
சென்னை:
ஆறுபடை புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷைல்குமார் ராஜேந்திரன் தயாரித்திருக்கும் ‘வள்ளுவன்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சங்கர் சாரதி
இப்படத்தில் சேத்தன் சீனு, ஆஷ்னா ஜாவேரி, மனோபாலா, தீனா, பிரேம்குமார், கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
சென்னையில் உணவு பொருளை வீட்டுக்கு வீடு கொண்டு போய் உணவு விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார் கதாநாயகன் சேத்தன் சீனு. இந்த சூழலில் ஒரு நாள் உணவை விநியோகம் செய்ய போகும்போது தற்செயலாக கதாநாயகி ஆஷ்னா ஜாவேரியை சந்திக்க நேரிடுகிறது. ஆஷ்னாவும் சேத்தன் சீனுவும் பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்தவர்கள். அந்தப் பாசத்தின் அடிப்படையில் ஆஷ்னாவை பின் தொடர்ந்து செல்லும்போது ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் முதியவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வதை பார்க்கிறார். அதனால் மனம் நெகிழ்ந்து போன சேத்தன் சீனு அதே முதியோர் இல்லத்திற்கு ஆஷ்னா இல்லாத நேரத்தில் தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார். ஒரு கட்டத்தில் இந்த உண்மை ஆஷ்னாவிற்குத் தெரியவர, இருவருக்குள்ளும் ஒரு அழகான, உன்னதமான நட்பு மலர்கிறது. இந்த நட்பு மிக விரைவாக காதலாகவும் மாறிவிடுகிறது.
இந்த சமயத்தில் சென்னையில் ஒரு மர்மக் கொலைகாரன் பழிவாங்கும் பட்டியலில் இருக்கும் முதல் ஆளான அதிகார பலம் கொண்ட அரசியல்வாதி ராம்ஸ் என்பவரையும், இரண்டாவதாக சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை அதிகாரி ராஜ் சிம்மனையும், மூன்றாவதாக நீதிக்கு வாதாடும் வழக்கறிஞர் கராத்தே ராஜாவையும் மர்மமான முறையில் அடுத்தடுத்து மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தத் தொடர் கொலைகளை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி பிரேம்குமாருக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை தெரிய வருகிறது. அதாவது கொலை செய்யப்பட்ட ஒவ்வொருவரின் உடல்களிலும் தமிழ் எழுத்துக்கள் இடைவெளி விட்டு விட்டு பதியப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. இந்த எழுத்துக்களையெல்லாம் தொகுத்து பார்த்தால் அது ஒரு திருக்குறளாக இருக்கிறது.
இந்த மூன்று பேரால் பாதிக்கப்பட்ட யாரோ ஒருவர்தான் இந்தக் கொலைகளை செய்து வருகிறார் என்பதை கண்டறியும் பிரேம்குமார் கொடிய குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்ற நிலையில் தீவிர விசாரணை மேற்கொள்கிறார். அப்போது பிரேம்குமாருக்கு நாயகன் சேத்தன் சீனு. மீது சந்தேகம் எழுகிறது. அவருக்கு எதிராக எந்தவிதமான ஆதாரங்கள் இல்லை என்றாலும், சில விசயங்கள் மூலம் சேத்தன் சீனுதான் கொலையாளி என்பதை கண்டுபிடிக்கிறார். ஆனால் சேத்தன் சீனு இந்த மூன்று கொலைகளை செய்வதற்கான காரணம் என்னவென்று புரியாமல் பிரேம்குமார் தவிக்கிறார். இறுதியில் கொலை செய்த குற்றவாளியை பிரேம்குமார் கைது செய்தாரா? எதற்காக ஒவ்வொரு உடலிலும் ஒரு திருக்குறள் எழுதப்பட்டு இந்த கொலைகள் செய்யப்பட்டன? என்பதை பிரேம்குமார் கண்டுபிடித்தாரா? இல்லையா/ என்பதுதான் “வள்ளூவன்” படத்தின் மீதிக் கதை.
கதாநாயகனாக நடித்துள்ள சேத்தன் சீனு தனது கதாபாத்திரத்திற்கு தேவையான அளவில், அதன் தன்மையை புரிந்துக் கொண்டு நடித்திருக்கிறார். முதல் முறையாக குத்தாட்டம் போட்டு, வட சென்னை இளைஞராக நடித்தாலும், சில காட்சிகளுக்குப் பிறகு பொறுப்பான இளைஞராக அந்த கதாபாத்திரத்திற்கு மெருகேற்றி நடித்திருப்பதை பாராட்டலாம்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஆஷ்னா ஜாவேரி, ஆரம்பத்தில் வழக்கமான கமர்ஷியல் நாயகியாக வலம் வந்தாலும் ‘சிவான்யா’ கதாபாத்திரத்திற்குத் தன் கச்சிதமான நடிப்பால் உயிர் கொடுத்து இறுதியில் திருப்பத்தையும் கொடுத்து அதிர வைக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் பிரேம்குமார், காவலராக நடித்திருக்கும் மனோபாலா, சாய் தீனா, மீசை ராஜேந்திரன், கராத்தே ராஜா உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களுக்கு கொடுத்த வேலையை குறையின்றி நிறைவாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, சென்னை நகரத்தையும், படத்தில் வரும் கதாபாத்திரங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
அஸ்வத் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருக்கிறது.. பின்னணி இசையிலும் குறை வைக்கவில்லை.
இயக்குநர் சங்கர் சாரதி, ஒரு கொலை மர்மக் கதையை மட்டும் சொல்லாமல், அதன் வழியாக சமூகத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள், சட்டத்தின் பலவீனங்கள், நீதிக்காக போராடும் சாதாரண மக்களின் வலிகள் ஆகியவற்றை புரிந்துக் கொண்டு திருக்குறள் வரிகள் மூலம் காவல் துறைக்கு எடுத்து சொல்லி இருப்பது கவனிக்கப்பட வேண்டியவையாகும். பெண்களுக்கு எதிராக அநீதி இழப்பவர்கள் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படாமல் தப்பித்து விடுகின்ற குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை இப்படத்தில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில், “வள்ளுவன்” ஒரு சாதாரண சஸ்பென்ஸ் திரில்லர் படம் அல்ல! தற்போதுள்ள சட்டத்திற்கு தகுந்தவாறு உருவாகி இருக்கும் படம்.
ரேட்டிங் 3/5.