’கொலைச்சேவல்’ – திரைப்பட விமர்சனம்!

53

சென்னை:

நடிகர் கலையரசன், தீபா பாலு, பாலா சரவணன், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘கொலைச்சேவல்’. இயக்குனர் துதிவாணன் இயக்கியுள்ள இந்த படத்தை ஆர்.பி. பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. பாலா தயாரித்துள்ளார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் வாழும் கலையரசன், வேறு ஒரு கிராமத்தில் வாழும் தீபா பாலுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தன் தாயின் நினைவுடன் பேசிக்கொண்டு வருகிறார். ஒரு கட்டத்தில் இவர்கள்  இருவருக்கும் காதல் மலர்கிறது. இருவரும்  வெவ்வேறு ஜாதி என்பதால் பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு வெளியூரில் வாழும் தீபா பாலு கர்ப்பமாகிறார். இந்த சூழலில் தன் மனைவி தீபா பாலுவுடன் சொந்த கிராமத்துக்கு திரும்புகிறார் கலையரசன்.  நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவியை குலதெய்வ கோவிலுக்கு சென்று பூஜை செய்ய முடிவு செய்கிறார் கலையரசன். தங்களது குடும்ப வழக்கப்படி காட்டுப்பகுதியில் இருக்கும் நிறைசூலி தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் குழந்தை எந்த வித குறையில்லாமல் பிறக்கும் என்பதால் அந்த குலதெய்வ கோவிலுக்கு செல்ல ஏற்பாடு செய்கின்றனர். குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது தீபா பாலுவுக்கு பலவித தடங்கல்கள் ஏற்படுகிறது.  இந்த தடங்கல்களால் பயமும் பதட்டமும் ஏற்பட்டு தனது கணவன் கலையரசனிடம் மீண்டும் நமது வீட்டுக்கு சென்று விடலாம் என்று கூறுகிறார் தீபா பாலு.

ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் கலையரசன்,  அவரது மனைவியை சமாதானம் செய்து அந்த நிறைசூலி தெய்வம் இருக்கும் கோயிலுக்கு அழைத்துச் செல்கிறார்.  அப்போது தீபா பாலுவின் மாமன் அந்த குலதெய்வ கோயிலுக்கு அருகில் தனது நண்பர்களுடன் இணைந்து மது குடித்து விட்டு சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.  குல தெய்வ பூஜை முடிந்து குடும்பத்தினர் புறப்பட்டு சென்றதும், அடுத்து  கலையரசனும், தீபா பாலுவும் தங்களது வீட்டிற்கு புறப்பட தயாராகிறார்கள். அந்த சமயத்தில் ஜாதி வெறி கொண்ட அந்த மாமனின் கும்பல் கலையரசனையும்,  தீபா பாலுவையும் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள். இதற்கு தீபா பாலுவின் தந்தையும் உறு துணையாக இருந்து அவர்களுக்கு உதவி செய்கிறார்.  இறுதியில் அந்த கொலையாளிகளிடமிருந்து கலையரசனும் ,தீபா பாலுவும் தப்பித்தார்களா? இல்லையா?  என்பதுதான் ‘கொலை சேவல்’ படத்தின் மீதி கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் கலையரசன், இப்படத்தில் ஒரு யதார்த்தமாக தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, கடுமையான உழைப்பின் மூலம் எளிமையாக மிக இயல்பாக நடித்து வரவேற்பு பெறுகிறார். பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் திறமை கொண்ட நடிகராக இருக்கும் கலையரசன் இப்படத்திலும் தனது நடிப்பை மிக சிறந்த முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

புதுமுக நடிகை தீபா பாலு கதாநாயகியாக நடித்திருக்கிறார். மிகுந்த அழகு. குடும்பப்பாங்கான தோற்றம் கொண்ட இவர் அழுத்தமான காட்சிகளில் ஒரு சிறந்த  நடிகையாக அந்த கர்ப்பிணி கதாபாத்திரமாகவே மாறி, பதற்றம் மற்றும் உயிருக்காக போராடும்போது வயிற்றை தள்ளிக்கொண்டு மெதுவாக அடியெடுத்து வைத்து அவர் நடக்கும்போது நம் மனதை கலங்க வைத்து விடுகிறார்.

நகைச்சுவை நடிகர் பால சரவணனுக்கு இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் காமெடி  நடிகராக அல்லாமல் குணச்சித்திர நடிகராக நடிப்பில் அசத்தி இருக்கிறார்.

கதையில் மிக முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கும்  கஜராஜ் யாரிடமும் பேசாமலே கதாபாத்திரத்தின் கொடூரமான, வெறித்தனமான முகத்துடன் வெளிப்படுத்தக் கூடிய காட்சிகளில் மிக சரியாகச் செய்திருக்கிறார்.

விஜய் சத்யா, ஆதவ் சந்திரன், அகரன் வெங்கட், விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை ஆகியோர் மண் சார்ந்த மக்களாக தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

சாந்தன் இசையமைத்திருக்கிறார். ஒரு பயங்கரமான சம்பவம் நடக்கப்போகிறது என்பதை இசையின் மூலமே உணர்த்தி ,ஒவ்வொரு காட்சிக்கும்  அதன் பின்னணி இசை பலம் சேர்த்திருக்கிறது. பழைய பாடல்களைக் கதையோட்டத்திற்குப் பயன்படுத்திய விதம் ரசிக்க வைக்கிறது.

கிராமத்துக் கதைகளை மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்யும் பி.ஜி.முத்தையா, இப்படத்தின் கதையோட்டத்தை புரிந்துக் கொண்டு கொலை சம்பவத்தை காட்சிப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது.

எழுதி இயக்கியிருக்கிறார் வி.ஆர்.துதிவாணன். தென் மாவட்டங்களில் தற்போது இந்தச் சமுதாயத்தில் நடக்கும் சாதி வெறியில், ஒரு பெண் வேறு ஜாதியில் திருமணம் செய்துக் கொண்டால் ஏற்படும் அவலங்களை தாங்கிக் கொள்ள முடியாமல்  ஆணவக் கொலை செய்யும் கொடூரங்களை நாம் ஊடகங்கள் மூலமாக பார்த்து தெரிந்துக் கொள்கிறோம்.  தென் தமிழகத்தின் பல  ஊர்களில் இன்றும் நிலவும் ஒரு கசப்பான உண்மை சம்பவங்களை சமாதானம் செய்துக் கொள்ளாமல் இயக்குனர் வி.ஆர்.துதிவாணன் இந்தக் கதையை படமாக்கியுள்ளார். இந்த சம்பவங்களை நாம் மனதில் ஏற்றுக் கொண்டாலும் ஒரு மனிதனின் மிருகத்தன்மையை தத்ரூபமாக காட்சிபடுத்தி,  வன்முறையின் உச்சமாக இருப்பது சற்று கலங்க வைக்கிறது.

மொத்தத்தில், ‘கொலைச்சேவல்’ படம் – சமூக சீரழிவுக்கு ஒரு எடுத்துக் காட்டு.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.