’பல்டி’ திரைப்பட விமர்சனம்!

80

சென்னை:

உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகாம், சாந்தனு, செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி தற்போது வெளி வந்திருக்கும் படம் தான் “பல்டி”.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

கபடி விளையாட்டு வீரர்களான ஷேன் நிகாம், சாந்தனு மற்றும் தனது நண்பர்களுடன் ஒன்றிணைந்து கபடி விளையாட்டு மூலம் வாழ்க்கையில் முன்னேற நினைக்கிறார்கள். கதாநாயகன் ஷேன்நிகமும் சாந்தனுவும் பஞ்சமி எனும் கபடிக்குழுவில் வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். பொற்றாமரை எனும் அணியை செல்வராகவனும் ஷோ பாய்ஸ் டீம் எனும் அணியை அல்போன்ஸ் புத்திரனும் வைத்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் பஞ்சமி அணியில் இருக்கும் சாந்தனுவை தங்கள் அணிக்காக விளையாட அழைக்கிறார்கள். ஆனால் சாந்தனுவின் நண்பர் ஷேன் நிகாம்  சோடா பாபு என்கிற அல்போன்ஸ் புத்திரன் அணியில் கபடி ஆட ஏற்கனவே ஒப்புக் கொண்ட சூழலில் செல்வராகவன் தனது அணியில்  ஆட பெரிய தொகை கொடுக்க முன் வருகிறார்.  பலருக்கு பணம் கொடுத்து அதற்குண்டான வட்டி கொடுக்காத நபர்களை அடிப்பதும், அவர்களை நிர்வாணப்படுத்துவதும் என பல கொடுமைகளை தனது அடியாட்களை வைத்து செய்து வருகிறார் செல்வராகவன்.

இந்த சூழலில் பணத்திற்காக ஆசைப்பட்டு, சாந்தனு உடனே ஓகே சொல்ல எதிர் அணியாக அல்போன்ஸ் புத்திரன் டீம் களமிறங்குகிறது. அல்போன்ஸ் புத்திரனின் டீமை அடித்து ஓட விடுகிறார்கள் செல்வராகவன் டீம்.  இதனால், அல்போன்ஸ் புத்திரனின் கோபத்திற்கு ஆளாகி நேரடி பகையை ஷேன் நிகாம், சாந்தனு இருவரும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் கபடி விளையாட்டு வீரர்களாக இருந்தவர்கள் செல்வராகவனுக்கு அடியாட்களாக மாறிவிடுகிறார்கள். கபடி வீரர்களாக ஆரம்பித்த இவர்களின் வாழ்க்கை திசை மாறி,  இந்த செல்வராகவனின் கும்பலில் சிக்கிய இவர்களின் நிலைமை தடம் மாறி வேறு பாதையில் செல்கிறது.  இதனால் பல்வேறு சிக்கல்களை ஷேன் நிகாம், சாந்தனு இருவரும் எதிர்கொள்ள, அதிலிருந்து இருவரும் மீண்டு வந்தார்களா? இல்லையா? என்பதுதான் ‘பல்டி’ படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஷேன்நிகாம்,துடிப்பான விளையாட்டுவீரர் மற்றும் நண்பனுக்காகப் போராடும் உணர்ச்சி மிகுந்த வீரராக மிக சிறப்பாக நடித்திருக்கிறார். கபடி போட்டியிலும் சரி, சண்டைக்காட்சிகளிலும் சரி, வேகமாக செயல்பட்டு ஆச்சரியப்பட வைக்கிறார்.

மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் சாந்தனு, அழுத்தமான கதாபாத்திரத்தில் அமர்க்களமாக நடித்து அசத்தியிருக்கிறார். நண்பர்களுக்கு துரோகம் செய்யும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தை கொடுத்து அவரை முழு வில்லனாகவே மாற்றி  தனது நடிப்பு மூலம் இப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

அன்பாக பேசி வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் விதம் வழக்கம் போல், தனது உடல் மொழியை நன்றாகவே பயன்படுத்தி வில்லத்தனத்தில் அசத்திவிட்டார் செல்வராகவன்.

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் டீ குடித்துக் கொண்டே சோடா பாபு என்ற கதாபாத்திரத்தில் அனைவரும் ரசிக்கும் விதத்தில் யார் இந்த புது நடிகர் என்று வியக்க  வைக்கிறார்.

கதாநாயகி பிரீத்தி அஸ்ரானிக்குக் காட்சிகள் குறைவு என்றாலும் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் வலிமை சேர்த்திருக்கிறது.

அலெக்ஸ் ஜே.புலிக்கல் ஒளிப்பதிவில் கதையில் இருக்கும் பரபரப்பு காட்சிகளை மிரட்டலாக படமாக்கியிருக்கிறார். கபடி போட்டிகள் மற்றும் சண்டைக்காட்சிகளை படமாக்கிய விதம் பாராட்டுகுரியவை.

கபடி விளையாட்டு அதில் முன்னணி வீரர்களாக இருக்கும் இரண்டு நண்பர்கள், மூன்று அணிகள், அவற்றின் பின்னால் இருக்கும் பெரும்புள்ளிகள் ஆகியோரை வைத்துக் கொண்டு வன்முறை ஒவ்வொருவர் வாழ்விலும் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை அழுத்தமாக இயக்குநர் உன்னி சிவலிங்கம் அமைத்திருக்கும் கதை-திரைக்கதை, மற்றும் காட்சிகள் ரசிகர்களை படத்துடன் ஒன்றிவிட செய்கிறது.

மொத்தத்தில், ‘பல்டி’ ஆக்ஷன் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்து!

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.