‘மாண்புமிகு பறை’ திரைப்பட விமர்சனம்!

84

சென்னை:

சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் “மாண்புமிகு பறை”. இந்தப் படத்தில், திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காயத்ரி ரெமா நாயகியாக நடித்துள்ளார். மேலும் அரியன், கஜராஜ், ரமா, அசோக்ராஜா, சேரன்ராஜ், காதல் சுகுமார், ஜெயக்குமார், பொன் சுரேஷ், அரங்க குணசீலன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையைப் பொர்ருத்தவரையில்,

மேல் சாதியினரும், பறை இசையை சொந்தம் கொண்டாடும் தாழ்த்தப்பட்ட மக்களும் ஒன்றாக வாழும் ஒரு கிராமத்தில் நாயகன் லியோ சிவகுமார், தன்னுடைய நண்பன் ஆரியனுடன் இணைந்து பறை இசையை சொல்லித் தரும் ஒரு சிறிய பள்ளியை நடத்தி வருகிறார். அந்தப் பறை இசையை தாழ்த்தப்பட்ட மாணவர்களும், மற்ற சாதியைச் சேர்ந்த சிறுவர்களும் ஆர்வத்துடன் கற்றுக் கொள்கிறார்கள். இது மேல்சாதியை சேர்ந்த சாதி வெறியர்களுக்கு பிடிக்காமல் போகிறது. ஊர் தலைவரும் இன்னும் சிலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதனால் லியோ சிவகுமார் தனது நண்பனுடன் இணைந்து சாவுக்கு பறை அடிக்க மாட்டோம் என்ற ஒரு கொள்கையை கடை பிடிக்கின்றனர். அதற்காக தங்களை தேடி வரும் வாய்ப்புகளை அவர்கள் தட்டிக் கழிக்கின்றனர். இந்த நேரத்தில் அந்த ஊரில் இருக்கும் பார்வையற்றோர் பள்ளியில் பணியாற்றும் மேல் சாதியைச் சேர்ந்த நாயகி காயத்ரி மீது நாயகன் லியோ சிவகுமாருக்குக் காதல் வருகிறது.

அந்தக் காதல் காயத்ரியின் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி திருமணத்தில் முடிகிறது.இந்த சூழ்நிலையில்  பக்கத்து ஊரில் நடக்கும் ஒரு விழாவில் பறை இசைப்பதற்காக சென்ற ஆரியன்,  மேல் சாதியினரால் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார். இந்த கொலை சம்பவத்தை காவல்துறையினர் விசாரணை செய்யும்போது, இந்தப் பிரச்சனையை ஒரு சாதாரணமாக விஷயமாக கருதி அங்குள்ளவர்கள் மறைத்துவிடுகிறார்கள். தன்னுடைய உயிர் நண்பனை இழந்து தவிக்கும் லியோ சிவகுமார், தன் நண்பனை யார் கொலை செய்தார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்காக பல விதத்தில் பெரும் முயற்சிகள் செய்கிறார். அதனால் கோபமடைந்த மேல் சாதியினர் இந்த கொலை பிரச்சனையை கண்டுபிடிக்க நினைக்கும் லியோ சிவகுமாரையும் தீர்த்துக்கட்ட திட்டமிடுகிறார்கள். அவர்களின் கொலை முயற்சியிலிருந்து லியோ சிவகுமார் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் “மாண்புமிகு பறை” படத்தின் மீதிக் கதை.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் லியோ சிவகுமார் தன்னால் முடிந்த அளவுக்கான ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் என்பதை உணர்ந்து பறை இசை கருவியை அடித்து ஒலி எழுப்புவதை முறைப்படி பழகி நடித்து இருப்பது பாராட்டதக்கது.

இவருடைய உற்ற நண்பனாக நடித்திருக்கும் ஆரியனும் தன்னால் முடிந்த அளவு தனது கதாபாத்திரத்தை உணர்ந்து  நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார்.

லியோ சிவகுமாரின் காதலியாக காயத்ரி ரெமா நடித்திருக்கிறார்.  தன்னுடைய கணவன் எடுத்துச் சென்ற அந்த பறை இசை பள்ளியை தான் முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் பறையை அடித்துக் கொண்டே அவர் ஆடுகின்ற அந்த வெறித்தனமான ஆட்டம் கைத்தட்டலுடன் புல்லரிக்க வைக்கிறது.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கஜராஜ், ரமா, அசோக் ராஜா, சரண்ராஜ், காதல் சுகுமார், ஜெயக்குமார், பொன் சுரேஷ், அரங்கா குணசேகரன் ஆகியோர் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

தேவாவின் இசையில்  “ஆதி சிவன் அடிச்ச பறையடா” பாடல் ஆட வைக்கிறது. பின்ணணி இசை அனைவரின் காதையும் பிளக்க வைக்கிறது.

இந்த படத்துக்குரிய அடையாளங்களோடு மிக சிறந்த முறையில் அழகான  ஒளிப்பதிவை கொடுத்து அசத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார்.

சாவுக்கு மட்டும்தான் பறை இசை கருவி அடிக்கப்படும் என்ற  கருத்தை மேல் சாதியினர் சொன்னாலும், அந்த பறை இசை கருவி  உருவான வரலாறு பற்றி தொடக்க காட்சியில் தரும் முன்னுரை அனைத்து இசைக் கருவிக்கும் பறைதான் தாய்க் கருவி என்பதை உணர்த்தி தாழ்த்தப்பட்டவர்களின் குரலை ஓங்கி ஒலிக்கும் வகையில் தைரியத்துடன் கூறியிருக்கிறார் இயக்குனர் எஸ். விஜயகுமார். பறை இசை கருவி வரலாற்றை சொன்னதற்காக இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.

மொத்தத்தில் “மாண்புமிகு பறை” அனைவரையும் ரசிக்க வைக்கும்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.