சென்னை:
மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. இப்படத்தை ஏ.எல் .விஜய் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
இப்படத்தின் முதல் காட்சியிலேயே கதாநாயகி அழுது கொண்டிருக்கிற காட்சியுடன் ஸ்காட்லாந்தில் படம் தொடங்குகிறது. கதாநாயகி ஜியா சங்கர் ஸ்காட்லாந்த் சென்றபோது, அங்கு அவரது காதலன் அர்ஜுன் அசோகன் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அவர் தற்கொலை செய்துக் கொள்ள முயலுகிறார். அந்த சமயத்தில் மதும்கேஷ், ஜியா சங்கரை காப்பாற்றி எம்.எஸ்.பாஸ்கர் வீட்டில் தங்க வைக்கிறார். தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஜியா சங்கருக்கு பலத்த காயங்களுடன் காப்பாற்றப்பட்ட பிறகு அவருக்கு ஆன்டோகிரட் அம்னீசியா என்கிற பிரச்சினை ஏற்படுகிறது. அது என்னவென்றால் மூளையில் ஏற்படும் காயம் அல்லது பாதிப்பிற்குப் பிறகு, புதிய நினைவுகளை உருவாக்கவோ அல்லது பழைய நினைவுகளை தக்கவைக்கவோ முடியாத ஒரு நரம்பியல் கோளாறுதான் அது. எனவே ஜியா சங்கருக்கு நேற்று நடந்தது இன்று நினைவுக்கு வராது. பெரிய பணக்காரரின் மகளான ஜியா சங்கர் பாடல் பாடுவதில் ஆர்வம் ஏற்பட்டு இசைக்குழு ஒன்றில் பாடகியாக இருந்து சர்வதேச புகழ் அடைய எண்ணுகிறாள்.
அந்த இசை குழுவிலிருக்கும் அர்ஜுன் அசோகனை காதலிக்கிறார். இதற்கிடையில் ஜியா சங்கர் மீது பத்து வயது முதலே ஆசை வைத்திருக்கிறான் மதும்கேஷ். இந்த நிலையில்தான், ஜியா சங்கரின் தந்தை தன் மகளுக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்ய, தனது கனவான ஸ்காட்லாந்தில் பாடவேண்டும் என்பதற்காக அந்த பாடல் போட்டியில் கலந்துக் கொள்ள திருமணத்தை நிறுத்திவிட்டு ஸ்காட்லாந்த் செல்கிறார் ஜியா சங்கர். ஆனால் அவரது பாடல் கனவு நிறைவேறவில்லை. இந்த சூழலில் மதும்கேஷ் தினமும் அவளிடம் தன்னை அவளது காதலனாக அறிமுகப்படுத்தி, அவளது வாழ்க்கையில் உறுதுணையாக இருந்து அவளை கவனித்து வருகிறான். அந்த சமயத்தில் ஜியா சங்கரின் உண்மையான காதலன் அர்ஜுன் அசோகன், தனது காதலி ஜியாசங்கர் இருக்கும் இடமான எம்.எஸ்.பாஸ்கர் வீட்டிற்கு வருகிறார். அங்கு ஜியாசங்கரிடம் நான்தான் உன் உண்மையான காதலன் என்று ஜியாசங்கருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை காட்டுகிறார். இப்படிப்பட்ட சூழலில் யார் உண்மையான காதலன் என்று அறிய முடியாமல் தவிக்கிறார் ஜியாசங்கர். இறுதியில் ஜியாசங்கர், மதும்கேஷ்- அர்ஜுன் அசோகன் இந்த இரண்டு பேரில் யாரை தேர்வு செய்தார் என்பதுதான் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் மீதிக் கதை.
கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் மதுமகேஷுக்கு காதலுக்காக ஏங்கும் கதாபாத்திரம் என்பதால் அதை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார். தனது காதலை சொல்ல முடியாமலும், தன் மனதிற்க்குள்ளேயே வைத்துக் கொண்டு குமுறிக்கொண்டும் இருக்கும் ஒரு விதமான அழுத்தமான கதாபாத்திரத்தை நன்றாகவே கையாண்டு ரசிக்க வைத்திருக்கிறார் மதும்கேஷ்.
கதாநாயகியான ஜியாசங்கர், அழகு தேவதையாகவே படம் முழுவதும் வலம் வருகிறார். அவருடைய அழகும் நடிப்பும் இந்தக் கதைக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருக்கின்றன. தமன்னா போன்ற முக அழகோடு சிறந்த முறையில் நடிப்பிலும் தன் திறமையை காட்டிய இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புக்கள் வர இயக்குனர்கள் இவரை அணுகலாம்.
இன்னொரு நாயகனான அர்ஜுன் அசோகனுக்கு முக்கியமான கதாபாத்திரம்.அதற்குத் தக்க நன்றாக நடித்திருக்கிறார்.
ஜியாசங்கரின் தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷ் வழக்கம் போல பாசமுள்ள தந்தையாக முத்திரை பதிக்கிறார். ஸ்காட்லாந்தில் இவர்களுக்கு உதவும் டாக்டர் பால் மாணிக்கம் என்ற பெயரில் டாக்டரைப் போல நடித்து பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் கதாபாத்திரத்தில் எம்எஸ் பாஸ்கர் நடிப்பில் அனைவரையும் கவர்ந்துள்ளார். ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜிசந்திரசேகர் தனது பங்கை நிறைவாக செய்து இருக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பழைய சாயலில் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன. பின்னணி இசையும் கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறது.
அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் ஸ்காட்லாந்த் நாட்டில் உள்ள இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை அழகியலோடு படமாக்கி இருக்கிறார்.
முக்கோண காதல் கதையை புதிய வடிவத்தில் அதுவும் ஸ்காட்லாந்த் நாட்டில் கொடுக்க முயற்சி செய்திருக்கும் இயக்குநர் ஏ.எல்.விஜய் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்து இருக்கிறார். திரைக்கதையில் ஆங்காங்கே சற்று தொய்வு ஏற்பட்டதை நன்றாகவே உணர முடிகிறது. ஒரு உண்மையான காதல் அறியும் ஒரு பெண்ணின் கதையை மையமாக வைத்து, அரிதான ஒரு மனப்பிரச்சினையை கொண்ட ஒரு கதாபாத்திரத்தின் கதையாக இப்படம் அமைந்து இருப்பதை பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.