“3 பிஎச்கே” – திரைப்பட விமர்சனம்!

189

சென்னை:

சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா, ஐஸ்வர்யா, சுப்பு பஞ்சு, ரமேஷ் வைத்யா, விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “3 பிஎஸ்கே”. இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ஸ்ரீ கணேஷ்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

வாடகை வீட்டில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தினரின் சொந்த வீட்டுக்கனவு மற்றும் அதை அடைவதற்கான அவர்களின் போராட்டம் ஆகியனவற்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் அமைந்திருக்கிறது. ஒரு நடுத்தர வர்க்கத்தில் வாழ்ந்து வரும் சரத்குமார், தன் மனைவி தேவயானி, மகன் சித்தார்த், மகள் மீத்தாரகுநாத் ஆகியோருடன் தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். வாடகை வீட்டில் வசிக்கும் அவர் எப்படியாவது ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து வைக்கிறார் சரத்குமார். அதே சமயம் தன்னுடைய மகன் சித்தார்த்தையும் மகள்  மீத்தா ரகுநாத்தையும் நன்றாக படிக்க வைத்து பெரிய அளவில் கொண்டு வரவேண்டும் விரும்புகிறார்.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பணத்தை சேமித்தாலும் ஏதோ ஒரு விதத்தில் அவருடைய பணம் செலவாகி விடுகிறது. இந்த சூழ்நிலையில் தனது மகன் சித்தார்த் படிப்பு முடித்ததும் நல்ல பணியில் சேர வற்புறுத்துகிறார். தன் மகன் மூலம் ஒரு சொந்த வீடு வாங்குவதற்காக பலவித திட்டங்களையும் தீட்டுகிறார் சரத்குமார்.  ஆனால், அவரது மகன் சித்தார்த், படிப்பு மற்றும் பணி இரண்டிலும் சாதிக்க கூடிய அளவுக்கு முன்னேற்றம் இல்லாமல் சராசரி மனிதராக இருப்பதால், தந்தையின் நம்பிக்கையை காப்பாற்ற முடியாமல் திணறுகிறார். இந்த சூழ்நிலையில் தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார் சரத்குமார்.  திருமணமும் சிறப்பாக நடைபெற்று பல லட்சக்கணங்கள் பணம் செலவாகிறது. அதன் பிறகு சரத்குமார் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இந்த சூழ்நிலையில் சித்தார்த் தன் தந்தையின் கனவை நிறைவேற்றி சொந்த வீடு வாங்கினாரா? இல்லையா? என்பதுதான் “3 பிஎஸ்கே” படத்தின் மீதி கதை.

ஒரு  நடுத்தர வர்க்கத்து மனிதனாகவே மிக பொறுமையாக நடித்திருக்கிறார் சரத்குமார். இதுவரையில் அவர் நடித்த படங்களில் நீங்கள் பார்க்காத ஒரு சரத்குமாரை இந்தப் படத்தில் பார்க்க முடியாது. பல காட்சிகளில் சோகமாகவே நடித்திருப்பது, அவரது கதாபாத்திரத்தை செயற்கைத் தனமாக பலவீனப்படுத்துகின்ற மாதிரி இருக்கிறது.  படம் நெடுகிலும் அமைதியான, அடக்கமான, அமைதியின் திருவருவமாகவே வலம் வந்து ரசிகர்களுக்கு ஒரு மாற்றத்தை கொடுத்திருக்கிறார் சரத்குமார். 

சரத்குமாரின் மகனாக நடித்திருக்கும் சித்தார்த், குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும்போது ஏற்படும் ஏக்கத்தையும், தொடர் தோல்வியால் துவண்டு போவதையும் தனது நடிப்பில் நேர்த்தியாக படத்தின் பெரும்பாலான காட்சிகளை தானே சுமந்து இருக்கிறார். பிளஸ் டூ படிக்கும் மாணவர். அதற்கு பிறகு கல்லூரி மாணவர். அதற்கு பிறகு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் இளைஞர். பின்பு ஒரு பொறுப்பான கணவன் என்று பல்வேறு பரிணாமங்களை தன்னுடைய நடிப்பில் மிக சிறப்பாக காட்டி அசத்தி  இருக்கிறார் சித்தார்த்.

சரத்குமாருக்கு மனைவியாக கொஞ்சமும் குறைவில்லாமல் ஒரு அமைதியான குடும்பத் தலைவியாக அதிகம் வசனம் இல்லை என்றாலும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து மிக சிறப்பாக  நடித்திருக்கிறார்  தேவயானி.

சரத்குமார் மகளாக வரும் மீத்தா ரகுநாத் தன் திருமண வாழ்க்கை பாழாகிப் போய்விட்டது என்று  சொல்லி கதறும் போது அரங்கை அமைதியாக்கி விடுகிறார். சித்தார்த் ஜோடியாக வரும் சைத்ராவுக்கு ஒரு நிறைவான கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். யோகி பாபு ஒரு சில காட்சிகளில் வந்தாலும் சிரிக்க வைத்து செல்கிறார்.

அம்ரித் ராம்நாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். பின்னணி இசையை கதாபாத்திரங்களுக்கு தகுந்தவாறு வெகு இயல்பாக அமைத்து இருப்பதை பாராட்டலாம்.

தினேஷ் கிருஷ்ணன்.பி மற்றும் ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் ஆகிய இருவர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த குறுகிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி நிறைவான காட்சிகளை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்கள்.

ஸ்ரீகணேஷ் கதை, எழுதி இயக்கியிருக்கிறார். சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதார ரீதியிலானஅவதிகளையும்,  முன்னேற்றத்தின் பயணத்திற்காக எதிர்கால வாழ்க்கையை நினைத்து, நிகழ்கால வாழ்க்கையை வாழாமல் இருப்பது தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் செயல்களையும் மிக யதார்த்தமாக ஸ்ரீகணேஷ் இயக்கி இருப்பதை பாராட்டலாம்.

மொத்தத்தில், ’3 பிஎச்கே’ படம் சொந்த வீடு வாங்க நினைப்பவர்கள் பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.