’பேரன்பும் பெருங்கோபமும்’ – திரைப்பட விமர்சனம்!

99

சென்னை:

ஈ 5 என்டர்டெயின்மென்ட் சார்பில், தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில் இய​க்குநர் தங்கர் பச்சான் வழங்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவப்பிரகாஷ்.

இப்படத்தின் கதையின் நாயகனாக இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஷாலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், சுபத்ரா ராபர்ட், தீபா, கீதா கைலாசம், என்.பி.கே.எஸ்.லோகு, செழியன், வலீனா, ஹரிதா, பவா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வரும் மைம் கோபி , தீபா சங்கர் , அருள் தாஸ் ஆகியோரின் கிராம தலைமையில் கிராம மக்கள் அனைவரும்  ஜாதி வெறி பிடித்து,  வேறு ஜாதியில் உள்ள பெண்ணையோ அல்லது ஆணையோ கலப்பு திருமணம் செய்தால் மேல் ஜாதியினர் அந்த ஜோடிகளை எரித்துக் கொன்று விடுகிறார்கள். இந்த சூழலில் அங்கு பிறந்த விஜித் படிப்பதற்காக கேரளா செல்கிறார். அங்கு தன்னுடன் படிக்கும் ஷாலியை காதலிக்கிறார். ஷாலியின் சகோதரி இறந்து விட்டதால் ஷாலியை மறுமணம் செய்ய துடிக்கிறார் அவரது மாமன். தன் மாமனை மறுமணம் செய்ய பிடிக்காத சூழ்நிலையில் ஒரு நாள் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் விஜித்துடன் ஷாலி ஊரை ஓடிப் போய் இருவரும் திருமணம் செய்துக் கொள்கின்றனர். ஷாலியைதிருமணம் செய்து கொண்டு சென்றால் ஊரில் பிரச்சனை வரும் என்று விஜித் பயந்தாலும், காதலியை மனைவியாக்கி அழைத்துக் கொண்டு ஊருக்கு வருகிறார்.

விஜித்தின் தாயார் ஷாலியை மருமகளாக ஏற்க மறுக்கிறார். பின்னர் அவர் உயர்ஜாதியை சேர்ந்தவர் என்று எண்ணி ஏற்றுக்கொள்கிறார். இந்நிலையில் விஜித் தனது செவிலியர் வேலை விஷயமாக சென்னைக்கு சென்றபோது ஷாலி தழ்த்தப்பட்ட கிறிஸ்துவ பெண் என்று தெரிந்துக் கொள்கிறார். இதனால் வெறுப்படைந்த  மாமியார் சுபத்ரா ராபர்ட்,  ஷாலியை கொலை செய்ய அருள்தாஸுடன்,   இணைந்து செயல்படுகிறார்.  ஷாலி அவர்களிடமிருந்து தப்பித்து ஓடும்போது தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர்.  அந்த  கிராமத்தில் ஊர் தலைவரும், ஜாதி கட்சியின் மந்திரியுமான மைம் கோபி மற்றும் அருள்தாஸ் இருவரும்  ஜாதி வெறியில் கலப்பு திருமணம் செய்த பலரை கொன்றதால், அவர்களை பழி வாங்க துடிக்கிறார் விஜித்.  ஜாதி வெறி பிடித்த அவர்களை எப்படிப்பட்ட முறையில் பழி வாங்கினார் என்பதுதான் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் விஜித் ஐம்பது வயதுக்காரராக அறிமுகம் ஆகிறார்.அதன்பின் அவருடைய இளமைப்பருவக் காட்சிகள் வருகின்றன.இரண்டு பருவங்களிலும் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்கும் திறமை படைத்தவன் என்பதையும் இப்படத்தின் மூலம் உணர்த்தியிருக்கிறார்.

இப்படத்தின் கதாநாயகி ஷாலி நிவேகாஷ் படத்தில் ரசிக்கும் படியாக உள்ளார். தனக்கு கொடுத்த வேலையை மிக நிறைவாக செய்துள்ளார். இறுதிக் காட்சியில் அனைவரையும் கண் கலங்க வைத்து விடுகிறார்.

கதாநாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சுபத்ரா ராபர்ட் , ஜாதி அடிப்படையில் மருமகள் கர்ப்பம் தரித்து இருப்பதை உணராமல் சுய கெளரவத்திற்காக அவர் எடுக்கும் முடிவு படம் பார்க்கும் அனைவரையும் பதற வைக்கிறது.

வில்லன்கள் முத்துப்பாண்டியாக மைம் கோபி, ரத்தினவேலாக அருள்தாஸ், , வீரசக்தியாக என்.பி.கே.எஸ்.லோகு, மாரியம்மாவாக தீபா அனைவரும் மிரளும் விதத்தில் நடிப்பை வழங்கியுள்ளனர். நீதிபதி சரோஜாவாக கீதா கைலாசம், டிஎஸ்பி செழியனாக சாய் வினோத், வள்ளியாக வலீனா, மஞ்சுளா தேவியாக ஹரிதா, எழுத்தாளராக பவா செல்லதுரை ஆகியோர் தங்களுக்கு கொடுத்த பணியை மிக சிறப்பாக செய்து இருக்கின்றனர்.

இளையராஜா இசையில் பாடல்களில் கிராமத்து மணம் கமழ்கிறது. பின்னணி இசை இப்படத்திற்கு பெரும் பலத்தை சேர்த்து இருக்கிறது.

ஜேபி.தினேஷ்குமார் ஒளிப்பதிவில் காட்சிகளில் நேர்த்தியாகவும், தெளிவாகவும் இருப்பதை பாராட்டலாம்.

கதை, எழுதி இயக்கியிருக்கும் சிவபிரகாஷ்,  பிறப்பால் ஜாதி கிடையாது வளர்ப்பால் தான் ஜாதி என்ற ஒரு கருத்தை மையமாக வைத்து, இன்றும் பல கிராமங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆணவக்கொலைகள், மறைமுக ஆதரவு அளித்து அதை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளைப்பற்றி மக்களிடம் பதிவு செய்து இயக்கி இருப்பதை பாராட்டலாம்.

மொத்தத்தில், ‘பேரன்பும் பெருங்கோபமும்’ ஜாதி  வெறியர்கள் பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.