‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்பட விமர்சனம்!

21

சென்னை:

ஜெய் ,மீனாட்சி கோவிந்தராஜன்,சரவண சுப்பையா , கருடா ராம்,சத்யன், ஸ்ரீமன்,ஆதித்யா கதிர் மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் ‘சட்டென்று மாறுது வானிலை’

ஏ ஆர் முருகதாஸ் அவர்களிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த பாபு விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

ஒரு அமைச்சரின் மகளாக மிகவும் அழகாக இருக்கும் மீனாட்சியை பிரபல அரசியல்வாதி சரவணா சுப்பையா இரண்டாவதாக திருமணம் செய்ய முயற்சிக்கிறார்.  ஆனால் மீனாட்சி அவரை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறி மறுத்து விடுகிறார். இந்த சூழலில் மீனாட்சி ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்குகிறார்..அப்போது வெளியில் சென்று பல ஏழை குழந்தைகளுக்கு உணவு கொடுத்து உதவி செய்வதை நாயகன் ஜெய் பார்க்கிறார்.  அதனால் ஜெய்க்கு மீனாட்சி மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. இந்த சூழலில் இரண்டாவது முறையாக மீனாட்சியை மது அருந்தும் ஒரு பாரில், அவரது ஆண் நண்பருடன் சந்திக்க நேரிடுகிறது.  அப்போது மீனாட்சியின் பின்னால் சென்ற ஜெய், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கிறார்.  அவசர கதியில் காதலை வெளிப்படுத்திய ஜெய், மீனாட்சி திருமணம் செய்துக் கொள்ள சம்மதம் தெரிவித்த பிறகு திருமணமும் செய்து கொள்கிறார்.

இவர்கள் இருவரும் தேனிலவுக்காக கொடைக்கானல் சென்று பனி சூழ்ந்த இடத்தில் ஒரு சொகுசு விடுதியில் போய் தங்குகிறார்கள். அங்கு கருடா ராமுக்கு சொந்தமான அந்த சொகுசு விடுதியில் ஹிடன் கேமரா வைத்து ஒவ்வொரு அறையிலும் நடக்கும் படுக்கையறை காட்சிகளை வீடியோ எடுக்கின்றனர்.  இதே மாதிரி ஜெய்யும் மீனாட்சியும் படுக்கையில் இருக்கும்போது அந்த காட்சிகளை வீடியோ எடுக்கிறார் கருடா ராம்.  இந்த சமயத்தில் தன் மகளைக் காணவில்லை என்ற சூழலில் அமைச்சர் ஜெய்யுடன் சென்ற  மீனாட்சியை கண்டுபிடிக்க தனது அடியாட்களை அனுப்புகிறார்.

இந்த சூழலில் ஜெய் கந்துவட்டிக்காரனிடம் கடன் வாங்கிய ரவுடிகளும் மிரட்டுகிறார்கள்.   இந்த சிக்கல்களில் மாட்டிக் கொண்ட ஜெய்யின் மனைவி மீனாட்சியும் திடீரென்று காணாமல் போகிறார். தன் மனைவி மீனாட்சி எங்கு சென்றார் என்று தெரியாமல் இருக்கும்போது,  காவல்துறை ஜெய் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை கைது செய்கிறது.  இருவரும் மகிழ்ச்சியாக தங்களது திருமண வாழ்க்கையை தொடங்கிய பிறகு பல பிரச்சனைகளில் மாட்டிக் கொண்ட சூழலில் ஜெய் என்ன செய்தார் என்பதுதான் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் மீதி கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெய்,தன் வழக்கமான நடுத்தர வர்க்கத்து வாலிபனாக சிறந்த நடிப்பின் மூலம்  ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். நடனம் ஆக்ஷன் காட்சிகளிலும் விஜய்யின் பாணியிலேயே நடித்திருக்கிறார். அவர் தன் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார் ஜெய்.

கதாநாயகியாக ஜானகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன் அழகிலும், நடிப்பிலும் அனைவரையும் கவர்கிறார். இப்போதுள்ள கால கட்டத்தில் தன் வாழ்க்கையை தானே தேர்வு செய்ய நினைக்கும் இன்றைய தலைமுறை பெண்ணின் மனநிலையை அவர் யதார்த்தமாக  நடித்து அசத்தி இருக்கிறார்.

ரவுடியிடம் பணம் வாங்கிக் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொள்ளும் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் யோகிபாபு தன் காமெடி சரவெடிகளால் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். யோகி பாபுவிடம் அடி வாங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதித்யா கதிர் சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் கருடா ராம், சத்யன், ஸ்ரீமன், சரவண சுப்பையா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையைச் சரியாகவே செய்திருக்கிறார்கள்.

கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் பாடல்களை ரசிக்க வைத்திருக்கிறது. பின்னணி இசை அளவாக அமைந்து படத்திற்க்கு பலம் சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன், பாடல் காட்சிகளை ரசிகர்களின் கண்களுக்கு குளிரூட்டும் வகையில்  ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பதை பாராட்டலாம்.

தற்போதுள்ள தொழில்நுட்பம் மற்றும் இணையம் மூலம் மனிதர்களின் அந்தரங்கங்கள் எப்படி திருடப்படுகிறது, என்ற உண்மையை அனைவரும் புரிந்துக் கொள்கின்ற விதத்தில் எழுதி இயக்கியிருக்கிறார் பாபு விஜய். இப்படத்தின் கதை பழையதாக இருந்தாலும், அதனை எப்படி கொடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அதை சரியான முறையில் கொடுத்து அசத்தியிருக்கிறார் இயக்குனர். ஏ ஆர் முருகதாஸிடம் பணியாற்றியதால் இந்த  படத்தை தனது குரு ஸ்டைலில் ஆக்சன் சஸ்பென்ஸ் திரில்லர் காதல் செண்டிமெண்ட் என எல்லா அம்சங்களையும் புகுத்தி இப்படத்தை இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில் ‘ ’சட்டென்று மாறுது வானிலை’  ரசிகர்களை மகிழ்விக்கும்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.