சென்னை:
ரிஷிகாந்த் ,அனுஷ்கா அனில் குமார், சேத்தன் , ஏ. வெங்கடேஷ், பகவதி பெருமாள் ,அப்துல் லீ, ஷெல்லி கிஷோர் ,சங்கீதா பாலன் ,பானுப்ரியா, சுமித்ரா தேவி எல், வர்ஷினி கார்மேகம் ,கார்த்திகேயன் வேலன், கௌஷிக் கபிலன் நடித்துள்ள படம்தான் “மொத ராத்திரி”. இப்படத்திற்கு கதை எழுதி இயக்கியுள்ளார் ராஜா கருப்பசாமி .
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
தென் மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடியைச் சேர்ந்தவர் நாயகன் ரிஷிகாந்த். இவருக்கு காதலில் தோல்வி ஏற்பட்டதன் காரணமாக திருமணமே வேண்டாம் என்ற முடிவில் துபாய்க்குச் சென்று, அங்கேயே இருந்து ஐந்து ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் அவரது குடும்பத்தில் உள்ளவர்கள் “உன் சகோதரியின் மகனுக்கு காது குத்து நடக்க இருப்பதால் தாய்மாமன் என்ற முறையில் நீ அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்று தகவல் கொடுக்கின்றனர். இதனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஊருக்கு வர, அவருக்கே தெரியாமல் திருமண ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. குடும்பத்தாரின் கட்டாயத்தினால் திருமணத்திற்கு சம்மதிக்கிறார். அவருக்கும், நாயகி அனிஷ்மா அனில்குமாருக்கும் திருமணம் நடக்கிறது.
அவருக்கு மனைவியாக வந்த அனிஷ்மாவுடன் முதல் இரவு அறையில் பேசத் தொடங்குகிறார் ரிஷிகாந்த். ஆனால் அனிஷ்மா திடீரென்றுசிறுநீர் கழிக்க வேண்டும் என்று சொல்லி எழுந்து பாத்ரூமுக்குள் போய் கதவை மூடிக்கொள்கிறார். பாத்ரூமுக்கு சென்ற அனிஷ்மா நீண்ட நேரம் ஆகியும் வராததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போய் பார்த்தால் அவர் ஜன்னல் வழியாகத் தப்பிக்க நினைக்கிறார். அதன்பிறகு தான் அனிஷ்மா வேறொருவரைக் காதலிக்கிறார் என்ற விவரம் ரிஷிகாந்துக்குத் தெரியவருகிறது. தன்னால் அவளது வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்று நினைக்கும் ரிஷி காந்த் அனிஷ்மாவை காதலனுடன் சேர்த்து வைக்க முடிவெடுக்கிறார். இறுதியில் அனிஷ்மாவை அவரது காதலனுடன் சேர்த்து வைத்தாரா? இல்லையா? என்பதுதான் “மொத ராத்திரி” படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனாக, மணமகன் மருது என்ற மருதநாயகமாக ரிஷிகாந்த் நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்தை உணர்ந்து எந்தவித அலட்டலும் இல்லாமல் இயல்பாகக் கையாண்டிருக்கும் அவர் மிக சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார். படத்தின் கதைக்கேற்ப தன்னுடைய பங்களிப்பை கச்சிதமாக அளவாக கொடுத்து அனைவரையும் ரசிக்க வைத்து இருக்கிறார்.
கதாநாயகியாக, மணமகள் முத்துச்செல்வியாக அனிஷ்மா அனில்குமார் நடித்திருக்கிறார். விக்ரம் பிரபுவின் ‘சிறை’ படத்துக்குப் பிறகு அனிஷ்மாவுக்கு இதில் அழுத்தமான கதாபாத்திரம். என்றாலும் அதை உணர்ந்து பல்வேறு உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
கோயில் பூசாரியாக வரும் சேத்தன், பக்ஸ், சங்கீதா பாலன், பானுப்பிரியா, வர்ஷினி கார்மேகம், அப்துல் லீ, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் சுரேந்தரன் பரஞ்சோதி இப்படத்தின் காட்சிகளுக்கு தகுந்தவாறு ஒரே நாள் இரவில் நடக்கும் இந்தக் கதைக்காக நேர்த்தியான ஒளியமைப்பு செய்து கவனிக்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் பரத் சங்கரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். பின்னணி இசை காட்சிகளின் உணர்வுகளோடு பொருந்திப் பயணிக்கிறது.
ஒரு கிராமத்து பின்னணியில் இயல்பான காமெடியோடு குடும்பம், காதல், திருமணம் மற்றும் சாதி குறித்த உரையாடல்களை ரசிகர்கள் புரிந்துக் கொள்ளும் விதத்தில் இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜா கருப்பசாமி. அதுவும் ஒரு திருமண வீட்டு நிகழ்வுகளை மட்டுமே வைத்துக் கொண்டு ஒவ்வொரு கதாபாத்திரங்கள் மூலம் இயல்பாக காட்சிகளை புகுத்தி குடும்பத்துக்குள் இருக்கும் சின்னச் சின்ன மோதல்கள் என அனைத்தையும் செயற்கைத்தனம் இல்லாமல் திரையில் கொண்டு வந்து நிரூபித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் ராஜா கருப்பசாமி.
மொத்தத்தில், இந்த ’மொத ராத்திரி’ ஒரு பொழுது பொக்கு படம் என்பதில் ஐயமில்லை.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.