‘காந்தாரா சேப்டர் 1’ திரைப்பட விமர்சனம்!

128

சென்னை:

ரிஷப் ஷெட்டி, ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவையா, பிரமோத் ஷெட்டி, ரமேஷ் பூஜாரி, பிரகாஷ் துமிநாட், தீபக் ராய் பனாஜே, ஹரிபிரசாந்த் எம் ஜி, ஷனீல் கௌதம், நவீன் பாண்டல் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “காந்தாரா சேப்டர் 1”.  நடிகர் ரிஷப் ஷெட்டி எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

2022 ஆம் ஆண்டு வெளியான காந்தாரா படத்தில், மன்னராட்சிக் காலத்தில் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்ட நூறு ஏக்கர் நிலத்தை அம்மன்னரின் வாரிசுகள் திரும்பப் பெற முனைய அதற்கு எதிராக அம்மக்கள் போராடுகிறார்கள். முந்தைய பாகத்திலிருந்து பல நூறு வருடங்கள் இப்படத்தின் கதை பின்னோக்கி நகர்கிறது. காந்தாரா என்கிற பகுதியில் ஈசனின் அருள் பெற்ற அந்த இடத்தில் காட்டுப்பகுதியை சேர்ந்த பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர்.  மூலிகைகள், விலையுர்ந்த விளைபொருட்கள் நிறைந்த காந்தாரா வனப்பகுதியை கைப்பற்ற அதன் அருகே இருக்கும் நாட்டின் மன்னன் முயற்சிக்கிறார். அப்போது காந்தாராவை காப்பாற்றும் கடவுள் அவர்களை விரட்டியடித்து, பேராசை பெறும் அரசனை அங்கேயே கொன்று விடுகிறது. அங்கிருந்து தப்பித்த இளவரசர் இனி காந்தாரா பக்கமே போக கூடாது என்று முடிவெடுகிறார்.

இந்த நிலையில் காந்தாரா பகுதியில் ஒரு ஆழ்துளை கிணறு ஒன்றில் புலி-யின் பாதுகாப்பில் ஒரு குழந்தை கிடைக்கிறது, அந்த குழந்தைதான் பெரியவனானதும் ரிஷப் ஷெட்டியாக மாறுகிறார். காந்தாரா பழங்குடி கூட்டத்தை சேர்ந்த  ரிஷப் ஷெட்டி, காட்டை விட்டு வெளியேறி, தங்களிடம் உள்ள விளைபொருட்களை விற்க முயற்சிப்பதோடு, சாதாரண மக்கள் மீது போடப்பட்டிருந்த தடைகளை அதிரடியாக தகர்த்தி, அங்குள்ள துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்.  ரிஷப் ஷெட்டி மற்றும் அவருடைய பழங்குடி இன மக்களை எதிர்க்க முடியாமல் தடுமாறும் அரசர் ஜெயராம் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறார். இந்த சூழலில் ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து வலம் வரும் பழங்குடி இன மக்களுடன் சமரசமாக பேசி  அவர்களுக்கான அனைத்து மரியாதைகளையும் வழங்குவதாக அறிவிக்கிறார் அரசர் ஜெயராம் . அதன் பிறகு பழங்குடி இன மக்களின் சக்திகளைக் கட்டுப்படுத்தி காந்தாராவைக் கைப்பற்ற சதி செய்கின்றபோது பெரிய அளவில் போர் வெடிக்கிறது. அந்த போரில் யார் வெற்றி பெற்றார்கள்.. என்பதுதான்  “காந்தாரா சேப்டர் 1” படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டி, பழங்குடியினர் கதாபாத்திரத்தில் மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இப்படத்தின் ஒட்டுமொத்த கதையையும் தனது தோளில் சுமந்து மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார். இப்படத்தில் இயல்பான காட்சிகளைக் காட்டிலும்  “ஓ…ஓ….” என்று சத்தம் போட்டு சாமியாடும் காட்சிகள் அனைவரையும் சிலிர்க்க வைத்து தனது நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.  அதிலும் தெய்வம் அவர் மீது இறங்கும் நேரம் சண்டைக்காட்சிகள் எல்லாம் அசுரத்தனமாக அசத்தி இருக்கிறார்.

இப்படத்தில் கதாநாயகியாக அழகு தேவதையாக படத்தின் ஆரம்பத்திலிருந்தே காட்சியளிக்கிறார் ருக்மணிவசந்த்.  ஆரம்பத்தில் அமைதியாக வருபவர், திடீரென்று விஸ்வரூபம் எடுத்து படம் பார்ப்பவர்களை அதிர வைக்கிறார்.

அரசராக நடித்திருக்கும் ஜெயராம் மற்றும் அவரது மகனாக நடித்திருக்கும் குல்ஷன் தேவய்யா இருவரும் தங்களது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

பி.அஜனீஸ் லோக்நாத் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். பின்னணி இசை பல இடங்களில் கதையை உணர்ந்து உயர்த்தி பிடித்து படத்தை காப்பாற்றியிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் கே.காஷ்யப் காட்சிகள் அனைத்தையும் பிரமாண்டமாக படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்து அசத்தியுள்ளார். கிளைமேக்ஸ் சண்டைக்காட்சிகளை பிரமிப்பு ஊட்டும் விதத்தில் படமாக்கியிருப்பதை பாராட்ட வேண்டும்.

இடைவேளை வரும் தேவாங்குகள் காட்சி, புலி வந்து காப்பாற்றுவது, கிளைமேக்ஸில் அந்த குகையில் வரும் விஷயம் என அனைத்தும் பிரமாண்டத்தின் உச்சம் என்றாலும் காந்தாராவில் உள்ள ஈஸ்வர பூந்தோட்டத்தை அடைய நினைப்பவரை தெய்வம் என்ன செய்யும் என்பதை கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் அனைவரையும் ரசிக்க வைத்து இருக்கிறார் கதை எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டி. ஆனால் முந்தைய காந்தாராவின் எதிர்பார்ப்போடு வரும் ரசிகர்களை திருப்திப் படுத்தத் கூடிய விதத்தில் படம் இல்லை என்றாலும் ‘ஓகே’ என்று சொல்லும் அளவிற்கு நிறைவு செய்து இருக்கிறார்.

மொத்தத்தில், ‘காந்தாரா – அத்தியாயம் 1’  படம் பரவாயில்லை.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.