’தலைவன் தலைவி’ திரைப்பட விமர்சனம்!

91

சென்னை:

விஜய் சேதுபதி,  நித்யா மேனன்,  யோகி பாபு, செம்பன், சரவணன், ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட்,
மைனா நந்தினி, தீபா சங்கர், ஜானகி சுரேஷ், அருள்தாஸ், வினோத் சாகர்,ரோஷிணி, முத்துக்குமார், சென்ராயன், கிச்சா ரவி, ரோஹன், ஆதித்ய கதிர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான்  ‘தலைவன் தலைவி’. இந்தப் படத்தை  எழுதி, இயக்கி இருக்கிறார் பாண்டிராஜ்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாலை ஓரத்தில் அசைவ ஹோட்டல் ஒன்றை குடும்பத்தினருடன் நடத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்த சூழலில் அவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.  அந்த வகையில் மேலூர் அருகே இருக்கும் வயநாட்டில் வசிக்கும் நித்யா மேனனை பெண் பார்க்கும்போது  விஜய் சேதுபதிக்கு நித்யா மேனனை பிடித்து விட பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயம் செய்கிறார்கள். ஆனால் ஒரு சில நாட்களில்  விஜய் சேதுபதியின் தம்பி, மற்றும் தந்தை அனைவரும் ரவுடிகள் என்று  நித்யா மேனனின் பெற்றோர்களுக்கு தெரியவர, ​​உடனே  இந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்கின்றனர். அதே போல ​விஜய சேதுபதியின்  தாய் தீபா சங்கர்  பெண்ணின் ஜாதகத்தை பார்க்கும்போது நித்யா மேனன் மருமகளாக வந்தால் குடும்பத்தை பிரித்து விடுவாள் என்று ஜோசியர் சொல்ல, அதனால்  அதிச்சியடைந்த விஜய சேதுபதியின் பெற்றோர் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று முடிவு செய்கிறார்கள். 

இதனால் கோபமடைந்த விஜய சேதுபதி , நித்யா மேனனின் வீட்டிற்கு சென்று, அவரது பெற்றோர்களிடம் சண்டையிட்டு நித்யா மேனனை அழைத்துச் சென்று, இரு குடும்பத்தினர்கள் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொள்கிறார். விஜய் சேதுபதி – நித்யா மேனன் இருவரும் திருமணம் செய்த பிறகு இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கிய சில மாதங்களிலேயே, இருவருக்கும் இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது. அதனால் கோபமடையும் நித்யா மேனன் அடிக்கடி தன்னுடைய தாய் வீட்டுக்கு செல்வதும், விஜய் சேதுபதி பின்னாலே சென்று சமாதானம் செய்து அழைத்து வருவதும் வாடிக்கையாகவே இருக்கிறது. இதற்கிடையில் விஜய் சேதுபதியின் தாய்  தீபா ஷங்கரும், தங்கை ரோஷிணியும் சேர்ந்து, அவர்கள் நடத்தும் ஹோட்டலில் எல்லா வேலையும் நித்யா மேனனை செய்ய வைத்து கிண்டலும்,கேலி செய்து அவமானப்படுத்துகின்றனர்.

தன்னுடைய தாய், தங்கையை கண்டிக்க முடியாமல் திணறும் விஜய் சேதுபதி இந்தப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று புரியாமல் தவிக்கிறார். இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் குடும்பத்தில் நடக்கும் பெரிய சண்டையில்  கோபித்துக் கொண்டு குழந்தை மகிழினியுடன் தாய் வீட்டிற்கு சென்று விடுகிறார் நித்யா னேனன்.  இதை காரணமாக வைத்து இரண்டு குடும்பத்தாரும் இருவரையும் பிரித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். இருவரும் மூன்று மாதங்கள் பிரிந்துள்ள இந்த நேரத்தில் திடீரென்று விஜய் சேதுபதியின் கை குழந்தைக்கு மொட்டை அடிக்கலாம் என்று விஜய் சேதுபதியின் குலதெய்வ கோவிலுக்கு நித்யாமேனனின் தந்தை அழைத்து வருகிறார். இந்த விஷயம் விஜய் சேதுபதிக்கு தெரிந்து விட, உடனே அவர் குலதெய்வ கோவிலுக்கு ஓடி வந்து இவர்களிடம் சண்டை போடுகிறார். அந்த கோவிலுக்கு வந்த சொந்த பந்தங்களும், மற்ற ஊர் மக்களும் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்ய, அவர்களது வாய்ச்சண்டை முற்றி பெரிய மோதலில் முடிகிறது. இந்த மோதலில் இருவரது குடும்பமும்  சமாதானமாகி பாதியில் நின்ற குழந்தையின் மொட்டை அடிக்கும் விழாவை மீண்டும் சிறப்பாக நடத்தினார்களா? இல்லையா? என்பதுதான் ‘ ‘தலைவன் தலைவி’ படத்தின் மீதிக் கதை.

ஆகாச வீரன் என்ற கதாபாத்திரத்தில் உன்னதமான பாசமான கணவராகவும், அம்மா மீது அக்கறையுள்ள ஒரு மகனாகவும் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, தனது தனித்துவமான நடிப்பு மூலம் அனைவரையும் கவர்கிறார். எதையும் கத்தி கத்தி பேசும் நடிப்பு சில காட்சிகளில் போரடிக்க செய்கிறது. தன்னுடைய பாசத்தை எப்படி அமைதியாக காட்ட வேண்டும் என்பதை முழுமையாக அறியாதவராக அப்பாவித்தனமாக நடிக்கும்போது நமக்கே வேதனை ஏற்படுகிறது. அந்த கதாபாத்திரத்திற்கு தகுந்தவாறு தன்னை தயார்படுத்திக் கொண்டு பேச்சு, உடல் மொழி மூலம்  சிறந்த முறையில் நடித்து வாழ்ந்து இருக்கிறார்.

விஜய சேதுபதிக்கு இணையாக மிகச் உன்னதமான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார் நித்யா மேனன். பேரரசி என்ற அந்தக் கதாபாத்திரத்தை அவர் தாங்கி பிடித்து ஒரு உண்மையான மருமகளாகவே நடித்து அசத்தி இருக்கிறார். கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு தாய் வீட்டிற்கு செல்லும் நித்யாவுக்கு, விஜய சேதுபதியின் பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் காட்சிகளில் தத்ரூபமாகவும், மிக அற்புதமாகவும்  நடித்து கைத்தட்டல் பெறுகிறார். 

சித்திரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, தன்னுடைய காமெடி நடிப்பால், அமைதியான முறையில் வசனம் பேசி படம் பார்க்கும் அனைவரையும்  சிரிக்க வைக்கிறார்.

விஜய சேதுபதியின் பெற்றோர்களாக நடித்திருக்கும் சரவணன் – தீபா சங்கர், நித்யா மேனனின் பெற்றோர்களாக நடித்திருக்கும் செம்பன் வினோத் – ஜானகி சுரேஷ் மற்றும் ஆர்.கே.சுரேஷ், காளி வெங்கட், மைனா நந்தினி, வினோத் சாகர், ரோஷிணி, செண்ட்ராயன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை வழக்கமான நடிப்பு மூலம் இப்படத்திற்கு  பலம் சேர்த்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணின் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தான். பின்னணி இசையிலும், படத்தின் வெற்றிக்கு உறுதுணையாய் இருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

எம் சுகுமாரின் ஒளிப்பதிவு படத்தை வண்ணமயமாக்கி சண்டைக் காட்சியிலும், கோவில் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும்  மிக அழகாக படமாக்கி பாராட்டு பெறுகிறார் சுகுமார். 

யக்குநர் பாண்டிராஜ் தான் இயக்கும் அனைத்து படங்களிலுமே குடும்பங்களில் எந்த சண்டையும்  இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதன் மூலமாக இப்போதுள்ள இளம் தலைமுறையினர் அவர்களது வாழ்க்கையை புரிந்து கொண்டு, விவாக ரத்து போன்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம் என்கின்ற ஒரு படிப்பினையை இந்த படம் கற்றுக் கொடுத்து இருப்பதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். ஒரு கணவன் – மனைவி இடையே ஏற்படும் பிரச்சனைகளை, இருவரும் மனம் விட்டு பேசினாலே தீர்ந்துவிடும் என்பதை இந்த படம் மூலமாக சொல்லி அனைத்து குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை தெளிவாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

மொத்தத்தில், ‘தலைவன் தலைவி’ படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்.

ரேட்டிங்-3/5.

RADHAPANDIAN.