காயத்தையும் கடந்து களத்தில் இறங்கும் ராஷ்மிகா… ‘மைசா’வாக வரும் போராட்டப் பெண்!

7

CHENNAI:

ராஷ்மிகா மந்தனாவின் வழக்கமான திரைப்பிம்பத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை பார்க்க ரசிகர்கள் தயாராகலாம். கோண்ட் பழங்குடியினப் பெண்ணாக அவர் நடிக்கும் ‘மைசா’ திரைப்படம், ஆக்‌ஷன் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இப்படம் நவம்பர் 27, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கும் ‘மைசா’வை அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் முதல் பார்வை வெளியானபோதே ராஷ்மிகா ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள ரிலீஸ் தேதி போஸ்டர் அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. கையில் நீண்ட ஈட்டியுடன், முகத்தில் போர்க்காயங்களுடன் நிற்கும் ராஷ்மிகா, பின்னணியில் திரண்டிருக்கும் மக்கள் கூட்டம் மற்றும் தீப்பிழம்புகளுக்கு நடுவே காட்சியளிக்கிறார். அவரது தோற்றமே இப்படம் சொல்லப்போகும் கதையின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. பாரம்பரிய உடைகள், ஆயுதங்கள், தீக்காட்சிகள் என போஸ்டர் முழுவதும் ஒரு காலகட்டப் பின்னணியில் நடக்கும் போராட்டத்தின் சாயல் தெரிகிறது.

‘மைசா’வில் நடிப்பதற்காக ராஷ்மிகா தனது உடல்ரீதியான தயாரிப்பிலும் அதிக கவனம் செலுத்தியுள்ளார். கதாபாத்திரத்தின் இயல்பை திரையில் கொண்டு வருவதற்காக கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். படப்பிடிப்பின்போது சவாலான ஆக்‌ஷன் காட்சியில் நடித்தபோது அவருக்கு காயமும் ஏற்பட்டது. தற்போது அதிலிருந்து குணமடைந்து வரும் ராஷ்மிகா, விரைவில் மீண்டும் படப்பிடிப்பில் இணைய இருக்கிறார்.படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இன்னும் 12 நாட்கள் மட்டுமே பணிகள் எஞ்சியுள்ளன. ராஷ்மிகா மீண்டும் படப்பிடிப்பில் இணைந்ததும் அந்தப் பகுதிகளையும் முடித்து படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைய உள்ளது.

இதற்கிடையில், ‘மைசா’வின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் பிரம்மாண்ட காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் VFX பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், காட்சிகளின் உணர்வையும் ஆக்‌ஷனின் தீவிரத்தையும் அதிகரிக்கும் வகையில் ஜேக்ஸ் பிஜாய் இசையில் பின்னணி இசை மற்றும் ஒரிஜினல் ஸ்கோர் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆக்‌ஷன் காட்சிகளை சர்வதேச அளவில் பணியாற்றிய ஸ்டண்ட் நிபுணர் ஆண்டி லாங் வடிவமைத்துள்ளார். கேச்சா காம்பாக்டீயும் ஸ்டண்ட் பணிகளில் பங்களித்துள்ளார். இதனால் ‘மைசா’வின் ஆக்‌ஷன் காட்சிகள் படத்தின் முக்கிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராஷ்மிகாவுடன் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராகுல் ரவீந்திரன், சமுத்திரக்கனி, ராவ் ரமேஷ், தாரக் பொன்னப்பா, நிதி சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஷ்ரேயாஸ் பி. கிருஷ்ணா ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள நிலையில், ஜி.எம். சேகர் புரொடக்‌ஷன் டிசைனராக பணியாற்றியுள்ளார். ஆயிஷா மரியம் ஆடை வடிவமைப்பை கவனித்துள்ளார். நாகு தலாரி மற்றும் அசோக் மொச்சர்லா VFX பணிகளை மேற்கொள்கின்றனர்.அஜய் சாய்புரெட்டி, அனில் சய்யாபுரெட்டி மற்றும் வீரசாய் கோபா தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் ரெட்டி சாத்தி இணை தயாரிப்பாளராக உள்ளார்.

‘மைசா’ தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.ராஷ்மிகா இதுவரை ஏற்ற கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் எப்படி களமிறங்குகிறார் என்பதையும், அவரது உடல்மொழியும் நடிப்பும் இந்த கதைக்கு எந்த அளவுக்கு வலு சேர்க்கிறது என்பதையும் திரையில் பார்க்க ரசிகர்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

‘மைசா’ – நவம்பர் 27, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்.