சென்னை:
அறிமுக இயக்குநர் நவீன டீ கோபால் இயக்கத்தில், டீஜய் அருணாசலம், ஜனனி, ராசி மந்த்ரா, கிரேன் மனோகர், செந்திகுமாரி, சூப்பர் குட் சுப்பிரமணி, பாவல் நவகீதன் ஆதித்யா கதிர், தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் ‘உசுரே’
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
தமிழக – ஆந்திரா எல்லையான சித்தூரில் கதைக்களம் அமைந்துள்ளது.. இந்த கிராமத்தில் எதிரெதிர் வீடுகளில் நாயகன் டீ.ஜெவும், நாயகி ஜனனியும் வசிக்கின்றனர்..மந்த்ராவின் கணவன் தன்னை அனாதையாக்கி விட்டு ஓடிப்போன காரணத்தால் மகள் ஜனனியை மிகவும் கண்டிப்பாக வளர்த்து வருகிறார். சித்தூரில் கல்குவாரியில் மேனேஜராக இருக்கும் டீஜே தனது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஜனனியை காதலிக்க முயற்சி செய்கிறார். இந்த சூழலில் ஜனனியை யார் காதலிப்பது என்கின்ற பிரச்சினையில் டிஜேவுக்கும், அவரது நண்பனுக்கும் இடையில் மோதலும், சண்டையும் ஏற்படுகிறது. இதன் பின்புதான் நாமும் அந்த பெண்ணை காதலித்தால் என்ன என்ற எண்ணம் டிஜேவுக்கு வருகிறது.
ஒரு கட்டத்தில் ஊரில் இருக்கும் அனைவரும் பிரமோற்சவம் பார்க்க புறப்பட்டு செல்ல நேரிடும்போது போதை ஆசாமி ஒருவன் ஜனனிக்கு தொந்தரவு கொடுக்கிறான். அப்போது டீஜே அவனை அடித்து உதைத்து விரட்டுகிறார். தனக்காக அங்கு வந்து காப்பாற்றிய, நாயகன் டீஜே மீது நாயகி ஜனனி காதல் கொள்கிறாள். ஆனால் இந்த காதலை ஜனனியின் தாய் மந்த்ரா ஏற்கவில்லை. இதனால் கோபமடைந்த மந்திரா நடு வீதியில் வைத்து அவரை செருப்பாலயே அடித்து, அவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காமல் நாயகன் டீஜேவிடம் இருந்து ஜனனியை பிரிப்பதற்காக ஒரு திட்டமும் தீட்டுகிறார், ஆனால் மந்த்ரா போட்ட திட்டத்தையும், முயற்சிகளையும் மீறி டீஜேவும், ஜனனியும் இணைந்தார்களா ?இல்லையா? என்பதுதான் ‘உசுரே’ படத்தின் மீதி கதை.
காதல் நாயகனுக்கு உரிய அத்தனை அம்சங்களும் கொண்டுள்ள டீஜே ,இப்படத்தில் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நிறைவான நடிப்பை கொடுத்துள்ளார். ஒரு சில காட்சிகளில் தன்னுடைய கோபம், ஆத்திரம், துடிப்பு… இதையெல்லாம் மிக சரியாகவே காட்டி சிறப்பாக நடித்து பாராட்டு பெறுகிறார்.
பிக் பாஸ் பிரபலம் ஜனனி, இளமையாகவும், அழகாகவும், காதல் கதைக்கு ஏற்றவாறு சிறந்த முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கதாநாயகியின் தாயாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு மந்த்ரா நடித்துள்ளார், தான் கதாநாயகியாக நடித்த காலத்தில் கவர்ச்சிகரமான நடிப்பின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த மந்திரா ,இந்த படத்தில் நாயகியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
காமெடி நடிகராக வலம் வந்த கிரேன் மனோகர், இப்படத்தில் அழுத்தமான அப்பா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். தனது வழக்கமான உடல் மொழியை தவிர்த்துவிட்டு அளவாக நடித்து தனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பாராட்டு பெற்றிருக்கிறார்.
கதாநாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் செந்தி குமாரி, நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் தங்கதுரை, ஆதித்யா கதிர், பாவல் நவகீதன், மெல்வின் ஜெயப்பிரகாஷ் என அனைத்து நடிகர்களின் நடிப்பும் படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.
இசையமைப்பாளர் கிரண் ஜோசீன் அசத்தலான இசையில் “உசுரே உசுரே” பாடல் இன்னமும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. படத்தின் மற்றைய பாடல்களும் கேட்கும் ரகம்தான். பின்னணி இசை எளிமையான கதை மற்றும் காட்சிகளுக்கு பெரும் பலம் சேர்க்கும் விதத்தில் பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் மார்க் சாய் சித்தூர் அருகே இருக்கும் அந்தக் கிராமத்தின் இயற்கை அழகை மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார். எளிமையான வீடுகளையும், அந்த ஊரில் நடைபெறும் திருவிழாக்களையும், ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் படமாக்கி அசத்திருக்கிறார்.
ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநரான நவீன் டி.கோபால். காதல் கதையாகவே இருந்தாலும் குடும்பக் கதையாகவும், நண்பர்களின் கதையாகவும் இணைத்து ஒரு அழகான குடும்ப பின்னணி திரைக்கதையோடு, நாகரீகமாகவும் சுவாரஸ்யமாகவும் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில், ‘உசுரே’ காதலர்கள் பார்க்கும் படம்.
ரேட்டிங் 2.5/5.
RADHAPANDIAN.