‘வித்தைக்காரன்’ திரைப்பட விமர்சனம்!

246

சென்னை:

நகைச்சுவை நடிகர்களில் சந்தானம், யோகி பாபு ஆகியோர் ஒரு சில படங்களில் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களில் சந்தானம் கதாநாயகனாக  நடிப்பதை தவிர துணைப் பாத்திரங்களில்  நடிக்க மறுத்து விடுகிறார். ஆனால் யோகி பாபு தனக்காக வரும் கதைகளில் கதாநாயகனாகவும் நடிப்பதுடன் பிற கதாநாயகர்களுடனும் சேர்ந்து  நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்கிறார். இவரைப் போல் தற்போது சதீஷ் தனது பாணியை மாற்றிக் கொண்டு தனக்கென வரும் கதைகளில் கதாநாயகனாக நடிப்பதுடன் பிற கதாநாயகர்களுடனும் சேர்ந்து நடித்து தனது பட எண்ணிக்கையை உயர்த்தும் முயற்சியில் வெற்றி கண்டிருக் கிறார். அந்த வகையில் சதீஷ் தற்போது நடித்திருக்கும் ‘வித்தைக் காரன்’  அவர் சோலோ கதாநாயகனாக நடித்திருக்கும் படமாகும்..

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

ஏமாற்றுவது தவறல்ல, ஏமாற்றப்படுவதுதான் தவறு என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவர் சதீஷ். கதாநாயகன் சதீஷின் தந்தை மேஜிக் கலைஞர் என்பதால் தனது மகனுக்கும் அந்த கலைகளை கற்றுக் கொடுக்கிறார். இந்த நிலையில் சட்டவிரோத தொழில் செய்யும் மார்வாடியிடம் மூன்று பேர் வேலை செய்து வருகின்றனர். ஒரு கால கட்டத்தில் அந்த மூவரும் சேர்ந்து தங்களுக்கு தொழில் வித்தை க்ற்றுக் கொடுத்த மார்வாடியை கொலை செய்து விடுகிறனர். அதன் பழியை வேறு ஒருவர் மீது போட்டு இந்த மூவரும் தப்பித்து கொள்கின்றனர்.

பிறகு அந்த மூன்று பேரும் பின்னாளில் மிகப் பெரிய கடத்தல் ஆசாமிகளாக உருவெடுத்து தனித்தனியாக பிரிந்து தொழில் செய்து வருகின்றனர். இந்த  சமயத்தில் விமான நிலையத்தில் சிக்கிக் கொள்ளும் 25 கோடி மதிப்பிலான வைரத்தை அடைய  தனித்தனியாக பிரிந்து தொழில் செய்து வந்த மூன்று கடத்தல் கும்பலும் கொள்ளை அடிக்க  முயற்சிக்க  அவர்களுக்கு சதீஷ் உதவுவதாக கூறி எல்லோர் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு அந்த வைரங்களையும் அவரே திருடி செல்கிறார். சதீஷ் உதவுவதாக கூறி ஏன் அந்த வைரங்களை திருடினார்? அதற்கான  நோக்கம் என்ன? என்பதுதான் ‘வித்தைக்காரன்’ படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் சதீஷ், மிகவும் யதார்த்தமாக நடித்து இருக்கிறார். காமெடியில் சில காட்சிகளில் சிரிக்க வைத்து இருக்கிறார்.கதாநாயகனாக நடித்தாலும் தனது வழக்கமான காமெடி பாணியில் நடித்திருக்கும், அவர்  கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக சிம்ரன் குப்தா நடித்திருக்கிறார். பூதக்கண்ணாடி என்கின்ற பத்திரிக்கையில் பத்திரிகை நிருபராக  வருகிறார். இவருக்கு கதையில் முக்கிய பங்கு வகித்தாலும், காட்சிகளில் முக்கியத்துவம் இல்லாமல் ரசிகர்களை கவர முயற்சி செய்து இருக்கிறார்.

மூன்று பெரிய கடத்தல் ஆசாமிகளாக நடித்திருக்கும் ஆனந்தராஜ், சுப்பிரமணி சிவா, மதுசூதன ராவ் ஆகியோர் கதைக்கேற்றவாறு சிறப்பாக தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து அசத்தி இருக்கின்றனர். ஜான் விஜய், பாவேல் நவகீதன், ஜப்பான் குமார், சாம்ஸ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் போட்டி போட்டு சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் யுவ கார்த்திக் ஒளிப்பதிவில் கோவை ஏர்போர்ட் காட்சிகள் மிக தெளிவாக அமைந்து இருக்கிறது.

இசையமைப்பாளர் விபிஆர் இசையில் பாடல்கள் கேட்பதற்கு சுமாராக  இருக்கிறது. பின்னணி இசை திரைப்படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.

கதை எழுதி இயக்கி இருக்கும் வெங்கி. காமெடி காட்சிகளில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருந்தாலும் பல இடங்களில் கதாபாத்திரங்களை ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து இருந்தாலும், ஆரம்பத்தில்  வேகமாக தொடங்கும் காட்சிகள் போகப்போக தொய்வாகி விடுகிறது.

மொத்தத்தில், இந்த ‘வித்தைக்காரன்’ படத்தை காமெடிக்காக பார்க்கலாம்.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.