’காட்டாளன்’ திரைப்பட விமர்சனம்!

13

சென்னை:

ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன்,சுனில் , கபீர் துகான் சிங்,பார்த் திவாரி,ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர்,ஹரி சங்கர் நாராயணன்,சந்திப் ரவிராஜ், அல்போன்ஸ் புத்திரன், லோகேஷ் கனகராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “கட்டாளன்”

க்யூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ஷரீப் முகமது தயாரித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பால் ஜார்ஜ்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

கேரளா மற்றும் தமிழக எல்லையில் இருக்கும் ஆன்கோல் என்ற காட்டு பகுதியில் வாழும் அப்பாவி பழங்குடி இன மக்களை அடியாட்கள் மூலமாக சிறை வைத்திருப்பது போல அந்த கிராமத்திலேயே வைத்திருந்து அவர்கள் மூலமாகவே யானைகளை  கொன்று தந்தம் கடத்தல் தொழிலை கச்சிதமாக செய்து வருகிறார் சுனில். இதனைக் கண்டு கபீர் துகான் சிங், சுனிலுக்கு போட்டியாக யானை தந்தங்களை கடத்த முயற்சி செய்கிறார். ஆனால் சுனிலுக்கு பழங்குடி இன மக்களும், வனத்துறை அதிகாரிகளும் உதவி செய்வதால் கபீர் துகான் சிங் நினைத்த மாதிரி தந்தங்களை கடத்த முடியவில்லை. அதனால் மறைமுகமாக சுனிலை வீழ்த்த திட்டமிடுகிறார் கபீர் துகான் சிங்.

சுனில் இடத்தைப் பிடிக்க முயற்சி செய்யும் கபீர் துகான் சிங், சுனில் கடத்தும் தந்தங்களைக் காவல்துறை உதவியுடன் கைப்பற்றுகிறார். எப்படியாவது சுனிலின் தந்தம் கடத்தல்  தொழிலை துடைத்தெறிய செய்யும் முயற்சியில்  இருந்த கபீர் துகான் சிங்கால்  சுனிலின் தந்தங்கள் பறிபோய் விடுகின்றன. இதனால் மிகுந்த கோபமடைந்த சுனில் தன்னிடமிருந்து பறிபோன தந்தங்களை மீட்பதற்காக நாயகன் ஆண்டனி வர்கீஸிடம் எல்லா விவரங்களையும் சொல்லி களத்தில் இறக்குகிறார். ஆண்டனி வர்கீஸின் தந்திரமான திட்டத்தால் சுனில் இழந்த தந்தங்களை பெறுவதோடு, காவல்துறையை ஏமாற்றி விட்டு மீண்டும் தந்தங்களை கடத்துகிறார் சுனில்.

ஒரு கட்டத்தில் சுனில் மிகவும் கொடூரமான மனிதராக ஆண்டனி வர்கீஸுக்கு தெரிய வர.. இருவருக்கும் இடையில் பிரச்சனை  ஏற்பட்டு அவருக்கு எதிராக செயல்படுவதோடு, பழங்குடியின மக்கள் படும் வேதனையைக் கண்டு அவர்களுக்கு உதவியாகவும் இருக்கிறார். பழங்குடியின மக்களுடன் இணைந்து செயல்படும் ஆண்டனி வர்கீஸை ஒழிக்க வேண்டும் என்ற வெறியில் சுனில், தனது எதிரியான கபீர் துகான் சிங்குடன் சேர்கிறார். இதனை அறிந்துக் கொண்ட ஆண்டனி வர்கீஸ் அந்த வனப்பகுதி பழங்குடி மக்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு விடுதலை உணர்ச்சியை ஏற்படுத்தி கடத்தல்காரர்களுக்கு எதிராகப் போராட்டக்களத்தில் குதிக்க வைக்கிறார். அந்த போராட்டக்களத்தில் வெற்றி பெற்றது யார்? சுனில்-கபீர் துகான் சிங் இரண்டு  கடத்தல்காரர்களையும் ஆண்டனி வர்கீஸ் அழித்தாரா? என்பதுதான் “கட்டாளன்” படத்தின் மீதிக் கதை.

இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி வர்கீஸின் தோற்றமும், உடல் மொழியும் அலட்டிக் கொள்ளாத அந்த பாவனையும் படம் பார்ப்பவர்கள் மனதில் அழுத்தமாகப் பதிகின்றன. ஆக்‌ஷன் சண்டைக் காட்சிகளில் அமர்க்களப்படுத்தி அசத்தி இருக்கிறார்.

இதில் மாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுனில் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்ட இரக்கமற்ற வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். இன்னொரு வில்லனாக நடித்திருக்கும் கபீர் துகான் சிங், ரசிக்க வைக்கும் வில்லனாக கவனம் பெறுகிறார்.

எதிர்பாராத நேரத்தில்  லூசி பாத்திரத்தில் பிரவேசிக்கும் துஷாரா விஜயன், ஆண்மைத் தனமான தோற்றத்துடன் சண்டைக் காட்சிகளில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

இப்படத்தின் முடிவில் எதிர்பாராத விதத்தில் லோகேஷ் கனகராஜ் வருகிறார். அடுத்து இரண்டாம் பாகத்தில் அவர்தான் மிகப் பெரிய ஹீரோவாக வருவார் போலிருக்கிறது.

ரெனாடைவ் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகளை அமர்க்களப்படுத்தி, காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்ட யானை துரத்தல் காட்சிகளை பார்க்கும்போது திரையரங்கில் ரசிகர்களிடம் கைத்தட்டல் பெறுகிறார்.

‘கேஜிஎஃப்’ புகழ் ரவி பஸ்ரூரின் பின்னணி இசை தான் இப்படத்திற்கு பெரிய பலத்தைக் கொடுத்து இருக்கிறது. காடுகளுக்குள் நடக்கும் சண்டைக் காட்சிகளுக்கு அவர் கொடுத்துள்ள அதிரடியான இசை திரையரங்கை அதிர வைக்கிறது.

யானை தந்தம் கடத்தல் என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கருவாக இருந்தாலும்,  காடுகளின் வளத்தை கொள்ளையடிக்கும் மனித பேராசையும், அதனால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் வாழ்க்கையையும் படம் பேசுகிறது. கே.ஜி.எப்’, ’புஷ்பா’ போன்ற படங்களின் பாதிப்பில் இப்படி ஒரு படத்தை இயக்குநர் பவுல் ஜார்ஜ் இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், ‘காட்டாளன்’  படத்தை ரசிக்கலாம்.

ரேட்டிங் 3/ 5.

RADHAPANDIAN.