’மகாசேனா’ திரைப்பட விமர்சனம்!

47

சென்னை:

விமல், சிருஷ்டி டாங்கே, யோகி பாபு, ஜான்விஜய், கபீர் துகான் சிங் ,மகிமா குப்தா, விஜய் சேயோன், ஆல்ஃப்ரட் ஜோஸ், சிவ கிருஷ்ணா, இலக்கியா மற்றும் பலர் நடித்துள்ள படம்தான்  ’மகாசேனா’. இப்படத்தை  தினேஷ் கலைச்செல்வன் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

மலைகள் நிறைந்த  இயற்கை வளம் வாய்ந்த குரங்கணி மலை மக்களுக்கும் அதன் அடிவாரத்தில் வாழும் பழங்குடி மக்களுக்கும் 3000 ஆண்டு கால பகைமை நிலவுகிறது. இந்தப் பகைக்கான காரணம் பழங்குடியின மக்கள் கொண்டாடும் யாளீஸ்வரர் சிலைதான். அந்த ஊரில் இருக்கும் யாளீஸ்வரர் கோவிலில் குடி கொண்டிருக்கும் அந்த சிலையை அடிவாரத்து மக்கள் கைப்பற்ற நினைத்து பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் அந்த சிலையை அவர்களால் எந்த சூழ்நிலையிலும்  கைப்பற்ற முடியவில்லை. இந்த சூழலில் பழங்குடியினரான நாயகன் விமல் சேனா என்ற யானையை வளர்க்கிறார். அவரது மலை கிராமத்து கோவிலில் இருக்கும் யாளிஷ்வரன் சிலையை வனத்துறை அதிகாரி ஜான் விஜய், மலை அடிவாரத்தில் வாழும் மற்றொரு பழங்குடியின மக்களை வைத்து திருட திட்டமிடுகிறார். இதற்கிடையே மதம் பிடித்த விமலின் யானை அவரது மகள் அல்லியைத் தாக்கிவிடுகிறது. அல்லி இறந்து விடுகிறாள்.கிராமமே பதறுகிறது யானையோ காட்டுக்குள் சென்று விடுகிறது. யானையை தேடி காட்டுக்குள் செல்லும் விமல், கோவிலில் யாளிஷ்வரன் சிலையை கடத்த முயன்ற வனத்துறை அதிகாரி ஜான் விஜய்யின் திட்டத்தை முறியடித்து வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதுதான்  ’மகாசேனா’ படத்தின் மீதிக்கதை.

இப்படத்தில் மலைப்பிரதேச மக்களின் பிரதிநிதியாக செங்குட்டுவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விமல். எந்தவித பெரிய முகபாவனைகள் காட்டாமல் எளிமையான அவரது நடிப்பு  யாருடைய மனதையும் ஈர்க்கவில்ல. தன் உடல்மொழியைத் தாண்டி திடமான பழங்குடி இளைஞராக நடிக்க முயன்றிருக்கிறார்.

கதாநாயகியாக வரும் சிருஷ்டி டாங்கே, வீரதீரமிக்க பெண்ணாக வருவார் என்று எதிர்பார்த்தால் வீரம் வெளிப்படுத்தும் காட்சிகளில் சோடை போய் விடுகிறார்.. ஒரு சில காட்சிகளில் கோபமாக பேசி ஆச்சரியப்பட வைக்கிறார்.

யோகி பாபு வரும் காட்சிகளில் நகைச்சுவை எடுபடவில்லை. வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் விஜய், வழக்கம் போல் நம்மை சலிப்படைய வைக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் கபிர் துஹான் சிங், கங்கா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஹிமா குப்தா, இடும்பன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேயோன், கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அல்ஃப்ரெட் ஜோஸ், காளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிவகிருஷ்ணா, கல்லூரி மாணவியாக நடித்திருக்கும் சுபாங்கி ஜா, விமலின் மகளாக நடித்திருக்கும் சிறுமி இலக்கியா ஆகியோர் கொடுத்த வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் மனாஸ் பாபு  காடுகள் மலை சூழ்ந்த இடங்களில் படப்பிடிப்பு செய்து தன்னை நிரூபித்துள்ளார். அவர் படமாக்கிய விதம்  படத்தின் தரத்தை உயர்த்தியிருப்பதோடு, படத்திற்காக செய்யப்பட்ட செலவுகளை திரையில் மிக சிறப்பாக காட்டியிருக்கிறார்.

ஏ.பிரவீன் குமாரின் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் சுமார் ரகம். உதய் பிரகாஷ் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் தினேஷ் கலைச்செல்வன், கதையில் தான் சொல்ல வந்ததைவிட்டு விட்டு பல திருப்பங்களில் சிக்கிச் சுழன்று,  அந்த சிலையை கடத்த நினைக்கும் வடநாட்டு கடத்தல் கும்பல் ஒன்றையும்,  அதற்கு உடந்தையாக இருக்கும் வன அதிகாரி, யானை, கல்லூரி சுற்றுலா என்று தேவையில்லாமல் சில சம்பவங்களை புகுத்தி இந்தப் படத்தை ஒரு நல்ல திரைப்படமாக நம்மால் பார்த்து ரசிக்க முடியாமல் செய்து விட்டார் இயக்குனர்.

மொத்தத்தில், ‘மகாசேனா’  வலிமையில்லாத படம்.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.