சென்னை:
தனுஷ், நாகார்ஜுனா அக்கினேனி, ராஷ்மிகா மந்தனா, சுனைனா, ஜிம் சர்ப், திலிப் தஹில், சாயாஜி ஷிண்டே, ஹரிஷ் பரேடி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “குபேரா” இப்படத்தை சேகர் கம்முலா இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
இந்தியாவில் உள்ள கடலின் நடுப்பகுதியில் அறிவியல் சார்ந்தவர்கள் எரிவாயு இருப்பதை கண்டுபிடிக்கின்றனர். பல லட்சம் கோடி மதிப்புள்ள அந்த எரிவாயு சம்பந்தப்பட்ட விஷயத்தை அரசாங்கத்திற்கு தெரிவிக்காமல், ஒரு பெரிய கார்ப்பரேட் தொழில் அதிபர் ஆன ஜிம் சர்பிடம் தெரிவிக்கிறார். இந்த விஷயத்தை ஜிம்சர்ப் மத்திய அமைச்சரை ரகசியமாக சந்தித்து கடலில் எரிவாய் இருப்பதை விவரமாக சொல்லி அந்த எண்ணெய் வளத்தை தனக்கு கொடுக்கும்படி கோரிக்கை விடுக்கிறார். இதற்காக அந்த அமைச்சரிடம் ஒரு லட்சம் கோடி கொடுப்பதாக பேரம் பேசப்படுகிறது. அந்த ஒரு லட்சம் கோடியில் 50 ஆயிரம் கோடி கருப்பு பணமாகவும், 50 ஆயிரம் கோடி வெள்ளை பணமாகவும் கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசிய அமைச்சரிடம் ஜிம் சர்ப், அவர் சொல்கின்ற மாதிரி கொடுக்க ஒப்புக் கொள்கிறார்.
இந்த சட்டவிரோத பணப்பரிமாற்றத்தைக் கச்சிதமாக செய்து முடிக்க, செய்யாத குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நேர்மையான முன்னாள் சிபிஐ அதிகாரி நாகார்ஜுனாவின் உதவியை நாடுகிறார் தொழிலதிபர் ஜிம் சர்ப், அந்த 50 ஆயிரம் கோடி கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சி செய்யும்போது, விவரம் அறியாத சில அப்பாவி பிச்சைக்காரர்களைப் பயன்படுத்தலாம் என்று நாகார்ஜுனா யோசனை கூறுகிறார். அதற்காக பிச்சைக்காரர்கள் பெயரில் நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் பண பறிமாற்றத்தை மேற்கொண்டு, வேலை முடிந்ததும் அவர்களை கொலை செய்ய முடிவு செய்கிறார்கள்.. அதன்படி, திருப்பதியில் பிச்சை எடுக்கும் தனுஷ் உள்ளிட்ட நான்கு பேரை தேர்வு செய்கிறார்கள். இந்த நான்கு பிச்சைக்காரர்களையும் பணக்காரர்கள் போன்ற பொலிவான தோற்றத்துக்கு மாற்றி, நாகரிகப் பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளும் விதமாக பயிற்சி கொடுக்கிறார்கள்.
அதன் பிறகு அவர்களது பெயரில் சில போலியான நிறுவனங்களை உருவாக்கி அதில் கருப்பு பணத்தை முதலீடு செய்து வெள்ளை பணமாக மாற்றுகிறார்கள். பணம் அமைச்சருக்கு கை மாறியவுடன் அந்த பிச்சைக்காரர்களில் இருவரை கொலை செய்து விடுகிறார்கள். மூன்றாவது நபரான கர்ப்பிணிப் பெண் குஷ்பு என்கிற பிச்சைக்காரரை கொலை செய்ய முயற்சி நடக்கிறது. ஆனால் அவரை கொலை செய்ய முடியாமல் போக, அவர் என்ன ஆனார் என்றே தெரியாமல் மாயமாகிவிட, நான்காவது நபரான தனுஷிற்கு இரண்டு கொலைகள் செய்த விவரம் தெரிந்து, தொழிலதிபர் ஜிம் சர்ப்பின் ஆட்களின் பிடியிலிருந்து தப்பி ஓடிவிடுகிறார்.
இதற்கிடையில் ஊரைவிட்டு ஓடிப்போகலாம் என ரயில் நிலையத்துக்கு வரச் சொன்ன காதலன் வராமல் ஏமாற்றிவிட்டதால், செய்வதறியாமல் நாயகி ராஷ்மிகா மந்தனா தவித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு தனுஷ் ஓடி வந்த களைப்பால் மயக்கமடைந்து கீழே விழுந்து விடுகிறார். அப்போது ராஷ்மிகா மந்தனா தனுஷின் முகத்தில் தண்ணீர் தெளித்து உதவி செய்ய போய், அவரும் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார். தொழிலதிபர் ஜிம் சர்ப்பின் ஆட்களின் பிடியிலிருந்து இருவரும் தப்பித்து உயிருக்கு பயந்து ஓடுகிறார்கள். அதன் பிறகு தனுஷும், ராஷ்மிகா மந்தனாவும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் “குபேரா” படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனாக தனுஷ் நடித்திருக்கிறார். கதாநாயகன் என்ற பிம்பதை தாண்டி, தேவா என்ற கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்திருக்கிறார். பிச்சைக்காரர் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது தோற்றத்தில் மட்டுமின்றி உடல்மொழியிலும் நியாயம் சேர்த்து நடிப்பில் அசத்தி இருக்கிறார். படத்தின் தொடக்கம் முதல் கடைசி கட்ட காட்சி வரை பிச்சைக்காரன் கதாபாத்திரத்தை எந்த வகையிலும் மாசு படுத்தாமல், அதுவும் சினிமாத்தனமாக மாற்றாமல் யதார்த்த மனிதனாக தனுஷ் வாழ்ந்து காட்டி இருப்பது பாராட்டத்தக்கது. இப்படியும் நடிக்க முடியுமா என்று வியக்கும் அளவுக்கு தனுஷ் ஒவ்வொரு காட்சியிலும் அபாரமாக நடித்து, படம் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறார்.
முன்னாள் சிபிஐ அதிகாரி தீபக்காக நாகார்ஜுனா நடித்திருக்கிறார். நியாயமற்ற முறையில் நடக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் செய்யும் செயல்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன.
கதாநாயகியாக நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கு அழகை வெளிப்படுத்துவதுடன் நடிப்பையும் வெளிப்படுத்தக் கூடிய நல்ல கதாபாத்திரம்.அதைச் சரியாக உணர்ந்து நடிப்பை கொடுத்திருக்கிறார்.
ஸ்டைலிஷ் வில்லனாக நடித்திருக்கும் ஜிம் சர்ப், வட இந்திய பிரபலங்களை நினைவுபடுத்தும் விதத்தில் நடிப்பில் மிரட்டுகிறார். அவரது தோற்றம் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு கச்சிதமாக பொருந்தி இருப்பது பாராட்டத்தக்கது.
சுனைனா, ஜெயப்பிரகாஷ், சாயாஜி ஷிண்டே, பாக்யராஜ் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதை களத்திற்கு க்கு பலம் சேர்க்கும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை மூன்று மணி நேரம் படத்தில் வரும் காட்சிகளை வெறுப்படைய வைக்காமல் பார்க்க முடிகிறது. “போய் வா நண்பா” பாடலில் தனது முத்திரை பதித்து விடுகிறார்.
நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு படத்திற்க்கு பலம் சேர்த்திருக்கிறது. காட்சிகள் மட்டும் இன்றி கதாபாத்திரங்களை பார்வையாளர்கள் மனதில் பதிய வைப்பதிலும் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்.
பணக்காரர்கள் எப்படி எல்லாம் தங்களது பினாமிகளை உருவாக்குகிறார்கள், போலியாக பல நிறுவனங்களை உருவாக்கி எப்படி சட்டவிராத பண பரிமாற்றம் செய்கிறார்கள் என்பதை ரசிகர்களுக்கு புரிகின்ற விதத்தில் படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் சேகர் கமுலா. இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று ஆச்சரியமாக பார்க்கும் வகையிலான செய்திகளைச் சொல்லி இந்த படத்தை இயக்கி இருப்பதை பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘குபேரா’ படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 4/5.
RADHAPANDIAN.