CHENNAI:
நயன்தாரா ,கவின் ,ராதிகா சரத்குமார் ,கே பாக்யராஜ், பிரபு, அமிர்தா சீனிவாசன், விடிவி கணேஷ், பெப்சி விஜயன் , ரெஞ்சி பணிக்கர், சத்யன் ,ஆதித்யா கதிர், குரேஷி ,காவியா , மைதிலி மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “ஹாய்’. இப்படத்திற்கு கதை எழுதி இயக்கியிருக்கிறார் விஷ்ணு எடவன்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் நாயகன் கவின். அவர் தன் முறைப் பெண்ணை திரும்ணம் செய்ய விரும்புகிறார். ஆனால் அவர் கவினின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் எத்தனை வயதானாலும் காதலித்துத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்தில் பிடிவாதமாக இருக்கிறார். கவினின் பெற்றோர் பாக்கியராஜும், ராதிகாவும் பெண் பார்த்து திருமணம் செய்ய எண்ணும்போது வீட்டை விட்டு ஓடி விடுகிறார். அவர் வீட்டை விட்டு வெளியேறும் போது யாராவது என்னை தேடி வந்தால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று ஒரு கடிதத்தையும் எழுதி வைத்து விட்டு செல்கிறார் கவின். இந்த சூழலில் நயன்தாராவுக்கு பிடிக்காத திருமணம் செய்ய அவரது தந்தை பிரபு நினைத்ததால் அவரும் யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு வந்து விடுகிறார்.
சென்னையில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் நயன்தாராவை அழைத்து வர நயன்தாராவின் தோழி கவினை அனுப்பி வைக்கிறார். அந்தத் தோழியின் வீட்டில் இருவரும் தங்கி இருக்கும் போது நயன்தாராவின் குணத்தைக் கண்டு அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார் கவின். ஆனால் நயன்தாராவின் கவனம் காதலில் இல்லை. எப்படியாவது வெளிநாட்டுக்கு சென்று பணம் சம்பாதித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற எண்ணமே அவரது மனதில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நயன்தாராவை திருமணம் செய்து கொள்வதற்காக ஒரு பிரச்சனையை உருவாக்குகிறார் கவின். அதாவது நயன்தாரா தன்னுடைய காதலி என்றும் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் தங்களது பெற்றோரை நம்ப வைத்து சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு நயன்தாராவை அழைத்து செல்கிறார் கவின். அதன்பிறகு கவினின் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? நயன்தாராவை உண்மையிலேயே காதலித்து திருமணம் செதுக் கொண்டாரா? இல்லையா? என்பதுதான் ‘ஹாய்’ படத்தின் மீதி கதை.
இப்படத்தில் மயில்சாமி கதாபாத்திரத்தில் கவின் நடித்திருக்கிறார். அவருடைய இயல்பான நடிப்பு,நகைச்சுவை கலந்த வசன உச்சரிப்புகள்,காதல் ஏக்கப்பார்வைகள் எனப் பல பரிணாமங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மிக சிறப்பாக தன் கதாபாத்திரத்தை உணர்ந்து அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறார்.
நாயகி தேவயானியாக நயன்தாரா நடித்திருக்கிறார். நயன்தாராவின் நட்சத்திர பிம்பம் அந்தப் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளது.அவர் கர்ப்பிணி பெண் வேடம் போடுவது சரியான கலகலப்பாக இருக்கிறது. படம் முழுக்க மெல்லிய புன்னகையுடன் எளிய வேடமேற்று,படத்தில் கவினையும் வெளியில் ரசிகர்களையும் ஈர்த்து கவனம் பெறுகிறார்.
கவின் தாயாராக வரும் ராதிகா சரத்குமார் முதிர்ந்த தோற்றத்திலும் நடிப்பிலும் என்று அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் செய்துள்ளார். தந்தையாக வரும் கே பாக்யராஜ் அதிரடி வசனங்கள் அடிதடி என்று அந்தப் பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கும் பிரபு, சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சுஹாசினி மணிரத்னம் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
கவினின் நண்பனாக வரும் ஆதித்யா கதிர், மற்றும் அமிர்தா சீனிவாசன், விடிவி கணேஷ், பெப்சி விஜயன் , ரெஞ்சி பணிக்கர், சத்யன் , குரேஷி ,காவியா , மைதிலி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு செய்திருக்கும் ராஜேஷ் சுக்லா,படத்தை வண்ணமயமாக்கியிருக்கிறார்.கவின் நயன் காட்சிகளில் இளமை ததும்ப வேண்டும் என்பதற்காக பல காட்சிகளை கண்களுக்கு இதமாக படமாக்கி இருக்கிறார்.
ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் பாடல்களைக் கொடுத்ததுடன் பின்னணி இசையில் திரைக்கதைக்குப் பெரும்பலம் சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜென்மார்ட்டின்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன். காதல், குடும்பம், நகைச்சுவை ஆகியவற்றை கலந்து கொடுத்து அனைவரும் ரசிக்கத்தக்க அருமையான பொழுதுபோக்குப் படமாக இதைக் கொடுத்திருக்கும் இயக்குநர் விஷ்ணு எடவன். முதல் பாதியில் கொஞ்சம் போரடித்தாலும், இரண்டாம் பாதியில் வரும் குடும்ப உணர்வு மற்றும் முக்கியமான திருப்பங்கள் இந்தக் குறைகளை பெரும்பாலும் சரி செய்துவிடுகின்றன.
மொத்தத்தில், ‘ஹாய்’ பொழுது போக்கு அம்சம் நிறைந்த படம்.
ரேட்டியங் 3/5.
RADHAPANDIAN.