’ஹபீபி’ திரைப்பட விமர்சனம்!

12

சென்னை:

நேசம் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஷாகுல் ஹமீத், கோவை இப்ராஹிம், ஜிகேஎஸ் பிரதர்ஸ் சார்பில் வி.குணசேகரன், வி.கருப்புச்சாமி, வி.சங்கர், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்திருக்கும் ‘ஹபிபீ’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மீரா கதிரவன்.

இப்படத்தில் கஸ்தூரி ராஜா, ஈஷா,மாளவிகா மனோஜ், தனஸ்ரீ ,அனுஸ்ரேயா ராஜன், ஜெயஸ்ரீ பினுராஜ், அருள்குமார்,ரேகா குமணன், இஸ்மத் பானு, மலர் கைஜென், சன் ஷாகுல், மாஸ்டர் தீஹான், தீக்ஷா ஸ்ரீ மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

தென் தமிழக முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியல், கலாச்சாரம், காதல், குடும்ப உறவுகளைப் பற்றி இதுவரையில் யாரும் கதை சொல்லி படம் எடுத்ததில்லை. கடையநல்லூர் அருகே இருக்கும் முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற பகுதிதான் இந்தப் படத்தின் கதைக்களம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் நெசவு தொழிலை தனது உயிராக நினைக்கும் மூத்த நெசவாளர் முகமது யூசுப் என்கிற கஸ்தூரிராஜா நெசவுத்தொழில் வெறும் தறி என்பது நினைக்காமல் அதன் பாரம்பரியம், அடையாளம், வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  இந்த சூழலில் நவீன விசைத்தறிகளின் வருகையாலும் கார்ப்பரேட் கம்பெனிகளாலும் நெசவுத் தொழில் அழிக்கின்ற சூழ்நிலை உருவாகிறது ஆனால் நெசவுத்தொழிலில் ஏற்படும் கடுமையான நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் அதை தெய்வத்துக்கு நிகராக நினைத்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார் கஸ்தூரிராஜா.  இந்த சமயத்தில் தனது குடும்பத்தின் வறுமையை போக்குவதற்காக கஸ்தூரிராஜா தனது தம்பியை வளைகுடா நாட்டிற்கு வேலை தேடி அனுப்புகிறார்.

வெளிநாட்டில் இருந்து பணம் வந்தாலும் குடும்பத்திற்கு ஒரு நிம்மதியை கொடுத்தாலும் தன் மண்ணையும் தொழிலையும் விட்டு பிரிவதை கஸ்தூரிராஜாவால் ஏற்க முடியவில்லை. தம்பி வெளிநாட்டில் வேலை செய்தாலும், கடைசி வரை நெசவுத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் மட்டும் தான் வாழ வேண்டும் என்பதில் கஸ்தூரிராஜா உறுதியாக இருக்கிறார். இந்நிலையில் குடும்ப சூழல் காரணமாக கஸ்தூரிராஜாவின் மகன் ஈஷா என்கிற அபுதாஹிரையும் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்யுமாறு உறவினர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். ஆனால், வெளிநாட்டுக்கு சென்று விட்டால் தனது பள்ளி காதலி மாளவிகா மனோஜை சந்திக்க முடியாமல் போய்விடும் என்பதாலும், குடும்பத்தை பிரிய மனம் இல்லாததாலும் கஸ்தூரிராஜாவின் மகன் ஈஷா வெளிநாட்டுக்கு செல்லாமல் சொந்த ஊரிலேயே கிடைத்த வேலையை செய்து கொண்டிருக்கிறார்.

மிகுந்த  கட்டுப்பாடுகள் நிறைந்த முஸ்லிம் சமுதாயத்தில் வாழ்வதால் ஈஷா தனது காதலை மாளவிகா மனோஜிடம் சொல்வதற்காக இரவு நேரத்தில் அவரது இல்லத்திற்கு செல்கிறார். அப்போது அவர் பொதுமக்களிடம் சிக்கிக்கொள்கிறார்.  அதன் பிறகு ஈஷாவின் வாழ்க்கையில் மட்டும் இன்றி, அவரது குடும்பத்திலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.அவை என்ன ?  இறுதியில் காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதுதான் “ஹபீபி” படத்தின் மீதிக் கதை.

முகமது யூசுப் என்கிற கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் கஸ்தூரிராஜா. அவர் நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாத அளவுக்கு அந்த பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்.  ஒரு குடும்ப தலைவராக குடும்பத்தின் மீதான அக்கறை, தான் நேசிக்கும் நெசவுத் தொழில் அழிக்கப்படும் போது வெளிப்படுத்தும் ஏமாற்றம், மகனின் நிலையை கண்டு கதறி அழும் காட்சிகளிலும் நடிப்பில் அசத்தி இருக்கிறார்.

கதாநாயகன் ஈஷா,இளமைத் துடிப்புடன் வலம் வருகிறார்.குடும்பச் சூழலில் காதல் எனும்போது ஏற்படும் நிலைகளை பள்ளி பருவத்திலும், காதல் பருவத்திலும் எதார்த்தமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதை பாராட்டலாம்.

நிலோபர் நிஷாவாக வரும் மாளவிகா மனோஜ் தன் விழி அசைவுகளில் மொழி பேசி ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். அவரது அழகும் பேசும் கண்களும் கதாபாத்திரத்திற்கு பெரிதும் பலமாக இருக்கின்றன.

தனஸ்ரீ அழகு மட்டுமல்ல அறிவிலும் சிறந்து விளங்கும் ஒரு பெண்ணாகவும், கஸ்தூரிராஜா தம்பி மனைவி சாலிஹா பீவியாக வரும் அனுஸ்ரேயா ராஜன், மம்மது பாத்திரத்தில் வரும் ஜெயஸ்ரீ பினுராஜ், ஷேக் உதுமானாக வரும் அருள்குமார், ராபியாவாக வரும் ரேகா குமணன் போன்றவர்களும் நினைவில் நிற்கிறார்கள். நிலோபர் அம்மாவாக வரும் மலர் கைஜென், பர்வினின் தந்தையாக வரும் சன் சாகுல் போன்று குழந்தை நட்சத்திரமாக வரும் மாஸ்டர் திகான் , தீக்ஷாஸ்ரீ போன்றவர்களும் படம் பார்ப்பவர்கள் மனதை கவரும்படி தங்களின் எதார்த்தமான நடிப்பை  திரையில் கொண்டு வந்து ரசிக்க வைத்துள்ளனர்.

மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவினை அபாரம்  என்றே சொல்ல வேண்டும். .ஒவ்வொரு காட்சியையும் அவர் வடிவமைத்திருப்பதை பார்க்கும்போது  படத்திற்க்கு ஒரு காவியத்தன்மை வந்திருக்கிறது.

சாம் சி.எஸ்.சின் இசையில் பாடல்கள் மனதை வருடுகின்றன. பின்னணி இசை படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகளுக்குப் பிரம்மாண்ட பலம் சேர்த்துள்ளது.

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் மீராகதிரவன் இது ஒரு திரைப்படம் என்று நினைக்காமல்,ஒட்டுமொத்த மக்களுக்கும் இஸ்லாமிய வாழ்வியலை எடுத்துச் சொல்லிவிடவேண்டும் என்கிற  நோக்கத்தில்  வழக்கமான திரைக்கதை பாணியில் கதை சொன்னாலும், மக்களிடம் தான் கொண்டு சேர்க்க நினைத்ததை மிக சரியாக முறையில் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். வெளிநாட்டில் இருக்கும் கணவன் தன் மனைவிக்கு கேசட்டில் தன்னுடைய பேச்சை பதிவு செய்து அனுப்பி வைக்கின்ற அந்தக் காலத்து காதலையும், வெளிநாட்டில் இருக்கும் இளைஞர்களின் மனைவிகள் சொந்த ஊரில் படும் கஷ்டங்களையும் மிக யதார்த்தமாக படமாக்கி இருப்பதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

மொத்தத்தில், ’ஹபீபி’  பல விருதுகளை பெறுகின்ற படம்.

ரேட்டிங் 3.5/5.

RADHAPANDIAN.