“ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” திரைப்பட விமர்சனம்!

126

சென்னை:

சத்யா,  விஜயகுமார் ராஜேந்திரன், கோபி அரவிந்த்,  சுதாகர் ஜெயராமன்,  முனிஷ்காந்த், ஜார்ஜ் மேரியன், ரித்விகா, ஹரிஜா, யாஷிகா ஆனந்த், ஆர்.எஸ்.கார்த்திக், ஷரா, அப்துல், கொக்கு மனோகர், அகஸ்டின், சந்தோஷ், எஸ்.கே, நந்தா, அஜித், சாருகேஷ், மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது”

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

1993 ஆம் ஆண்டு ஆலயம்  திரையரங்கில் ‘நானும் பேய்தான்’ என்கிற படத்தைப் பார்த்து நான்கு பேர் இறந்துவிடுகிறார்கள். அதே நேரத்தில் அந்த ‘நானும் பேய்தான்’ திரைப்படத்தின் இயக்குனரும் காணாமல் போய்விடுகிறார். இந்த நான்கு பேர் இறந்ததாலும், அந்த ஆலயம்  திரையரங்கம் பாழடைந்து போனதாலும் யாரும் அங்கு திரைப்படம் பார்க்க வருவதில்லை. இந்த சூழ்நிலையில் திரைப்படம் இயக்கும் வாய்ப்புக்காக முயன்று கொண்டிருக்கும் சத்யமூர்த்தி, விஜய்குமார், கோபி அரவிந்த், சுதாகர் உள்ளிட்ட நண்பர்கள்  ஆலயம் திரையரங்கில் படம் பார்க்கச் செல்கிறார்கள். அதே திரையரங்கில் படம் பார்க்க யாஷிகா ஆனந்த் ஹரிஜா ஆகியோரும் வருகிறார்கள்.

அவர்களைப் போல் மேலும் சிலர் அந்த திரையரங்கிற்குள் படம் பார்க்க வந்திருக்கின்றனர்.  திரையில் அவர்கள் பார்க்க நினைத்த படம் ஓடாமல் அதற்கு பதில்  ஒரு பேய் படம் ஓடுகிறது. அந்த படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே அந்த திரையரங்கில் சில அமானுஷ்ய விசயங்கள் நடக்கிறது. இதனால், திரையரங்கில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற நினைக்கும் போது அவர்களால் முடியவில்லை. அப்போது அந்தத் திரையரங்கில் இறந்த நான்கு பேய்கள் தோன்றி சில கோரிக்கைகளை வைக்கிறது, அந்தத் திரையரங்கில் மாட்டிக் கொண்ட அனைவரும் அந்த பேய்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அந்தத் திரையரங்கை விட்டு வெளியே வந்தார்களா?அந்த திரையரங்கில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களால் ஏற்பட்ட பாதிப்பு என்ன? என்பதே ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் மீதிக்கதை.

யூடியூபில் புகழ்பெற்ற அனைவரையும் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து இருக்கிறார்கள். கோபி, சுதாகர், விஜய், சாரா, அப்துல், சந்தோஷ், அகஸ்டின், ஜெயசீலன், சத்யமூர்த்தி, கிரேன் மனோகர்,முனீஷ்காந்த்,ஷா ரா, ஜார்ஜ்மரியான் ஆகியோர் படம் முழுவதும் வந்து பயப்படுவது போல் நடித்து நம்மைச் சிரிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் பல இடங்களில் நம்மால் சிரிக்க முடியாமல் சலிப்பு ஏற்படுகிறது. இறுதிக் கட்ட காட்சிகள் நெருங்கும் போது இந்த கூட்டத்துடன் ஜாங்கிரி மதுமித்தாவும், விஜே ஆஷிக்கும் திடீரென்று வருகின்றனர். அவர்கள் வரும் காட்சிகள் ஓரளவு சிரிப்பை வரவழைக்கின்றன.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை மற்றும் காட்சிகளை சிறப்பாக அமைத்திருக்கிறார் இயக்குநர் ரமேஷ் வெங்கட். திரில்லர் கதை என்றாலே குறிப்பிட்ட ஒரே இடத்தில் கதை நகர்வது வழக்கமான பாணி என்றாலும், அதை ஒரு பழைய திரையரங்கின் பின்னணியில் சொல்லியிருப்பது புதிதாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. திகில் கதை என்றாலும் காமெடி,கலந்த கலாட்டாவாக  ஒரு புதுமையை செய்திருக்கிறார் இயக்குனர்.

ஒளிப்பதிவாளர் ஜோஷ்வா ஜே பெரேஸ், காட்சிகளிலும் பயமுறுத்த வேண்டும் என நினைத்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பேய்ப்படங்களுக்கு பின்னணி இசை மிக முக்கியம் என்பதற்காகக் கொஞ்சம் கூடுதலாகவே பணியாற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் கௌஷிக் கிரிஷ்.

இந்த ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’  திகில் மற்றும் நகைச்சுவை கலந்த படம் என்றுதான்  சொல்ல வேண்டும்.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.