’மார்கன்’ திரைப்பட விமர்சனம்!

140

சென்னை:

விஜய் ஆண்டனி, அஜய் தீஷன், மகாநதி சங்கர், சமுத்திரகனி, ராமசந்திரன், பிரிகிடா, தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி, வினோத் சாகர், நடராஜ், அருண் ராகவ், கதிர், ராஜாராம், அபிஷேக், நிஹாரிகா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “மார்கன்” சமீபத்தில் வெளி வந்து ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை லியோ ஜான் பால் இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

சென்னையில், ஒரு இரவில் தன் ஆண் நண்பருடன் வந்த அழகிய பெண், தனியே நடந்து செல்லும்போது ஒரு மர்ம நபர், அந்த அழகிய பெண்ணை பின் தொடர்ந்து அவரது உடம்பில் கொடிய ரசாயனம் கலந்த ஒரு விஷ ஊசியை செலுத்தி,  முழு உருவத்தையும் கன்னங்கரேலென கருப்பு நிறத்துக்கு மாற்றி, உயிரிழக்கச் செய்து, பின்னர் அச்சடலத்தை குப்பைத் தொட்டிக்குள் தூக்கிப் போட்டுவிட்டு செல்கிறார். சென்னையில் நடக்கும் இதைப் போன்றே மும்பையிலும் ஒரு கொலை நடக்கிறது. இதனால் நாடு முழுதும் இந்த கொலையைப்பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. மும்பையைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை உயர் அதிகாரி விஜய் ஆண்டனி, அந்தப் பெண் கொலை செய்யப்பட்டவுடன் கருப்பு நிறமாகி விடும் சென்னைச் செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். இதற்கு முன் அவரது  மகளும் இதே மாதிரி மர்மமான முறையில், கரிக்கட்டை போல் கருப்பாக்கி கொல்லப்பட்டு, குப்பைக் குவியலுக்குள் பிணமாகப் போடப்பட்டிருந்ததை நினைவு கூர்ந்து தனிப்பட்ட முறையில் இந்த வழக்கை விசாரிப்பதற்காக சென்னைக்கு வருகிறார். தனது மகளைப் போல வேறு யாரும் பலியாகக் கூடாது என்று எண்ணி தீவிர விசாரணையில் இறங்குகிறார்.

விஜய் ஆண்டனியைப்பற்றி நன்கு அறிந்த இங்குள்ள காவல்துறை உயர் அதிகாரி சமுத்திரக்கனி,  இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பை விஜய் ஆண்டனியிடம் ஒப்படைப்பதோடு, புலனாய்வில் அவருக்கு உதவுமாறு பெண் காவல்துறை ஆய்வாளர் பிரிகிடாவை நியமிக்கிறார். விசாரணையை தொடங்கும் விஜய் ஆண்டனி, தனக்கு கிடைக்கும் தடயங்கள் மூலம் அஜய் தீசனை தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார். ஆனால் அஜய் தீசனின் விசித்திர செயல்களுக்கு இடையே, எவருக்கும் இல்லாத அபார ஞாபக சக்தியும், நம்பவே முடியாத தனித்துவமான சில திறமைகளும் இருப்பது தெரியவருகிறது. இந்த சூழ்நிலையில் மறுபக்கம் அதே பாணியில் மற்றொரு பெண் கொலை செய்யப்படுகிறார்.  ஒரு கட்டத்தில்,  அஜய் தீசன் கொலையாளி இல்லை என்ற முடிவுக்கு வரும் விஜய் ஆண்டனி, உண்மையான குற்றவாளி யார் என்பதை அஜய் தீசனின் அபார ஞாபக சக்தியையும், அவரது தனித்துவமான திறமைகளையும் பயன்படுத்தி கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். அந்த முயற்சியில் விஜய் ஆண்டனி, மாறுபட்ட முறையில் கொலை செய்யும் கொலையாளி  யார்? என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா/ என்பதுதான் “மார்கன்” படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக, கொலையாளியைப் பிடிக்க புலனாய்வு செய்யும் முன்னாள் காவல்துறை அதிகாரி துருவ் கதாபாத்திரத்தில்  விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். அவரது கன்னத்தில்  ஒருபக்கம் முகம் கை எல்லாம் கறுத்துப்போனவராக வருகிறார் விஜய் ஆண்டனி. இந்தக் கதைக்கு தகுந்தவாறு மையக் கதையைப் பிரதிபலிக்கும் தோற்றம் என்பதால், அதே மாதிரி கருப்பு தோற்றத்துடன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக சிறப்பாக நடித்து இருக்கிறார்.

அறிமுக நடிகர் அஜய் தீசன், தன்னுடைய நடிப்பை  நிரூபிப்பதற்காகவே அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது போல் இருக்கிறது. அவரும் நடிப்பு, ஆக்‌ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என அனைத்து விஷயங்களிலும் முக்கியமாக சிறந்த நடிப்பும் தனக்கு வரும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்.

சமுத்திரக்கனி, பிரிகிடா, மகாநதி சங்கர், ராமச்சந்திரன், தீப்ஷிகா, அர்ச்சனா, கனிமொழி, வினோத் சாகர், நடராஜ், அருண் ராகவ், கதிர், ராஜாராம், அபிஷேக், நிஹாரிகா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் கதை களத்திற்க்கு பலம் சேர்க்கும் வகையில் மிக சிறப்பாக  பயணித்திருக்கிறார்கள்.

எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.கதைக்களத்துக்குப் பலம் சேர்க்கும் வண்ணம் ஒளியமைப்பு செய்திருப்பது காட்சிகளுக்கு அழகு சேர்த்திருக்கிறது.

இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கிறார். அவருடைய் ஈடுபாடு பின்னணி இசையில் திறமையாக வெளிப்படுத்தி இருப்பதை பாராட்டலாம்.

கதை எழுதி இயக்கியிருக்கும் லியோ ஜான்பால் அடிப்படையில் படத்தொகுப்பாளர் என்பதால் காட்சிகளை மிக அருமையாக தொகுத்து ஒவ்வொரு காட்சியிலும் சஸ்பென்ஸ் த்ரில் என்று பயணித்தாலும் கொலையாளி யார் என்பதை யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைத்திருப்பது பாராட்டத்தக்கது. இந்தப் படத்தில் ஆமை மற்றும் ஆந்தை முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. பொதுவாக ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது என ஊரில் உள்ளவர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால் அதைப்ப்ற்றி எல்லாம் கவலைப் படாமல் இந்தப் படத்தை வெற்றிப் பாதையை நோக்கி சென்று இருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில், ‘மார்கன்’  புதுமையானவன்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.