’ஓ பட்டர்ஃப்ளை’ திரைப்பட விமர்சனம்!

22

சென்னை:

இயக்குனர் விஜய் ரங்கநாதன் எழுத்து மற்றும் இயக்கத்தில் நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் உள்ளிட்ட பலரது  நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘ஓ பட்டர்ஃப்ளை’.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

நிவேதிதா சதீஷ்-அதுல் தம்பதியினர் தங்கள் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களை மறந்து தனிமையில் இருப்பதற்காக கொடைக்கானலில் உள்ள ஒரு  மலை பங்களாவிற்கு செல்கின்றனர். அந்த பெரிய பங்களாவில் வேலைக்காரராக இருக்கிறார் நாசர். அவர் வண்ணத்துப்பூச்சிகள் மீது அலாதி பிரியம் கொண்டவராக அதனை வளர்த்து அதனோடு பேசிக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அதுல் மற்றும் நிவேதிதா  இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தாலும் தனது கடந்த கால ரகசியம் ஒன்றை தன் கணவனிடம் சொல்லத் துடிக்கிறாள். பெரிய அளவில் பிசினஸ் தொடங்குவதற்கு கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்ய வேண்டும் என்பதால் அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து அந்த நினைப்பிலேயே இருக்கிறார் அதுல். இந்த சூழலில் தனது கல்லூரியில் படித்த நண்பன் என்று கூறி சிபி சந்திரனை வீட்டிற்கு அழைத்து வருகிறார் அதுல்.  கொடைக்கானலில் சந்தித்து தன் வீட்டிற்கு அழைத்து வந்த சிபி சந்திரனை நேரில் பார்த்ததும் அதிர்ச்சியாகிறார் நிவேதிதா. சிபி சந்திரனிடம் எப்படியாவது பேசி தான் துவங்க இருக்கும் பிசினஸுக்கு பணம் முதலீடு செய்து வைத்து விட வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கிறார் அதுல்.

நிவேதிதா கல்லூரியில் படிக்கும் போது காதலித்தவர் தான் இந்த சிபி சந்திரன்  என்பதும், கடந்த கால நினைவுகளை விவரமாக அதுலிடம் சொல்ல  முயற்சி செய்யும்போது முன்னாள் காதலனே நேரில் வந்து நிற்கும்போது என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறார் நிவேதிதா. கணவன் மற்றும் முன்னாள் காதலன் இடையே சிக்கித் தவிக்கும்போது,   சிபி சந்திரன்தான் நிவேதிதாவின் முன்னாள் காதலன் என்று அதுலுக்கு தெரிய வருகிறது. அதன்பிறகு என்ன நடந்தது என்பதே ‘ஓ பட்டர்ஃப்ளை’ படத்தின் மீதிக் கதை.

கதாநாயகியாக நடித்திருக்கும் நிவேதிதா சதீஷ், தன் மனதில் ஏற்பட்ட சிக்கல்களை எப்படி தீர்ப்பது என்ற வேதனையில் உள்ள கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைத்து உணர்ச்சிகளையும் கண்களாலேயே கடத்துகிறார். தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலன், எந்த லட்சியமும் இல்லாத கணவர் என்று இருவரிடம் சிக்கித் தவிக்கும்போது அவரது நடிப்பு அசத்தல் என்றே சொல்ல வேண்டும்.

நிவேதிதாவின் முன்னாள் காதலனாக வரும் சிபி சந்திரன், கணவராக வரும் அதுல் இருவரும் கொடுத்த வேலையைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

கொடைக்கானல் பங்களாவை பார்த்துக் கொள்ளும் பொறுப்பாளராக வண்ணத்துப்பூச்சிகளை வளர்க்கும் பிரியராக வரும் நாசர், தன் அனுபவ நடிப்பால் அனைவரது மனதையும் கவருகிறார்.

துறவி சகோதரியாக வரும் லட்சுமி பிரியா சந்திரமெளலி அந்த கதாபாத்திரத்தில் பொருந்துகிறார்.
ஜோதிடம் சொல்லும் சோடாபுட்டி கிழவியாக வரும் கீதா கைலாசம் கதாபாத்திரமும் மனதை கவர்கிறது.

வைசாக் சோமநாத் இசையில் பாடல்கள் எதுவும் நினைவில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசை மட்டும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

இந்த படத்தில். ஒளிப்பதிவாளர் வேதராமன் சங்கரன் ஒளிப்பதிவில் வண்ணத்துப்பூச்சியினை காட்சிப்படுத்திய விதமும், கொடைக்கானல் பகுதியில் உள்ள இயற்கை எழில் மிகுந்த அழகான காட்சிகளையும் சிறந்த முறையில் படமாக்கி இருப்பது பாராட்டதக்கது.

எழுதி இயக்கியிருக்கிறார் விஜய் ரங்கநாதன். ஒரு பெண்ணின் மன உளைச்சல், எதிலும் முடிவெடுக்க முடியாத தடுமாற்றம் மற்றும் முன்னாள் காதலன்-கணவன் இருதரப்பு அழுத்தங்களுக்கு இடையில் சிக்கிக்கொண்ட ஒரு கதாநாயகியின் மனதை எப்படி பாதிக்கிறது என்பதை கூட்டுப் புழுவில் இருந்து உடைத்துச் சிறகடித்து பறக்கும் வண்ணத்துப்பூச்சி போல ஒரு காட்சியைக் காட்டி ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர்.

மொத்தத்தில், ‘ஓ பட்டர்ஃப்ளை’ மனதில் சிறகடிக்க கூடிய படம்.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.