‘அண்டர் – 18’ படத்தின் மூலம் சமூக நிதர்சனத்தை பேசும் கார்த்திக் பெருமாள் சாமி!

17

சென்னை:

சமூகத்தின் மறைக்கப்பட்ட குற்றப் பின்னணிகளையும், அதன் தாக்கத்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு சாதாரண குடும்பத்தின் உணர்வுப் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படம் ‘அண்டர் – 18’ (Under – 18). எஸ்.ஆர். புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜெகதீஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை விழா, திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் முன்னிலையில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜெகதீஸ் தயாரிக்கும் இரண்டாவது படைப்பாக உருவாகும் இந்தப் படத்தை, இயக்குநர் வெற்றிமாறனின் நீண்டகால இணை இயக்குநரான கார்த்திக் பெருமாள் சாமி இயக்குகிறார்.

இந்தப் படத்தில் கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த், கிஷோர் சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பல முன்னணி நடிகர்களும் முக்கிய வேடங்களில் இணைய உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

‘மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் வாழும் ஒரு இளைஞன், எதிர்பாராத சூழ்நிலையால் திட்டமிட்டு செயல்படும் குற்றக் கும்பலின் வலையில் சிக்கிக்கொள்கிறான். அந்த இளைஞனை மீட்டெடுக்க பெற்றோர் மேற்கொள்ளும் போராட்டமும், அதனால் உருவாகும் உணர்ச்சி மிக்க சம்பவங்களுமே ‘அண்டர் – 18’ படத்தின் மையக் கருவாக அமைந்துள்ளது’

குற்ற உலகின் மறுபக்கத்தையும், அதன் விளைவால் பாதிக்கப்படும் குடும்பங்களின் மனநிலையையும் ஆழமாக பதிவு செய்யும் இந்தப் படம், சமூக யதார்த்தத்தையும் குடும்ப உணர்வுகளையும் இணைத்து பேசும் முயற்சியாக உருவாகி வருகிறது.

படத்தின் பூஜை விழாவில் நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா, நடிகர் நட்டி, தயாரிப்பாளர்கள் ஃபைவ் ஸ்டார் கதிரேசன், ஆர்.கே. சுரேஷ், நடிகை ஸ்ரீபிரியா, இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், நடிகர் தங்கதுரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பலரும், இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமியின் நீண்டகால அனுபவம் மற்றும் வெற்றிமாறன் பள்ளியில் கற்ற சினிமா பார்வை இந்தப் படத்தை தனித்துவமான படைப்பாக மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். அதேபோல், விக்ராந்தின் அர்ப்பணிப்பும், ஐஸ்வர்யா ராஜேஷின் கதைத்தேர்வும் படத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என பாராட்டினர்.

படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஸ் பேசுகையில்,

“வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இந்தப் படம் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை தரும். கதை மீது நம்பிக்கை வைத்து இந்த முயற்சியை தொடங்கியுள்ளோம். அனைவரின் ஆதரவுடனும் இது வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி கூறுகையில், “இந்தக் கதையை பல ஆண்டுகளாக மனதில் சுமந்து வந்தேன். உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன், சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கியமான கருத்தை பேசும் படமாக இது இருக்கும். என்னுடைய முழு உழைப்பையும் இந்தப் படத்திற்காக வழங்குவேன்” என்று தெரிவித்தார்.

‘அண்டர் – 18’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. சென்னை, செங்கல்பட்டு மற்றும் ஓசூர் பகுதிகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. இயல்பான இடங்கள் மற்றும் நிஜத்தன்மை கொண்ட காட்சியமைப்புகளுடன் திரைப்படம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் குழு

தயாரிப்பு: SR Productions
தயாரிப்பாளர்: ஜெகதீஸ்
இயக்கம்: கார்த்திக் பெருமாள் சாமி
ஒளிப்பதிவு: வேல்ராஜ்
இசை: சாம் சி.எஸ்
பாடல்கள்: இளங்கோ கிருஷ்ணன், கார்த்திக் நேத்தா
பப்ளிசிட்டி டிசைன்: வி.எம். சிவகுமார்
எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர்கள்: விஷ்ணு சக்ரவர்த்தி, அகல்யா வெங்கடேசன்
புரமோஷன்ஸ்: யோகேஷ் கிருஷ்ணா
PRO: சதீஷ் (AIM)

சமூக யதார்த்தம், குடும்ப பாசம் மற்றும் குற்ற உலகின் இருண்ட பக்கங்களை இணைத்து பேசும் ‘அண்டர் – 18’, தமிழ் சினிமாவில் கவனம் பெறக்கூடிய முக்கிய படைப்பாக உருவாகும் என்ற எதிர்பார்ப்பு தற்போது திரையுலகில் எழுந்துள்ளது.