சென்னை:
விஜயசேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், தேவதர்ஷினி, முத்துகுமார், திலீபன், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன், மூணார் ரமேஷ், ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அபி நட்சத்திரா, வர்ஷா விஸ்வநாத், நவீன், ரோகித், மது வசந்த், கிஷோர், ரிஹான், பிரசாந்த், ரிஷி, நந்தா சரவணன், ஆடுகளம் முருகதாஸ், ஆடுகளம் நரேன், ஸ்ரீஜித் ரவி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘பீனிக்ஸ்’ . இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, சண்டைப்பயிற்சி பொறுப்பையும் ஏற்று இயக்கி இருக்கிறார் அனல் அரசு.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி இப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகியிருக்கிறார். முதல் படத்திலேயே ஆக்ஷன், அதிரடி கண்டைக் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார் சூர்யா சேதுபதி. வடசென்னை பகுதியில் தாய் மற்றும் அண்ணனுடன் வசிக்கும் 17 வயதான சூர்யா சேதுபதி தனது அண்ணனை கொலை செய்த அந்த பகுதி சட்டமன்ற உறுப்பினரை பட்டப்பகலில் படுகொலை செய்கிறார். அவரை கைது செய்யும் காவல்துறை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கிறார்கள். சாதாரண ஆட்களைக் கொலை செய்தாலே பழிவாங்கப் புறப்படும் சூழலில் சட்டமன்ற உறுப்பினர் என்றால் கேட்கவேண்டுமா? கணவரை கொலை செய்த சூர்யா சேதுபதியை கொலை செய்ய துடிக்கும் சட்டமன்ற உறுப்பினரின் மனைவி வரலட்சுமி சரத்குமார், சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் வைத்து அவரை கொலை செய்ய திட்டமிடுகிறார்.
அவரை கொல்வதற்கு கூட்டம் கூட்டமாக கூலிப்படையும, ரவுடி பட்டாளமும் ஆயுதங்களுடன் வருகிறது. அவர்களை தனி ஆளாக நின்று அடித்து துவம்சம் செய்து தவிடு பொடியாக்குகிறார் சூர்யா சேதுபதி. தன்னை எப்படியாவது கொலை செய்யும் நோக்கத்துடன் திரியும் கொலையாளிகளிடமிருந்து, ஒவ்வொரு முறையும் பீனிக்ஸ் பறவை போல மீண்டும் மீண்டும் உயிர்பிக்கும் சூர்யா சேதுபதி கொலைகாரா கூட்டத்தின் சதி திட்டத்தை அறிந்து அவர்களை பெரிய அளவில் அடித்து நொறுக்க தயாராகிறார்.இந்த சூழ்நிலையில் ஒரு சட்டமன்ற உறுப்பினரை கொலை செய்த காரணத்தை சூர்யா சேதுபதி நிரூபித்தாரா? கொலை செய்ய துடிக்கும் கொலையாளிகளிடமிருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் “பீனிக்ஸ்” படத்தின் மீதிக் கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் சூர்யா சேதுபதி, முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டு, தந்தை விஜய சேதுபதியை மிஞ்சும் அளவுக்கு தனது நடிப்பு திறமையை அனைவரும் ரசிக்கும் விதத்தில் வெளிப்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார். அனுபவம் வாய்ந்த நடிகர்களே தடுமாறும் ஆபத்தான சண்டைக்காட்சிகளில் நடித்திருப்பது, அவர் இதற்காக எவ்வளவு பயிற்சி எடுத்திருக்கிறார் என்பது உண்மையாகவே வெளியே தெரிகிறது. அண்ணனின் கொலைக்கு பழி தீர்ப்பதற்காக காட்டும் அதிரடி மற்றும் அதைச்சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளும் காட்சிகளில் அசத்தி இருக்கிறார். இப்படத்திற்கு பிறகு சூர்யா சேதுபதியைத் தேடி பல படங்கள் வரும் என்பதில் ஐயமில்லை.
சட்டமன்ற உறுப்பினராக நடித்து கொலை செய்யப்படும் கதாபாத்திரத்தில் சம்பத்ராஜ் நடித்திருக்கிறார்.அவரை விட அவர் மனைவியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமாருக்கு அதிக வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். அதற்கேற்றவாறு தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பில் அனைவரையும் கவர்கிறார்.
கதாநாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, அண்ணனாக நடித்திருக்கும் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அபி நட்சத்திரா, வர்ஷா, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூணாறு ரவி, நவீன், காயத்ரி, அட்டி ரிஷி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதைக்கு பலம் சேர்க்கும் விதத்தில் நடித்திருக்கிறார்கள்.
ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.அவருடைய அனுபவ உழைப்பினால் இந்தப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சியமைப்புகளை நேர்த்தியாக படமாக்கி இருப்பதை பாராட்டலாம்.
சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். பின்னணி இசையில் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் கொடுத்திருப்பவர், ஒரு ஆக்ஷன் கதாநாயகனுக்கு ஏற்றவாறு அதிரடியாக இசை அமைத்து இருப்பதை பாராட்டலாம்.
கதை, எழுதி இயக்கியிருக்கும் அனல் அரசு, தன் பெயரைப் போலவே படத்திலும் அனல் பறக்க வேண்டும் என்று நினைத்து கடுமையாக உழைத்திருக்கிறார். இப்படத்தை எல்லோரும் கொண்டாடும் விதத்தில் கமர்ஷியல் எண்டர்டெயிண்மெண்ட் படமாக வழங்கியிருக்கிறார். இப்படம் முழுவதும் சண்டையும், கொலையும் இருந்தாலும், தான் சொல்ல வந்ததை மிக சுருக்கமாகவும், வேகமாகவும் சொல்லி ஆக்சன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்.
மொத்தத்தில், ‘பீனிக்ஸ்’ ஆக்ஷன் ரசிகர்களுக்கு விருந்து.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.