சென்னை:
இயக்குனர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில் நட்டி, அருண்பாண்டியன், மூணாறு ரமேஷ், அக்ஷரா ரெட்டி, வினோதினி, ஆதித்யா, யுவினா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “ரைட்”.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
காவல்துறை ஆய்வாளராக நடித்திருக்கிறார் நட்டி. அவர், பிரதமர் பாதுகாப்பிற்காகச் சென்ற நிலையில் தனது மகனை காணவில்லை என்று காவல் நிலையத்திற்கு புகாரளிக்க வருகிறார் அருண் பாண்டியன். இவரது புகாரை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ரைட்டர் மூணாறு ரமேஷ், புகாரை தூக்கி எறிகிறார். இந்த சூழலில் அவரது காவல் நிலையத்தை மர்ம நபர் ஒருவர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். காவல் நிலையம் மற்றும் அதனைச் சுற்றி வெடிகுண்டு வைக்கப்பட்டி ருப்பதாகவும், காவல் நிலையத்தில் இருப்பவர்கள் வெளியே சென்றால் அந்த வெடிகுண்டுகள் தானாகவே வெடிக்கும் என்றும் மிரட்டுகிறார். இதனால், காவல் நிலையத்தில் பெரிய அளவில் பரபரப்பு ஏற்படுகிறது. இந்த பரபரப்பான நிலையில் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த பெண் உதவி ஆய்வாளர் அக்ஷரா ரெட்டி உள்ளிட்ட சில காவலர்கள், இரண்டு கைதிகள் ஆகியோர் காவல் நிலையத்திற்குள் சிக்கிக் கொள்கிறார்கள்.
பிரதமர் நிகழ்ச்சி நடக்கும் போது இந்த விஷயம் கசிந்தால் பதற்றம் அடிகரிக்கும் என்பதால், வெளியே தெரியாத வகையில், பிரச்சனையை சமாளிக்க காவல்துறை முயற்சிக்க, மர்ம நபர் தனது தேவை என்ன என்பதை தெரியப்படுத்துகிறார். இதனால், காவல் நிலையத்தில் உள்ளவர்கள் மிகுந்த பதட்டத்தால் அல்லல்படுகிறார்கள். என்ன செய்வதென்று புரியாமல் எந்த நேரத்தில் எந்த குண்டு வெடிக்குமோ என்ற பதட்டமான சூழ்நிலையில் காவல்துறையினர் இருக்கும்போது வெடிகுண்டு வைத்த மர்ம நபர் யார் என்பதை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதுதான் “ரைட்” படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனான நட்டி, கதைக்கு ஏற்ற கதாபாத்திரமாக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஆரம்பத்தில் வந்து செல்லும் நட்டி, அதன் பிறகு காணாமல் போனாலும், இரண்டாம் பாதியில் தனக்கான கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அருண் பாண்டியன், மகன் காணவில்லை என்ற பரிதவிப்பையும், அவருக்கு என்ன ஆனது என்ற கவலையையும் தன் நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் அக்ஷரா ரெட்டியின் நடிப்பும் படத்துக்குப் பலமாக அமைந்து இருக்கிறது. ரைட்டராக நடித்திருக்கும் மூணாறு ரமேஷ் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் பலம் வாய்ந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்..
நீதிபதியாக நடித்திருக்கும் வினோதினி, இளம் ஜோடியாக நடித்திருக்கும் ஆதித்யா சிவகுமார் மற்றும் யுவினா, கைதியாக நடித்திருக்கும் தங்கதுரை, பெண் காவலராக நடித்திருக்கும் நடிகை என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தங்களது பணியை செய்து இருக்கின்றனர்.
குணா பாலசுப்பிரமணியன் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான் என்றாலும் பின்னணி இசையால் இந்த படத்தை தூக்கிப் பிடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் எம்.பத்மேஷுக்கு சவாலான கதைக்களம்.அதை சிறப்பாக எதிர்கொண்டு படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.
இயக்குனர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் திரைக்கதையில் தீவிர கவனம் செலுத்தி, அதற்கேற்றவாறு குறிப்பிட்ட கால அளவுக்குள் நடக்கக்கூடிய கதையை விறுவிறுப்பான முறையில் மக்கள் ரசிக்கின்ற விதத்தில் இயக்கி இருப்பதை பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘ரைட்’ படம் வெற்றிதான்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.