சென்னை:
கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “அயலான்’’ படம் சமீபத்தில் வெளி வந்து வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது, இப்படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கெல்கர், இஷா கோபிகர், கருணாகரன், யோகி பாபு, கோதண்டம், பானுப்ரியா, பால சரவணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த அயலான் திரைப்படத்தை “இன்று நேற்று நாளை’’ படத்தின் இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கி இருக்கிறார்.
இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,
கொடைக்கானல் அருகில் உள்ள பூம்பாறை என்ற மலை கிராமத்தில் கதாநாயகன் சிவகார்த்திகேயன் தனது தாய் பானுப்பிரியாவுடன் வாழ்ந்து வருகிறார். அங்குள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சூரியகாந்தி பூக்கள் விதைகளை போட்டு விவசாயம் செய்து வருகிறார். இவர் அங்குள்ள விலங்குகள் புழு பூச்சிகள் எதற்குமே தீங்கு நினைக்காத ஒரு நல்ல மனிதராக வாழ்ந்து வரும் சூழ்நிலையில் அவருடைய நிலத்தில் சூரியகாந்தி பூ அதிகமான விளைச்சல் ஏற்பட்டு பூத்துக் குலுங்கும்போது எங்கிருந்தோ வந்த வெட்டுக்கிளிகள் அந்த செடிகள் முழுவதையும் நாசமாக்கி விடுகிறது. இதனால் நஷ்மடைந்த சிவகார்த்திகேயனிடம், அவருடைய தாயார் பானுப்பிரியா உன் வாழ்க்கையை கடன் இல்லாமல் வாழ்வதற்கு சென்னைக்கு போய் சம்பாதிக்கும்படி அறிவுரை கூறுகிறார்.
பிழைப்பு தேடி சென்னை வந்த அவருக்கு நண்பர்கள் கருணாகரன், யோகி பாபு ஆகியோரிடம் இணைந்து வேலைக்கு செல்கிறார். இந்த சூழ்நிலையில் விண்வெளியில் விண்பாறையிலிருந்து பெயர்ந்த ஒரு பகுதி பூமியில் மோதி ஒரு சிறு துண்டு எரிகல் வில்லன் ஷரத் கெல்கர் கையில் கிடைக்கிறது. அந்த எரிக்கல்லை எடுத்து ஆராய்ச்சி செய்யும் போது அந்த கல் மிகவும் சக்தி வாய்ந்தது என்று தெரிகிறது. அந்தக் கல் மூலமாக இதுவரையில் யாரும் தோண்டாத ஆழத்திற்கு பூமிக்கு அடியில் பள்ளம் தோண்டி ஒரு கொடிய விஷவாயு வை எடுத்து அதன் மூலம் ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பூமியில் உள்ள உயிரினங்களும் மனிதர்களும் அழிந்து போகும் நிலையில், வேற்று கிரகத்தில் உள்ள வேற்று கிரகவாசி (ஏலியன்) அந்த எரிக்கல்லை கைப்பற்ற வில்லன் ஷரத் கெல்கர் இருக்குமிடம் தேடி வருகிறது. வில்லனிடம் இருக்கும் அந்த ஏரிகல்லை கைப்பற்ற நினைக்கும் வேற்றுக்கிரகவாசி (ஏலியன்) வில்லன் ஷரத் கெல்கரிடம் சிக்கிக் கொள்கிறது.
அதை மீட்பதற்காக சிவகார்த்திகேயன் கார்ப்பரேட் நிறுவனத்திற்குள் நுழைந்து சாதுர்யமாக அதை மீட்டு விண்கலத்தில் ஏற்றி அனுப்புகிறார். அதன் பிறகு அங்கு வில்லன் ஷரத் கெல்கருக்கும், சிவகார்த்திகேயனுக்கும் கடுமையான சண்டை நடக்கிறது. இதில் சிவகார்த்திகேயனை அடித்து சாய்க்கின்றனர்.அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வேற்றுகிரகவாசி(ஏலியன்) சிவகார்த்திகேயனுக்கு உயிர் கொடுக்க முயற்சிக்க அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மீண்டும் வேற்று கிரகவாசியை (ஏலியன்) வில்லன் கூட்டம் சிறை பிடிக்கிறது. இதற்கிடையில் சிவகார்த்திகேயனுக்கு வேற்று கிரகவாசிபோல் பவர் வந்து விடுகிறது. அதை வைத்து அவர் வில்லன் கூட்டத்திடம் இருந்து வேற்றுகிரகவாசியை எப்படி மீட்கிறார்…என்பதுதான் “அயலான்” படத்தின் மீதிகதை.
பூம்பாறை மலைகிராமத்தில் விவசாயம் செய்யும் தமிழ் என்ற இளைஞராக, பள்ளத்தில் விழுந்த யானைக்குட்டியை வெளியே தூக்கி அதன் தாயோடு சேர்க்கும் நல்லுள்ளம் கொண்டவராக, வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் தன் தோட்டப்பயிர் மொத்தமும் நாசமானபோதும் “இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல, புழு-பூச்சிகளுக்கும் சொந்தமானது தான்” என சொல்லி வெட்டுக்கிளிகளை அழிக்கக் கூடாது என பிடிவாதம் காட்டுபவராக அறிமுகக் காட்சிகளிலேயே மிக சிறப்பாக நடித்து, தனது கதாபாத்திரத்தை வலுவாக நிலைநாட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். நடிப்பு மட்டுமல்லாமல் ஆக்ஷனிலும், அதிரடி சண்டைக் காட்சிகளிலும் அனைத்திலும் கலக்கியிருக்கிறார். ஏலியனும் அவரும் இணைந்த பின் நடக்கும் காட்சிகள் எதிர்பார்க்கக் கூடியது என்றாலும் சுவாரசியத்துக்குக் குறைவில்லாமல் நடித்து இருக்கிறார்,.
சிவகார்த்திகேயன் காதலியாக வரும் ரகுல் பிரீ ரத் சிங் ஒரு தோழி போலவே வந்து செல்கிறார். இது காதல் கதை இல்லை என்பதால் அவருக்கு ஒன்றும் பெரிதாக நடிப்பதற்க்கு வேலை இல்லை.
பேராசை கொண்ட கார்ப்பரேட் வில்லன் ஆர்யனாக வரும் ஷரத் கெல்கர், மோசமான கிரிமினலாக மிரட்டியிருக்கிறார். அவர் கை காட்டும் நபர்களை எல்லாம் படபடவென சுட்டுக் கொன்று குவிக்கும் உறுதுணை கதாபாத்திரத்தை இஷா கோபிகர் சிறப்பாக செய்திருக்கிறார்.
சிவகார்த்திகேயனின் தாயாக வரும் பானுப்பிரியா ஒரு சில காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிகின்ற மாதிரி தன் அனுபவ நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோரது காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கிறது.
இந்த படத்தில் ஏலியனாக நடித்திருக்கும் வெங்கட் செங்குட்டவன் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது.புதுமையாக மாறுபட்ட புதிய படைப்பாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு பொருத்தமாக இசையமைத்து ஒவ்வொரு காட்சிகளையும் பட்டைதீட்டி பின்ணணி இசையை அமைத்து இருக்கிறார் ஏ ஆர் ரகுமான்..
நிரவ்ஷாவின் ஒளிப்பதிவில் பூம்பாறை கிராமத்து காட்சிகள் கண்களுக்கு விருந்து படைப்பது போல், ஆக்ஷன் காட்சிகளிலும் அவரது ஒளிப்பதிவு படத்தின் தரத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது.
வேற்றுகிரகவாசி படம் எடுக்கிறேன் என்று சொல்லி ரசிகர்களை ஏமாற்றாமல் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக காட்சிகளை அமைத்து இயக்கியிருக்கும் ஆர் ரவிக்குமார். உண்மையில் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தை தரமாகவும், குடும்பத்துடன் வந்து படம் பார்க்கின்ற மாதிரி மிக தெளிவாக அனைவரும் ரசிக்கின்ற வித்ததில் இயக்கி இருப்பது பாராட்டத்தக்கது. கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தையும் எவ்வித குறைபாடுகல் இன்றி தத்ரூபமாய் அமைத்து ஒவ்வொரு சிந்தித்து செயல்பட்டு அசத்தி இருக்கிறார்இயக்குனர்.
மொத்தத்தில் ‘அயலான்’ படம் குடும்பத்துடன் கண்டு களிக்க வேண்டிய நல்ல பொழுதுபோக்கு படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.