CHENNAI:
இந்திய சினிமா ஆவலுடன் எதிர்பார்த்திருந்த கமல்ஹாசன் – ரஜினிகாந்த் கூட்டணியின் புதிய வரலாறு; சென்னையில் கோலாகலமாக தொடங்கிய ‘தர்மன்’ படப்பிடிப்பு!
சென்னையில் இன்று இந்திய திரையுலகின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாகக் கருதப்படும் நிகழ்வு நடைபெற்றது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களின் இதயங்களில் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கும் கமல்ஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், முதன்முறையாக தயாரிப்பாளர் – கதாநாயகன் கூட்டணியில் இணையும் திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.
இந்த அறிவிப்புடன் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் போட்டியைத் தாண்டி நட்புக்கும் பரஸ்பர மரியாதைக்கும் அடையாளமாக விளங்கும் கமல்ஹாசன் – ரஜினிகாந்த் உறவு, தற்போது ‘தர்மன்’ திரைப்படத்தின் மூலம் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. கடந்த 46 ஆண்டுகளாக தரமான திரைப்படங்களை வழங்கி வரும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பது இதுவே முதல் முறை என்பதும் இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமாகும்.
‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ போன்ற வெற்றிப் படங்களின் மூலம் இளம் தலைமுறையின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, இந்த பிரமாண்டத் திரைப்படத்தை இயக்குகிறார். உலகம் முழுவதும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
படத்தில் ரஜினிகாந்துடன் முன்னணி நடிகை சிம்ரன் மற்றும் பல மொழித் திரைப்படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற ராஷி கன்னா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தொழில்நுட்ப ரீதியாகவும் ‘தர்மன்’ மிகப்பெரிய அணியை கொண்டுள்ளது. தேசிய விருது பெற்ற சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பரிவ், ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி, தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் ராஜ்குமார், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், கலை இயக்குநர் அண்ணாதுரை உள்ளிட்ட திறமையான கலைஞர்கள் படத்தில் இணைந்துள்ளனர். மேலும், உலகளாவிய பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி இணைத் தயாரிப்பாளராக பங்கெடுத்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற படத்தின் தொடக்க விழா மற்றும் முதற்கட்ட படப்பிடிப்பு நிகழ்வில் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கலைப்புலி எஸ். தாணு, அன்புச்செழியன், ஆர்.கே. செல்வமணி, லிங்குசாமி, சன் நெட்வொர்க் CTO கண்ணன், செண்பகமூர்த்தி, தமிழ் குமரன், ஜியோ ஸ்டார் நிறுவனத்தின் கிருஷ்ணன் குட்டி, பாலசந்திரன், பிரதீப் மில்ராய் பீட்டர், சரேகமா நிறுவனத்தின் ஆனந்த், சரவணன் வினோத் உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.
கமல்ஹாசனின் தயாரிப்பிலும், ரஜினிகாந்தின் நடிப்பிலும் உருவாகும் ‘தர்மன்’, ஒரு சாதாரண திரைப்படமாக அல்லாமல், இந்திய சினிமாவின் இரண்டு மாபெரும் ஆளுமைகள் இணையும் வரலாற்றுச் சின்னமாகவே ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. படத்தின் அறிவிப்பே இத்தனை வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ‘தர்மன்’ அடுத்த கட்டங்களில் மேலும் என்னென்ன ஆச்சரியங்களை வழங்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்களிடையே உச்சத்தை எட்டியுள்ளது.