சென்னை:
அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம்தான் “லாக்டவுன்”. இப்படத்திற்கு கதை எழுதி இயக்கி இருக்கிறார் ஏ.ஆர்.ஜீவா.
இப்ப டத்தின் கதையைப் பொருத்தவரையில்,
ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் அனுபமா பரமேஸ்வரன். தனது குடும்ப கஷ்டத்திற்காக ஐடி நிறுவனத்தில் வேலை தேடிக் கொண்டிருக்கும் கதாநாயகி அனுபமாவுக்கு இரவு நேரத்தில் பணியாற்றும் வாய்ப்புகள் கிடைப்பதால் குடும்பத்தார் தடை விதித்து விடுகிறார்கள்.வேலைக்காக பல ஐடி கம்பெனிகள் ஏறி இறங்கி கொண்டிருக்கும், இவர் வேலை விஷயமாக தன் சினேகிதி மூலம் ஒரு பார்ட்டிக்கு செல்ல, அங்குள்ளவர்கள் வற்புறுத்தி மது அருந்த வைத்து விடுகிறார்கள். மதுவிருந்துக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்து ஆட்டம், பாட்டம், பாடல் என்று மகிழ்ச்சியில் திளைத்த அனுபமா பரமேஸ்வரன் போதையில் மயங்கி விழுந்து விடுகிறார். பிறகு போதை மயக்கம் தெளிந்து மறுநாள் வீட்டுக்கு சென்று வழக்கம் போல் தனது பணியை தொடரும் நிலையில் சில வாரங்கள் கழித்து அவரது வாழ்க்கை பெரும் துயரத்திற்கு கொண்டு சென்று வேதனையாக மாறிவிடுகிறது.
இவர் மது விருந்தில் கலந்துக் கொண்டபோது யாரோ இவரது கற்பை சூறையாடி இருப்பதும், தான் கர்ப்பமாக இருப்பதும் தெரிய வருகிறது. இதனால் வேதனையடைந்த அனுபமா பரமேஸ்வரன், தான் கர்ப்பமுற்ற விஷயம் வீட்டிற்கு தெரிந்தால் அவமானம்.என்று. என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார். தன் பெற்றோருக்குத் தெரியாமல் வயிற்றில் வளரும் கருவை கலைத்துவிட முடிவெடுக்கும் சமயத்தில் கொரோனா நோயினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விடுகிறது. அதனால் தனது குடும்பத்திற்கு தெரியாமல் அந்த பிரச்சனையில் இருந்து மீள்வதற்காக பல போராட்டங்களை சந்திக்கிறார். இறுதியில் அந்த பிரச்சனையில் இருந்து அனுபமா பரமேஸ்வரன் மீண்டாரா? இல்லையா? என்பதுதான் “லாக்டவுன்” படத்தின் மீதிக் கதை.
பல முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், இந்த படத்தின் கதையை கேட்டு எப்படி நடித்தார் என்றே தெரியவில்லை. எப்படிபட்ட கதாபாத்திரம் இருந்தாலும் நான் நன்றாகச் செய்வேன் என்று நிருபித்துக் காட்டி இருக்கிறார். தான் கர்ப்பம் என்று தெரிந்ததும் அதை குடும்பத்தினருக்கு தெரியாமல் கலைப்பதற்காக அனுபமாபரமேஸ்வரன் மருத்துவர்களின் கால்களில். விழுந்து கெஞ்சும் காட்சிகளில் அனைவரையும் உருக வைக்கிறார். கண்டிப்பாக இப்படத்தின் மூலம் அனுபமா பரமேஸ்வரனுக்கு விருது கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
அவருடைய பெற்றோராக நடித்திருக்கும் சார்லி,நிரோஷா ஆகியோர் நடுத்தரக் குடும்பங்களைப் பிரதிபலிக்கும் விதத்தில் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், லொள்ளு சபா மாறன், விநாயகராஜ், விது, சஞ்சீவி, பிரியா கணேஷ், ஆஷா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி சீரழிகிறது என்பதை மிக தத்ரூபமக படமாக்கி இருக்கிறார்.
இசையமைப்பாளர்கள் என்.ஆர்.ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இருவரது இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளில் பதற்றத்தையும், படபடப்பையும் ஏற்பட வைத்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.ஜீவா. இந்தப் படத்தில் நல்ல குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் சந்தர்ப்ப சூழ்நிலையால் பாதிப்புக்குள்ளாகி தன் வயிற்றில் கரு உருவாகி இருப்பதை அறிந்து அதனை கலைக்க தன்னை பாதுகாத்துக் கொள்ள எடுக்கும் முயற்சியை அதுவும் கொரோனா லாக்டவுனில் அந்தப் பெண் எப்படி எல்லா தடைகளையும் தாண்டி செய்ய முடிந்தது என்பதை படம் முழுவதையும் மிகுந்த எதிர்பார்ப்புடன் நகர்த்தி சென்று ரசிகர்கள் ரசிக்கும்படி அழுத்தமான திரைக்கதையாக அதிர்ச்சியடைய வைத்து விட்டார் இயக்குனர் ஏ.ஆர்.ஜீவா.
மொத்தத்தில், ‘லாக்டவுன்’ படம் இளம்பெண்களுக்கு ஒரு பாடம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.