சென்னை:
பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , பிரதீப்,வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி மற்றும் பலர் நடித்துள்ள படம்தான் “தி டார்க் ஹெவன்”. இப்படத்திற்கு கதை எழுதி இயக்கியிருக்கிறார் பாலாஜி.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஒரு ஒரு அழகான மரப்பெட்டிக்குள் மர்மமான புத்தகம் ஒன்று கிடைக்கிறது. சாதாரண புத்தகம் என்று நினைத்தால் அதுதான் இல்லை. அதைப் படிப்பவர்களுக்கு அடுத்து நடக்க இருக்கும் சில அசம்பாவிதங்கள் முன்கூட்டியே தெரிய வருகின்றன. அந்தப் புத்தகத்தில் மேக்கரை என்ற கிராமத்தைப் பற்றியும், அங்கு நடக்கும் மர்மமான சம்பவங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேக்கரை என்கிற கிராமத்தில் இருந்த வனமங்கையைத் தசரதன் என்பவன் காதலித்ததாகவும், அந்த ஊரில் அவள் கற்பின் மீது சந்தேகப்பட்டு வீட்டோடு தீயிட்டு எரிக்கப்பட்டு கொன்றதால் இறக்கும்போது அவள் ஒரு சாபம் விடுகிறாள். நான் உயிர்விடும் இந்த ஜூன் மாதம் என் சாபம் உங்களை சும்மா விடாது. கண்டிப்பாக உங்களை துரத்தும் என்று கூறி இறக்கிறாள். அவளுடையய சாபத்தால் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜூன் மாதத்தில் ஆண்கள் மர்மமான முறையில் கொலையுண்டு இறப்பது வழக்கமாக இருக்கிறது. அப்படி அவர்கள் அஞ்சி நடுங்கும் ஒரு ஜூன் மாத தொடக்கத்தில், அந்த ஊர் மக்கள் சொல்லும் அமானுஷ்யக் கதைகளில் நம்பிக்கை இல்லாத போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்து, மேக்கரை போலீஸ் நிலையத்தின் புதிய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்பதற்காக தன் மனைவி தர்ஷிகா மற்றும் கைக்குழந்தையுடன் வருகிறார். அப்போது அவ்வூரைச் சேர்ந்த கான்ஸ்டபிள் பிரதீப், தன் ஊர் பற்றி இன்ஸ்பெக்டர் சித்துவுக்குத் தேவையான தகவல்களைச் சொல்லி, அவருக்கு துணையாகவும் இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், அந்த ஊரில் ஒரு இளம்பெண் மாயமாகி விடுகிறார். அந்த வழக்கு குறித்து இன்ஸ்பெக்டர் சித்து விசாரிக்கும்போது, அந்த பெண் ஓர் இளைஞரைத் தேடி சென்ற தகவல் கிடைக்கிறது. அந்த இளைஞர் எங்கு இருக்கிறார் என்பதை விசாரிப்பதற்காகச் சென்றால், அவரும் மாயமாகியிருப்பது தெரிய வருகிறது. இதற்கிடையே, மாயமான பெண்ணின் தோழியும் மாயமாகி விட, இந்த மூவரும் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் அந்த ஊருக்கு அருகில் சடலங்களாக மீட்கப்படுகிறார்கள். இந்த கொலைகளுக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்து களத்தில் இறங்குகிறார் . இந்த கொலைகளைச் செய்தவன் சைக்கோ ஒருவன் என்றும் அவன் கேரளாவைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.
கேரளா எல்லையிலிருந்து வந்ததாக நம்பப்படும் ஒரு சைக்கோ கொலையாளி ஊருக்குள் உலா வருகிறான் என்ற செய்தியும், அவன்தான் கொலைகளை செய்கிறான் என்ற வதந்தியும் மக்கள் மத்தியில் பரவுகிறது. இந்த சூழலில் அந்த சைக்கோ கொலைகாரன் கேரளாவில் பிடிபடுகிறான். ஆனாலும் அதற்குப் பிறகும் பல கொலைகள் நடக்கின்றன. இந்த கொலைகளுக்கு பின்னணியில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க களத்தில் இறங்கிய இன்ஸ்பெக்டர் சித்து தீவிர விசாரணை மேற்கொண்டு கொலையாளியை கண்டுபிடித்தாரா ? அப்படியென்றால் கொலையாளி யார்? வனமங்கையா? என்ற கேள்விகளுக்கு “தி டார்க் ஹெவன்” படம் பார்த்தால் தெரியும்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் இளம்பாரியாக சித்து நடித்திருக்கிறார். சின்னத் திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு வந்திருக்கும் சித்து, மிகவும் இயல்பான மற்றும் அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தன் குடும்ப இழப்பு என்ற பல வலிகளையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டு அதைக் காட்டிக் கொள்ளாமல் அலட்டல் இல்லாமல் மனதில் உள்ள அழுத்தத்தை மட்டும் முகத்தில் காட்டிக் கொண்டு சிறப்பாக நடித்துள்ளார்.
சித்துவின் மனைவியாக நடித்திருக்கும் தர்ஷிகா, மலை கிராமத்து பெண்ணாக நடித்திருக்கும் ரித்விகா, போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கல் ரவி, ஜெயக்குமார், அருள் டி.சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு தங்களது பணியை செய்து இருக்கின்றனர்.
இப்படத்தில் வரும் காட்சிகள் பெரும் பகுதி இரவில் நடப்பதால், மேக்கரை கிராமம், இரவு நேரக் காட்சிகள், மர்மம் நிறைந்த தருணங்கள் என கதைக்குத் தேவையான சூழலை மிக தத்ரூபமாக ஒளிப்பதிவு செய்து மனதை கவர்கிறார் ஒளிப்பதிவாளர் மணிகண்டன்.
சக்தி பாலாஜியின் பின்னணி இசை த்ரில்லர் காட்சிகளுக்கு தகுந்தவாறு பதற்றத்தை ஏற்படுத்தி குறிப்பாக மர்மம் வெளிப்படும் இடங்களில் பின்னணி இசை படம் பார்ப்பவர்களை பயமுத்த செய்து இருக்கிறார்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாலாஜி. அமானுஷ்யமான சம்பவங்கள், ‘தி டார்க் ஹெவன்’ என்ற மர்மமான புத்தகம், சில மர்மக் கொலைகள், ஏழு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மரணங்கள்… பல தலைமுறைகளாகத் தொடரும் ரகசியம்… அதைத் தேடிச் செல்லும் காவல்துறை அதிகாரி…என இப்படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவர் மீதும் ஒவ்வொரு சமயத்தில் சந்தேகப்படும் அளவுக்கு மிக நுணுக்கமாக திரைக்கதை அமைத்து,அனைவரையும் ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில் மாறுபட்ட முறையில் உள்ள கதைக்களம், மர்மம் நிறைந்த திரைக்கதை, திகில், திரில்லர் கலந்த படம் என்பதால் “தி டார்க் ஹெவன்” கண்டிப்பாக ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும்.
றெட்டிங் 3/5.
RADHAPANDIAN.