சென்னை:
ஆர்.பி. டாக்கீஸ் ரமேஷ்பாபு மற்றும் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ ஜெகன் பஷீகரன் தயாரிப்பில், மறைந்த இயக்குனர் சுரேஷ் சங்கையா எழுதி இயக்கியிருக்கும் படம்தான் ‘கெணத்த காணோம்’.
இப்படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்க, ரெய்ச்சல் ரெபாகா, லவ்லின் சந்திரசேகர், ஜார்ஜ் மரியான், ரமேஷ் கிருஷ்ணன், கவிதா பாரதி, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
ராமநாதபுரம் அருகிலுள்ள கோடங்கிபட்டி என்ற கிராமத்தில் கடுமையான வறட்சியால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு அங்குள்ள மக்கள் தவிக்கிறார்கள். அதனால் மக்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். பல வருடங்களாக மழை பெய்யாததால் மழைக்காக ஏங்கி தவிக்கும் மக்கள் அங்குள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கிராமத்திற்கு நீர் வேண்டி பல முறை மனுக்களை கொடுத்துக் கொண்டு இருக்கும்போது, கடைசி முயற்சியாக கிராமத்தில் உள்ள கோயில் பூசாரி யோகிபாபு வீட்டின் முன்பு கிணறு தோண்ட முடிவு செய்கிறார்கள். அந்த கிராம மக்கள் ஒன்று கூடி நின்று கிணறு தோண்டுவதை ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கும்போது, சுமார் முப்பது அடி ஆழம் தோண்டிய பிறகு, தண்ணீர் வருவதற்குப் பதிலாக, பழங்கால உயிரினமான டைனோசர் எலும்புக்கூடு கிடைக்கிறது. இதையடுத்து தொல்லியல் துறை ஆய்வாளர்கள் அந்த இடத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அங்கு முகாமிட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள். மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அங்குள்ள மொத்த கிராம மக்களையும் அங்கிருந்து காலி செய்ய உத்தரவிடுகிறார்கள். இதனால் வேதனையடைந்த யோகி பாபு, அந்த கிராம மக்களையும், தங்களது சொந்த மண்ணையும் காப்பாற்ற களத்தில் இறங்குகிறார். அதன் பிறகு அந்த கிராம மக்களின் நிலை என்ன ஆனது.? கிராம மக்களின் வாழ்வுக்காக தண்ணீர் கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் ‘கெணத்த காணோம்’ படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் கோவில் பூசாரியாக நடித்திருக்கும் யோகி பாபு, வழக்கமான தனது உடல் மொழியால் காமெடி வசனங்களை பேசுவதை தவிர்த்துவிட்டு கிராம நலனுக்காக பாடுபடும் ஒரு உன்னதமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். தனது காதலுக்காக ஏங்கும் ஒரு எதார்த்தமான காதலனாக வாழ்ந்திருக்கிறார். ஒரு நல்ல படத்தில் தானும் இருக்க வேண்டும் என்ற நல்லதொரு எண்ணத்தில் யோகி பாபு இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பதை பாராட்ட வேண்டும்.
யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடித்திருக்கிறார். இவர்களது பெண் பார்க்கும் படலம் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது. இவர் நடிக்கும் காட்சிகள் குறைவு என்றாலும் அதை உணர்ந்து தன் கதாபாத்திரத்திரத்திற்கு உயிர் கொடுத்து இருக்கிறார்.
மாவட்ட ஆட்சியராக ஜார்ஜ் மரியம், அமைச்சராக கவிதா பாரதி, மொட்டை ராஜேந்திரன் மற்றும் தொல்லியல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரைச்சல் ரபெக்கா மற்றும் அவரது உதவியாளராக நடித்திருக்கும் ராமகிருஷ்ணன், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹலோ கந்தசாமி, தனது இயல்பான நடிப்பு மூலம் படம் பார்க்கும் அனைவரையும் சிரிக்க வைக்கிறார்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, பின்னணி இசை மூலம் ஏழை மக்களின் வலிய உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் தியாகராஜன், புழுதி படிந்த மண் மற்றும் தண்ணீர் இன்றி வாடி கிடக்கும் மக்களின் நிலையை உணர்ந்து தத்ரூபமாக படமாக்கியிருப்பது படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப்படத்தையும் இயக்கியிருக்கிறார். ஒரு கிராமத்தில் ஏற்படும் தண்ணீர் பிரசனையை மனதில் வைத்து அங்குள்ள மக்களின் வாழ்வியலையும், அவர்களின் தேவைகளையும் நகைச்சுவை கலந்து சிறப்பாக இயக்கியுள்ளார். இந்தப் படம் வெளிவருவதற்கு முன் அவர் மறைந்துவிட்டார் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.
மொத்தத்தில், ‘கெணத்த காணோம்’ படம் சமுதாய சீர்திருத்த கருத்துகளை கமெடியாக சொல்லும் படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.