சென்னை:
‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில், ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி.கே.ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, பி எல் தேனப்பன், தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ.ஏ.கே.சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம்தான் ‘தீயவர் குலை நடுங்க’
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
யாரும் இல்லாத ஆளில்லா சாலையில் பிரபல எழுத்தாளர் ஒருவர் தனது காரில் வந்து கொண்டிருக்கும் போது, மோட்டார் சைக்கிளில் குறுக்கே வரும் நபர் ஒருவர் காரை மறித்து, அவரை தாக்கியதுடன் அவரை அடித்து கொலை செய்து விடுகிறார். கொலை செய்த கொலையாளி உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டு வருவதால், அவர் யார் என்று தெரியவில்லை. கொடூரமாக கொலை செய்யப்பட்ட இந்த கொலை வழக்கை காவல்துறை அதிகாரி அர்ஜுன் விசாரிப்பதற்கு முன் வருகிறார். இந்த சூழலில் கொலை நடந்த இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஓவியம் அர்ஜுனை அலைக்கழிக்கிறது. சில உண்மைகளை தெரிந்துக் கொள்வதற்காக சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி ஆசிரியை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவருடைய காதலராக வரும் பிரவீன் ராஜா ஆகிய இருவரையும் நோக்கி இந்த கொலை வழக்கின் விசாரணையை மேற்கொள்கிறார் அர்ஜுன். இறுதியில் கொலைக்கான காரணத்தை அர்ஜுன் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
தமிழ் திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகர் அர்ஜுன், தனது கம்பீரமான நடிப்பு மூலம் காவல்துறை அதிகாரியாக அசத்தி இருக்கிறார். சண்டைக் காட்சிகளில் கூட அதிகமாக உடம்பை அலட்டிக் கொள்ளாமல் வழக்கமான தனது உடல்மொழியை வைத்துக் கொண்டு யாரையும் கஷ்டப்படுத்தாமல் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். ஆட்டிச குழந்தைகள் மீதான அவர் கொண்டிருக்கும் பாசம், அன்பு ஆகிய உணர்வுகளை தத்ரூபமாக தனது நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆட்டிசம் எனும் நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்ட சிறுமியாக வரும் அனிகாவின் கதாபாத்திரம் அனைவரையும் கலங்க வைத்து விடுகிறது.
பிரவீன் ராஜா, லோகு.என்.பி.கே.எஸ், ராம்குமார், தங்கதுரை, பிராங் ஸ்டார் ராகுல், பிரியதர்ஷினி, சையத், ஜி.கே.ரெட்டி, பி.எல்.தேனப்பன், ஓ.ஏ.கே.சுந்தர், வேல ராமமூர்த்தி, பத்மன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுக்கு கொடுத்த பணியை மிக சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் பாரத் ஆசீவகன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். பின்னணி இசை அளவாக அமைந்திருக்கிறது.
சரவணன் அபிமன்யூவின் ஒளிப்பதிவில் அந்த அப்பார்ட்மெண்ட் காட்சிகளை எல்லாம் யதார்த்தமாக படமாக்கி ரசிகர்களை கவர்கிறார்.
கதை, எழுதி இயக்கியிருக்கிறார் தினேஷ் லட்சுமணன். திரை மொழிக்குத் தேவையான திடுக்கிடும் திருப்பங்களுடன் பல படங்களில் பார்த்த ஒரு கதையை மீண்டும் எடுத்து வந்திருக்கிறார் இயக்குனர். முதல் பாதியில் படத்தின் ஆரம்பத்திலேயே கொலை நடந்ததும், கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை சரியான முறையில் நகர்த்தி படத்திற்கு கூடுதல் சுவாரஸ்யம் சேர்த்திருந்தாலும் இரண்டாம் பாதியில் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் சிறுமியை வைத்து இப்படியான கதைகளை எடுப்பீர்கள் என்று ரசிகர்களை கேள்வி கேட்க வைத்து இருக்கிறார் தினேஷ் லட்சுமணன்.
மொத்தத்தில், ‘தீயவர் குலை நடுங்க’ பாலியல் குற்றவாளிகளுக்கு பாடம்.
ரேட்ட்டிங் 3/5.
RADHAPANDIAN.