‘ஹபீபி’ வெற்றிக்குப் பிறகு புதிய அத்தியாயம் தொடங்கும் நடிகர் ஈசா; “என் வெற்றியின் முழுப் பெருமை இயக்குநர் மீரா கதிரவனை சேரும்”

25

சென்னை:

முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் கவனத்தையும், விமர்சகர்களின் பாராட்டையும் ஒருசேர பெற்றிருக்கும் இளம் நடிகர் ஈசா, தற்போது தமிழ் திரையுலகில் நம்பிக்கைக்குரிய புதிய முகமாக உருவெடுத்து வருகிறார். இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படம் அவருக்கு சிறந்த அறிமுகமாக மட்டுமல்லாமல், அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கான கதவையும் திறந்து வைத்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஈசா, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு பயிலும் மாணவர். தேசிய அளவிலான தடகள வீரராக பல பதக்கங்களை வென்றுள்ள அவர், விளையாட்டில் கற்ற ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் விடாமுயற்சியையே தனது நடிப்புப் பயணத்திலும் வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

திரைத்துறையில் தனது முதல் அனுபவத்தை தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம் பாவா இயக்கத்தில் உருவான ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதன் மூலம் பெற்றார். அந்த அனுபவம் திரைப்படத்தின் தொழில்நுட்பம் மற்றும் நடிப்பு குறித்த புரிதலை அதிகரித்ததாக அவர் தெரிவிக்கிறார்.

அதன் பின்னர் நடைபெற்ற ‘ஹபீபி’ திரைப்படத்தின் நடிகர் தேர்வில் பங்கேற்ற ஈசா, பல மாதங்களுக்குப் பிறகு கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு தீவிர நடிப்பு பயிற்சிகள், ஒர்க்ஷாப்கள் மற்றும் ரிகர்சல்கள் மூலம் கதாபாத்திரத்திற்காக முழுமையாக தன்னைத் தயார்படுத்திக் கொண்டார்.

இந்தப் படத்தில் வெவ்வேறு வயது மற்றும் மனநிலைகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், அதற்காக உடல் எடையை பலமுறை மாற்றி அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். தனது தோற்றம், உடல்மொழி, குரல் மற்றும் உணர்ச்சி வெளிப்பாட்டில் காட்டிய மாற்றங்கள் ரசிகர்களிடமும், திரையுலகினரிடமும் பாராட்டைப் பெற்றுள்ளன.

‘ஹபீபி’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளைப் பார்த்த பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்கள், ஈசாவின் இயல்பான நடிப்பையும், கதாபாத்திரத்திற்காக அவர் எடுத்த முயற்சியையும் பாராட்டியுள்ளனர்.

தனது வெற்றி குறித்து பேசும் ஈசா, “இன்று எனக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம், பாராட்டு, புகழ் அனைத்திற்கும் முழுக் காரணம் இயக்குநர் மீரா கதிரவன்தான். ஒரு புதுமுக நடிகரை நம்பி இவ்வளவு வலுவான கதாபாத்திரத்தை வழங்கிய அவர் மீது நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். இனி நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவர் வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவதே என் பொறுப்பு,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஈசா தற்போது இரண்டு புதிய திரைப்படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். வணிக அம்சங்களுடன் சமூகப் பொறுப்பையும் இணைக்கும் கதைகளாக அவை உருவாகி வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நல்ல உள்ளடக்கத்துடன் உருவாகும் சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு வெளியீட்டுக்கு முன்பே அதிக ஆதரவு கிடைக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் ஈசா பகிர்ந்துள்ளார். தரமான படைப்புகளுக்கு ரசிகர்களும், திரையுலகமும் தொடர்ந்து ஆதரவளித்தால் தமிழ் சினிமா மேலும் வளரும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

நடிகராக மட்டுமல்லாமல், விளையாட்டு வீரராகவும் தொடர்ந்து அறியப்பட வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும், நல்ல கதைகள் மற்றும் சவாலான கதாபாத்திரங்கள் மூலம் நீண்டகால பயணத்தை அமைத்துக் கொள்ள விரும்புவதாகவும் ஈசா தெரிவித்தார்.