‘லவ் ஷேர் சப்ஸ்கிரைப்’ ( LSS ) திரைப்பட விமர்சனம்!

69

சென்னை:

ஆதவ் கிருஷ்ணா ,சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன் ,ரோஹித், தனஞ்செயன், முத்து பவன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான்  “லவ் ஷேர் சப்ஸ்கிரைப்”. ஜெ.பி. பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரிப்பில் இப்படத்தை ஆர் .மகாலட்சுமி முருகன் எழுதி இயக்கியுள்ளார். என்.எஸ். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

சென்னையில் ஒரு கல்லூரியில் நன்றாக படிக்கும் மாணவன் ஆதவ் கிருஷ்ணா. அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகளான சிம்ரன் அத்வானியை,  சில ரவுடிகள் தொந்தரவு செய்யும் சூழலில் ஒரு ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார் ஆதவ் கிருஷ்ணா. முதலில் ஆதவ் கிருஷ்ணாவை தவறாக புரிந்துக் கொள்ளும் சிம்ரன், அவர் படிப்பில் அதிக க்வனம் செலுத்தி  தான் உண்டு தன் படிப்பு உண்டு என்ற சூழலில்  இருக்கும் ஆதவ் கிருஷ்ணாவை காதலிக்க முயலும்போது அவர் நிராகரித்து விலகிச் செல்கிறார். பிறகு ஒரு புரிதலுக்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் காதல் மலர்கிறது. சென்னையில் செல்வச் செழிப்பான மார்வாடி குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணான சிம்ரன், தனது  தாய் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில், தந்தை அரவணைப்பில் வளர்கிறார்.

இதனிடையே இவர்களது காதலுக்கு ஆதவ் கிருஷ்ணாவின் பெற்றோர்கள் பச்சைக் கொடி காட்டி சம்மதம் தெரிவிக்க, சிம்ரனின் குடும்பத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் சிம்ரன் சிறு குழந்தையாக இருக்கும்போது பிரிந்து சென்ற தனது தாயைச் சந்திக்க விரும்புகிறார். அதை முன்னிட்டு சிம்ரன் தனது பாட்டியிடம் தாயை சந்திப்பதற்காக காசிக்கு செல்வதாக கூறுகிறார். தன் தந்தைக்கு தெரியாமல் காதலனை அழைத்துக் கொண்டு காதலர்கள் இருவரும் காசிக்குப் பயணம் செல்கிறார்கள். காசிக்கு சென்று தனது தாயைத் தனியாகப் சந்தித்து, தன் காதலைப் பற்றிக் கூறுகிறார் சிம்ரன். அதற்கு ஒப்புதல் கொடுக்கும் சிம்ரனின் தாய், என்னை மாதிரி நீயும் எந்த சிக்கலிலும் மாட்டிக் கொள்லாமல் மகிழ்ச்சியாக உன் காதலனுடன் வாழ்க்கையை நடத்து என சில அறிவுரைகளை சொல்லி அனுப்புகிறார். அங்கு எதிர்பாராத விதமாக சில ரவுடிகள் சிம்ரனை துரத்திக் கொண்டு வரும்போது ஒரு பயங்கர விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து கோமா நிலைக்கு சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். காசியில் சிம்ரனை காணாமல் அவதிப்படும் ஆதவ் கிருஷ்ணாவுக்கு ஒன்றும் புரியாமல் தவிக்கிறார். இறுதியில் காசியில் காணாமல் போன சிம்ரனை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் “லவ் ஷேர் சப்ஸ்கிரைப்” படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் புதுமுக நடிகர் ஆதவ் கிருஷ்ணாவுக்கு முதல் படம் என்றாலும் தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து காதல், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து உணர்வுகளையும் நேர்த்தியாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்கிறார். இப்படத்தில் நடன காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார் என்பது அவர் ஆடும் நடனம்,  சண்டைக் காட்சிகளின் உழைப்பு நன்றாக வெளிப்படுகிறது.

கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் புதிய முகம் சிம்ரன் பணக்கார பெண்ணாக எளிமையான தோற்றத்தில் வந்து பார்ப்பவர் மனதை கவர்ந்து சிறந்த முறையில்  தனது நடிப்புப் பங்களிப்பை நிறைவாகச் செய்துள்ளார்.

கதாநாயகனின் பெற்றோராக நடித்திருக்கும் படவா கோபி, வினோதினி ஆகியோர் தங்களது பணியை சரியாக செய்திருகிறார்கள். நாயகனுக்கு டூவீலரில் லிப்ட் கொடுத்து போலீஸில் மாட்டிக் கொள்ளும் ஜாவா சுந்தரேசன் சிரிக்க வைக்க முயல்கிறார். ரோஹித், தனஞ்ஜெயன், முத்து பவன் போன்ற பலர் துணைப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

கதாநாயகியின் தந்தையாக நடித்திருக்கும் நடிகர் இறுதிக் காட்சிகளில் வந்து சில வசனங்கள் பேசுகிறார். அவருடன் வரும் நடிகரும் காசியில் வந்து வில்லத்தனம் காட்டுகிறார்.

ஒளிப்பதிவாளர் என் .எஸ் . சதீஷ்குமார் சென்னையையும் காசியையும் அதன் இயற்கை காட்சிகளையும் சிறந்த முறையில் ஒளிப்பதிவு செய்து அழகாகப் படமாக்கியுள்ளார்.

அஸ்வமித்ரா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான்.பின்னணி இசையிலும் குறை வைக்கவில்லை.

ஆரம்பத்தில் கல்லூரியில் ஜாலியான காதல் கதையாக கொண்டு சென்றாலும் இடைவேளைக்குப் பிறகு கதையை கிரைம் சாயலுக்கு மாற்றி விறுவிறுப்புடன் இயக்கி  இருக்கிறார் இயக்குனர் ஆர் மகாலட்சுமி முருகன். காசி பின்னணியில் ஒரு எமோஷனல் காதல் பயணத்தை நேர்த்தியாகக் கொடுத்து அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார் இயக்குனர் ஆர்.மகாலட்சுமி முருகன்.

மொத்தத்தில், ‘லவ் ஷேர் சப்ஸ்கிரைப்’ படம் அனைவரையும் ரசிக்க வைக்கும்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.