுபதிக்கு திவ்யா பிள்ளை உணவகத்தில் வேலை வாங்கி கொடுக்கிறார்.
அங்கு பணிபுரிந்து கொண்டிருக்கும்போது கதாநாயகி ருக்மணி வசந்துடன் நட்பு ஏற்படுகிறது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறுகிறது. மலேசியாவில் ஒரு உயர் தர ஜவுளிக்கடையில் பணி செய்து கொண்டிருக்கும் ருக்மணி தனது வளர்ப்பு தந்தையான பப்லு என்ற பிரித்திவிராஜால் ஏற்படும் சில பிரச்சனைகளால் மிகப் பெரிய தொகை கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் காதலிக்கு உதவி செய்ய முயலுகிறார் விஜய் சேதுபதி. தன் காதலி ருக்மணிக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் யோகி பாபுவின் உறவினர் ராஜ்குமார் மூலமாக மலேசியாவில் தாதாவாக வலம் வந்து கொண்டிருக்கும் அவிநாஷிடம் வட்டிக்கு பணத்தை கடன் வாங்க செல்கிறார்.
அவர் கடன் வாங்க சென்ற இடத்தில் சூதாட்டம் நடைபெறுகிறது. அந்த சூதாட்டத்தில் விஜய் சேதுபதி தோற்று ஒரு கோடி ரூபாய் கடனாளி ஆகி விடுகிறார். இந்த சூழ்நிலையில் ஒரு கோடி ரூபாய் கடனை கட்டாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்கிற நிலையில் மலேசியாவில் உள்ள வங்கியில் பணத்தை கொள்ளை அடிப்பதற்கு திட்டம் தீட்டுகிறார். அனைத்து பிரச்சனகளை தீர்க்க வேறு வழி தெரியாமல் வங்கியிலிருந்து பணத்தை கொள்ளையடிக்கிறார் விஜய் சேதுபதி. இந்த சூழலில் வங்கியில் கொள்ளையடித்த பணத்தை மீட்பதற்காக காவல்துறையினர் விஜய்சேதுபதியை தேடுகிறது. இறுதியில் தன்னுடைய கடனை அடைப்பதற்காக வங்கியில் கொள்ளை அடித்த பணத்தின் மூலம் தனது கடனை அடைத்தாரா? தனது காதலி ருக்மணி வசந்தத்தின் பணத்தேவையை பூர்த்தி செய்தாரா? என்பதுதான் ‘ஏஸ்’ படத்தின் மீதி கதை.
விஜய் சேதுபதி தனது இயல்பான நடிப்பு மூலம் போல்ட் கண்ணன் என்ற கதாபாத்திரத்தை ரசிகர்கள் ரசிக்கும்படி மிக சிறப்பாக நேர்த்தியாக நடித்திருக்கிறார். ஸ்டைலிஷான தோற்றம் மட்டுமின்றி காதல்,மோதல்,நகைச்சுவை ஆகிய எல்லா இடங்களிலும் நன்றாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
கதாநாயகி ருக்மணி வசந்த் கதையுடன் இணைந்து மிக சிறப்பான நடிப்பில், கவர்ச்சியாக அழகு பதுமையாக புதுவரவான அவர் நடிப்பிலும் அசத்தி இருக்கிறார்.
யோகி பாபுவின் காமெடி காட்சிகள் அனைவரையும் சிரிக்க வைக்கிறது.
திவ்யா பிள்ளை, வில்லன்களாக நடித்திருக்கும் பப்லு பிரித்விராஜ், பி.எஸ்.அவினாஷ், ராஜ்குமார் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கரண் பி.ராவத், இதுவரை திரைப்படங்களில் காட்டப்படாத மலேசியாவில் உள்ள ஈப்போ, தைப்பிங் போன்ற இடங்களில் உள்ள இயற்கை எழில் மிகுந்த லொக்கேஷன்களை தேடிப்பிடித்து காட்சிப்படுத்தியிருப்பதை பாராட்டலாம்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் இரசிக்கும்படி அமைந்திருக்கின்றன. சாம்.சி.ஏஸ் பின்னணி இசை படத்தின் தன்மைக்கும் பலம் சேர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.
கதை, எழுதி இயக்கியிருக்கிறார் ஆறுமுககுமார். அவர் எடுத்துக் கொண்ட விஷயத்தை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து சொல்ல வேண்டும் என்கிற முனைப்பில் வெற்றி பெற்றிருக்கிறார். வங்கி கொள்ளை கதைகள் பல நாம் பார்த்திருந்தாலும், அவற்றில் இருந்து மாறுபட்டு அனைவரும் ரசிக்கும் விதத்தில் இந்த படத்தை இயக்கி இருப்பதை பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘ஏஸ்’ படத்தை ரசிக்கலாம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.