‘பியார் பிரேமா கல்யாணம்’ – திரைப்பட விமர்சனம்!

10

சென்னை:

‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ படங்களை இயக்கிய இளன், ‘பியார் பிரேமா கல்யாணம்”  என்ற இப்படத்தை இயக்கியதுடன் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். சான்வீ மேக்னா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ராதிகா சரத்குமார், செந்தில், எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல், யோகி பாபு, மாறன் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் வருகின்றனர். திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

தன் குடும்ப சூழ்நிலைக்காக துபாயில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இளனுக்கு  வெளிநாடு வாழ்க்கை பிடிக்காத சூழ்நிலையில் தனது சொந்த ஊர் வருகிறார். அப்போது இளனுக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் பெண் பார்க்க  தொடங்குகிறார்கள்.. ஆனால் இளனுக்கு  சமூக வலைதளங்களில் பிரபலமாக விளங்கி வரும்  சான்வி மேக்னா மீது காதல் ஏற்படுகிறது.  இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதல் செய்தாலும் இறுதியில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் சான்வி மேக்னா திருமணத்திற்கு பிறகு புகுந்த வீடு செல்ல மறுக்கிறார்.  இதனால் இளனின் வாழ்க்கையை மட்டுமல்லாமல் இரு குடும்பங்களின் வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றுகிறது. ஒன்றும் புரியாமல் தவித்த இளன் வீட்டோடு மாப்பிள்ளையாக சான்வி மேகனா வீட்டிற்கு செல்கிறார்.  அவருக்கு சரியான முறையில் எந்த வேலையும் கிடைக்காததால்,சான்வி மேக்னா வீட்டில் இளன் அங்குள்ள வீட்டு வேலைகளை செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் இளன் ஒரு வேலைக்காரர் போல அந்த குடும்பத்தில் உள்ள எல்லா குடும்ப பொறுப்புகளையும் சுமக்க வேண்டி வருகிறது. இந்த விஷயம் இளனின் தாயார் கீதா கைலாசத்திற்கு தெரிய வருகிறது.

இதனால் வேதனை ஏற்பட்டு கீதா கைலாசம் அந்த வீட்டிலிருந்து தனது மகன் இளனை தங்களது வீட்டிற்கு அழைத்து வர முயற்சிகள் செய்கிறார். இதனால் புகுந்த வீட்டில் மருமகள் மட்டும்தான் வேலை செய்ய வேண்டுமா? தன்  மாமனார் வீட்டில் மருமகன் வேலை செய்யக்கூடாதா? என்ற கேள்வியும் பல பிரச்சனைகளும் எழுகிறது.  திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் எதிர்கொள்ளும் குடும்பச் சூழ்நிலைகளை, அதேபோல் ஒரு ஆண் எதிர்கொண்டால் அவனது மனநிலை எப்படி இருக்கும் என்ற கேள்வியை மையமாக கொண்டு எடுத்து இருக்கும் இந்தப் படம்தான் ‘பியார் பிரேமா கல்யாணம்’

இப்படத்தில் நடிகராகவும் இயக்குநராகவும் களமிறங்கியிருக்கிறார் இளன். காதலில் விழும் இளைஞனாகவும்,  திருமணத்திற்குப் பிறகு அவர் எதிர்கொள்ளும் அதிர்ச்சி, குழப்பம், கோபம், ஏமாற்றம் என கதாபாத்திரத்தின் பல்வேறு மனநிலைகளை வெளிப்படுத்தும் இடங்களில் இளம் வயதினர்களை கவரும் விதத்தில் மிக சிறப்பாகவே நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். மாமியார் வீட்டில் ஒரு அடிமை போல் நடத்தும் போது மன வேதனையுடன் தவிக்கின்ற காட்சிகளில் ஒரு அனுபவம் உள்ள நடிகராக அசத்தி இருக்கிறார்.

அதேபோல இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள சான்வி மேக்னா தன் சொந்தக் காலில் நிற்க விரும்பும் பெண்ணாக வருகிறார்.  குடும்பத்துக்குள் உருவாகும் சிக்கல்களை சமாளிக்கும் ஒரு பெண்ணாகவும், தாயையும் காதலனையும் விட்டுக் கொடுக்க முடியாமல்  தவிக்கும் கட்டங்களிலும் நன்றாக தன் நடிப்பை வெளிப்படுத்திள்ளார்.அவரது கதாபாத்திரம் சமூக வலைதள உலகில் வாழும் இன்றைய தலைமுறை பெண்ணை பிரதிபலிக்கின்ற அளவிற்கு நடிப்பு அபாரம்.

கதாநாயகியின் தாயாராக சந்திரா கதாபாத்திரத்தில் வரும் ராதிகா சரத்குமார், தன் மருமகனை சிறிது, சிறிதாக அடிமைப்படுத்துவது கதைக்கு விறுவிறுப்பு ஏற்படுத்துகிறது. அதேபோல் கதாநாயகன் இளனின் தாயாக நடித்துள்ள கீதா கைலாசம் பாசமுள்ள தாயாக தனது மகனின் நிம்மதிக்காக எது வேண்டுமானாலும் செய்யும் கதாபாத்திரத்திலும், இளனின் கண்டிப்பான தந்தையாக வரும் எம்.எஸ். பாஸ்கர் ஒரு நடுத்தர வர்க்கத் தந்தையாகவும் மிக யதார்த்தமாக நடித்து இருக்கிறார்.நீண்ட இடைவெளிக்குப் பின் வயதான தாத்தா பாத்திரத்தில் வருகிறார் செந்தில். ஒரு அமைதியான மாமனாராக இளங்கோ குமரவேல் நடித்திருக்கிறார்.

இதில் யோகி பாபுவும் காமெடி மூலம் ரசிக்க வைக்க முயற்சி செய்தாலும், அவரது காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை.

தினேஷ் கே. பாபுவின் ஒளிப்பதிவு படத்திற்கான நிகழ்விடங்கள் பின்புலங்கள் எல்லாம் வண்ணமயமாக அமைத்து பெரிய அளவில் பலம் சேர்த்து இருக்கிறது.

யுவன் ஷங்கர் ராஜா இசை என்றாலே ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கும். இளமைத் துள்ளலோடு  பாடல்களும் பின்னணி இசையும் ஒலித்தாலும் ரசிக்க முடியவில்லை.

இப்படத்தில் இளன் கதாநாயகனாகவும் இயக்குநராகவும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார். இப்படத்தின் மைய கதையே ஒரு பெண் திருமணம் செய்துகொண்ட பிறகு, தனது பெற்றோர் வீட்டை விட்டு கணவன் வீட்டுக்குச் செல்வது இயல்பான விஷயம் என்றால், அதே சூழலில் ஒரு ஆண் மனைவியின் வீட்டுக்குச் சென்று வாழ வேண்டிய நிலை ஏற்பட்டால், அந்த வாழ்க்கையை அவன் எப்படி எதிர்கொள்வான்? என்பதையும், காதலித்தவர்கள் திருமணமான பிறகு எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளை மையமாக வைத்து ஒரு நல்ல முயற்சியாக இப்படத்தை இளன் இயக்கி இருப்பது பாராட்டத்தக்கது.

இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக ஆகஸ்ட் 21ஆம் தேதி இன்று வெளியாகிறது.

மொத்தத்தில் ‘பியார் பிரேமா கல்யாணம்” ஒரு கலகலப்பான காதல் கதையாக இருந்தாலும் தற்போதுள்ள இளம் வயது தம்பதிகள் ரசிக்கின்ற ஒரு அருமையான படம்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.