பிரபு – விஜய் வர்மா கூட்டணியில் ‘ரைட்டர்’ என்ற புதிய திரைப்படம் தொடக்கம்!

6

சென்னை:

சென்னை: Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. ‘ரைட்டர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார்.

இளைய திலகம் பிரபு மற்றும் ‘பிக்பாஸ் 7’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான விஜய் வர்மா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டார்க் ஹியூமர் பின்னணியில், த்ரில்லர் மற்றும் காமெடி கலந்த வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது.

விஜய் வர்மாவுக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவுள்ளார். தயாரிப்பாளர் ராகுலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் முத்துக்குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி, அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் தொடக்க விழாவில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

புதிய தலைமுறையுடன் இணையும் பிரபு

விழாவில் பேசிய நடிகர் பிரபு, இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் கூறிய கதை தன்னை வெகுவாகக் கவர்ந்ததாகத் தெரிவித்தார். இதுவரை பார்க்காத வித்தியாசமான கதைக்களத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் இணைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

புதிய தலைமுறை படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டதற்கும் அவர் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். தயாரிப்பாளர் ராகுலின் திரைப்பட உருவாக்கத் திறமையையும் பாராட்டிய பிரபு, இப்படம் அனைவருக்கும் நல்ல திரைப்பட அனுபவத்தை வழங்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

“பல ஆண்டுகளாக நடந்த பயணம்; இப்போது படமாகிறது” – விஜய் வர்மா

இப்படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த விஜய் வர்மா, இந்தப் படத்திற்கான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகக் கூறினார். நீண்ட கால முயற்சிகளுக்குப் பிறகு தற்போது படம் உருவாகும் நிலைக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

“வித்தியாசமான அணுகுமுறை கொண்ட படம்” – பா.ரஞ்சித்

இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், ஃபிராங்க்ளின் ஜேக்கப் தன்னுடன் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் என்றும், அவரது புதிய முயற்சி வழக்கமான திரைப்படங்களிலிருந்து மாறுபட்டதாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இளம் தலைமுறை படைப்பாளிகள் தங்களுக்கான தனித்துவமான கதைகளையும் புதிய களங்களையும் உருவாக்க வேண்டும் என்பதற்கு இப்படம் ஒரு முக்கியமான முயற்சி எனக் குறிப்பிட்ட அவர், ‘ரைட்டர்’ திரைப்படம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், ஃபிராங்க்ளினுக்கு தமிழ் சினிமாவில் தனித்துவமான இடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.யுவன் சங்கர் ராஜாவின் இசையும், இளைய திலகம் பிரபுவின் பங்களிப்பும் இப்படத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என்றும் அவர் கூறினார்.

“நல்ல இயக்குநருக்கு படம் அமையாமல் இருப்பது வன்முறை” – அருண் மாதேஸ்வரன்

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசுகையில், தயாரிப்பாளர் ராகுலை பல ஆண்டுகளாகத் தெரியும் என்றும், அவரது வளர்ச்சியை நேரில் பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார். ஃபிராங்க்ளின் ஜேக்கப் ஒரு திறமையான இயக்குநர் என்றும், அவரது கதைகளில் தனித்துவமான அணுகுமுறை இருப்பதாகவும் கூறிய அருண் மாதேஸ்வரன், ஒரு நல்ல இயக்குநருக்கு படம் உருவாகாமல் இருப்பதை மிகப்பெரிய வன்முறையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டார். பிரபு – ஃபிராங்க்ளின் கூட்டணி எதிர்பாராததொரு சுவாரஸ்யமான கூட்டணி என்றும், யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

“பிரபு சாரை வித்தியாசமான கோணத்தில் காட்ட வேண்டும்” – ஃபிராங்க்ளின் ஜேக்கப்

இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் பேசுகையில், இப்படத்தின் கதை குறித்து தயாரிப்பாளர் ராகுலிடம் பேசியபோது அவருக்கு கதை பிடித்ததால், இருவரும் இணைந்து இப்படத்தை உருவாக்க முடிவு செய்ததாகத் தெரிவித்தார். பிரபுவை இப்படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்ற யோசனையை முதலில் தயாரிப்பாளர் ராகுல்தான் முன்வைத்ததாகவும், பிரபுவின் தனித்துவமான நடிப்பு பாணியை இதுவரை பார்க்காத வகையில் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் கதையை எடுத்துச் சென்றதாகவும் அவர் கூறினார். கதையைக் கேட்ட பிரபு மிகுந்த ஆர்வத்துடன் படத்தில் நடிக்க சம்மதித்தது தங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்ததாகவும் ஃபிராங்க்ளின் தெரிவித்தார்.

“பிரபுவுடன் நடிப்பது நீண்ட நாள் கனவு” – ரமேஷ் திலக்

நடிகர் ரமேஷ் திலக் பேசுகையில், இப்படத்தில் பணியாற்றும் பலரும் தனது நெருங்கிய நண்பர்கள் என்றும், இயக்குநர் ஃபிராங்க்ளினுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில், இளைய திலகம் பிரபுவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும், அது இப்படத்தின் மூலம் நிறைவேறியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

யுவன் சங்கர் ராஜா இசை

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். P.C. ஸ்டன்ட்ஸ் சண்டைப் பயிற்சியை கவனிக்கிறார். யுகபாரதி பாடல்களை எழுதுகிறார்.

நவ்ஷாத் அகமது ஆடை வடிவமைப்பையும், சக்தி வெங்கட்ராஜ் M கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர். வான்கோ போஸ்டர் வடிவமைப்பை கவனிக்கிறார். ‘DC’ திரைப்படத்தில் பணியாற்றிய பல தொழில்நுட்பக் கலைஞர்களும் இப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது. படத்தின் தலைப்பு மற்றும் மேலும் பல முக்கிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.