சென்னை:
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் வழங்கும், க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஷில்பா தவான் – குஷால் தேசாய்- சைதன்யா தேசாய் தயாரித்திருக்கும் மகா அவதார் நரசிம்ஹா அனிமேஷன் படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் அஸ்வின் குமார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
1967 ஆம் ஆண்டு வெளி வந்த ‘பக்த பிரகலாதா’ என்ற படத்தில் ரோஜாரமணி பிரகலாதனாகவும், எஸ்.வி.ரங்காராவ் இரண்யனாகவும், அஞ்சலி தேவி அவரது மனைவியாகவும் நடித்து மாபெரும் வெற்றி பெற்றது. அதே புராண கதையை ஆழமான ஆனாலும் குழந்தைகள் ரசிக்கும் வகையில் அனிமேஷன் செய்து அழகாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு படம் தான் இந்த ’மகா அவதார் நரசிம்மா’
விஷ்ணுவின் தீவிர பக்தரான சிறுவன் பிரகலாதனின் கதையும், பிரகலாதனின் பக்தியால் பரவசமடைந்த விஷ்ணு, நரசிம்மர் அவதாரம் எடுத்து அசுரன் இரண்யகசுபுவை அழித்ததை அனைவரும் பிரமிப்பூட்டும் சிஜி தொழில்நுட்பத்தில் கண்களுக்கு விருந்து படைக்கும் காவியமாக கொடுத்துள்ளனர்.
மகரிஷி முனிவர் காஷ்யப்பரின் பதிமூன்று மனைவிகளில் ஒருவரான இளம்வயது மனைவி திதி, மாலை வேளையில் கண்களை மூடிக் கொண்டு தவம் செய்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கணவனின் வழிபாட்டை நிறுத்தி தனது காம இச்சைக்கு இணங்க வைக்கிறார். தனது மனைவியின் காம பசியை போக்கிய காஷ்யப், தன் மனைவி செய்த தவறால் தீங்கு உண்டாகும் அசுர சந்ததிகள் உருவாகும் என்று எச்சரிக்கை விடுத்தும் அதை புறக்கணித்ததால் திதிக்கு அசுர குழந்தைகள் ஹிரண்யாக்ஷன் மற்றும் ஹிரன்யகஷிபு பிறக்கின்றனர். விஷ்ணுவை வதம் செய்யவதற்காக சுக்ராச்சாரியாரால் பயிற்சி பெற்று இரக்கமற்ற அசுரர்களாக வளர்ந்து பல அட்டூழியங்கள் செய்து தேவர்கள், முனிவர்கள் மற்றும் எளிய மக்களை கொதிப்படைய செய்கின்றனர். இந்த சூழ்நிலையில் கடவுள் விஷ்ணுவை எதிரியாகக் கருதி தேவலோகத்தையே அச்சுறுத்தும் இவர்களில், இரண்யாட்ஷனை கொன்றே தீர வேண்டும் என்று வராக அவதாரம் எடுத்து வதம் செய்கிறார் விஷ்ணு.
இதனால், சகோதரனை இழந்த ஹிரண்யகசிபு என்ன செய்வதென்று தெரியாமல் விஷ்ணு மீது கோபமும். வெறுப்பும் ஏற்படுகிறது. விஷ்ணுவை தன்னால் அழிக்க முடியாது என்ற காரணத்தால், ஐந்து வருடம் கடும் தவமிருந்து பிரம்மாவின் அருள் பெற்று மனிதன், மிருகம், பகல் அல்லது இரவு, அரண்மனைக்கு உள்ளே வெளியே என எந்த சூழலிலும் மரணம் வராத அளவிற்கு அழியா வரம் பெறுகிறார் ஹிரண்யகசிபு. இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த ஹிரண்யகசிபு. சக்திவாய்ந்த சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்பி, யாராலும் தன்னை அழிக்க முடியாத வரம் பெற்றவனாக மாற்றப்படுகிறார்.
ஆனால், அவருக்கு பிறந்த மகன் பிரகலாதன், தனது ஐந்து வயதில் தினமும் விஷ்ணுவை கடவுளாக வழிபடுகிறான். இதனால் கோபமடைந்த ஹிரன்யகஷிபு மகன் பிரகலாதனின் மனதை பலமுறை மாற்ற முயன்றும் முடியாத காரணத்தால் அவனை கொல்ல பல முயற்சிகள் செய்தும் அதில் தோற்று போகிறார். ஆனால், விஷ்ணுவின் அருளால் பிரகலாதனுக்கு ஒரு தீங்கும் நடக்காமல் அந்த கொலைகளிலிருந்து தப்பித்து விடுகிறார். பிரகலாதனை தொடர்ந்து கொலை செய்யும் முயற்சிகளை விஷ்ணு பகவான் முறியடிக்க, இறுதியில் சிங்க முக நரசிம்ம அவதாரத்தில் தோன்றி இரண்யகசுபுவை வதம் செய்கிறார் விஷ்ணு.
அனிமேஷன் தரம், இசை அமைப்பு, வசன உச்சரிப்பு அனைத்தும் அழுத்தமான தரத்தில் இருக்கின்றன. குழந்தைகளும் மாணவர்களும் புராணங்களை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இந்த படத்தை அமைத்திருப்பது பாராட்டத்தக்கது.
ஜெயபூர்ணா தாஸ் எழுதிய கதைக்கு படத்தொகுப்பு, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் அஷ்வின் குமார். இந்த அனிமேஷன் படத்தில் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் உணர்ச்சிபூர்வமான ஈடுபாட்டைக் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
மொத்தத்தில், ‘மகா அவதார் நரசிம்மா’ மிகச்சிறந்த அனிமேஷன் படம். அனைவரும் ரசிக்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.