’போர்’ திரைப்பட விமர்சனம்!

129

சென்னை:

அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம்,டி.ஜே.பானு,சஞ்சனா நடராஜன்,அம்ருதா ஸ்ரீனிவாசன்,மெர்வின் ரோஜாரியா ஜான் விஜய் மற்றும் பலர் நடிப்பில் சஞ்சித் ஹெட்ஜ் இசையில் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம்தான் ‘போர்’ ஏற்கனவே பிஜாய் நம்பியார் இயக்கத்தில் வெளி வந்த படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது ‘போர்’ மூலம் மீண்டும் ஒரு முறை தமிழ் ரசிகர்களை வெல்ல முயற்சித்திருக்கும் பிஜாய் நம்பியார் வெற்றி பெறுவாரா…என்று பார்ப்போம்.

இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,

இப்படத்தில் கதாநாயகர்களாக நடிக்கும் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் இருவரும் பள்ளியில் படிக்கும் போது ஒரு சில பிரச்சனைகளால் இருவருக்கும் சச்சரவு ஏற்படுகிறது.  சக மாணவர்கள் காளிதாஸை அடிக்கும்போது தனது நண்பன் அர்ஜுன் தாஸ் காப்பாற்ற முன்வரவில்லை என்பதால் அவர் மீது மிகுந்த கோபத்துடன் இருக்கிறார் காளிதாஸ்.  இந்த கோபம் அவர்கள் இருவரும் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது வன்மமாக மாறுகிறது. அர்ஜுன் தாஸ் படிக்கும்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்க வருகிறார் காளிதாஸ். அந்தக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் அர்ஜுன்தாஸைக் கண்டதும் அவர்களது வன்மம் மேலும் கொழுந்து விட்டு எரிகிறது.

இந்த சூழ்நிலையில் காளிதாஸ் தனது பகையை தீர்த்துக் கொள்வதற்காக அர்ஜுன் தாஸின் நண்பர்களை சீண்டுவதோடு அதனை கல்லூரி மோதலாகவும் மாற்ற முயற்சி செய்கிறார். . முதலாம் ஆண்டு படிக்கும் ஜூனியர் மாணவரான காளிதாஸின் இந்த செயலைக்  கண்டு சீனியர் மாணவர் அர்ஜுன் தாஸ் ‘எதற்காக இப்படி செய்கிறாய்’  என்று தட்டி கேட்கிறார். இதனால் அடிக்கடி இருவருக்கும் மோதல் ஏற்பட்டு ஒருவர் ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் அதே கல்லூரியில் நடக்கும் மாணவர் தலைவர் தேர்தலில் அரசியல் தலைவரின் மகளை எதிர்த்து போட்டியிடும் பெண் மீது ஜாதி வன்கொடுமையினால் அவரது கையில் ஆசிட் ஊற்றி  தலைவர் தேர்தலில் நிற்க விடாமல் தடுத்து விடுகிறார்கள். அதை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் அரசியல்வாதியின் மகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. இதனால் தன்னை எதிர்த்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஒழித்துக் கட்ட முடிவு செய்கிறார் அரசியல்வாதியின் மகள். இந்த சூழ்நிலையில் அந்த கல்லூரியில் ஆண்டு விழா நடக்கிறது. அப்போது  கல்லூரி மாணவர்கள் இடையே நடக்கும் மோதலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பழி வாங்க நினைக்கிறார் அரசியல்வாதியின் மகள். அந்த ஆண்டு விழா  நடக்கும்போதுபோது இருதரப்பு மாணவர்களுக்கும் பெரிய அளவில்  மோதல் ஏற்படுகிறது. இந்த மோதலில் அர்ஜுன் தாஸ் வென்றாரா? காளிதாஸ் வென்றாரா?  என்பது தான் இந்த ‘போர்’ படத்தின் மீதி கதை.

இப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக பிரபு என்ற கதாபாத்திரத்தில் மூத்த மாணவராக, கோபக்கார இளைஞராக, கல்லூரி தாதாவாக அவர் தன் நடிப்புத் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது குரல் மட்டும் வித்தியாசம் இல்லை அவரது நடிப்பும் மாறுபட்டதாகவே இருக்கிறது. முன்னேற்ற பாதையை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் அர்ஜுன் தாஸ் கதையை தேர்வு செய்வதில் சற்று கவனம் செலுத்தினால் நிச்சயம் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வர வாய்ப்பு இருக்கிறது.

இதுவரையில் காளிதாஸ் மென்மையான கதாபாத்திரங்களில்தான் நடித்து இருக்கிறார். அனால் இப்படத்தில் மென்மையான தோற்றத்துக்கு மாறான கதாபாத்திரம். அதற்கு ஏற்றவாறு நடிக்க முயற்சி செய்து இருந்தாலும் பல காட்சிகளில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். காதல் காட்சிகளிலும் சரி, முத்தக் காட்சிகளிலும் சரி நன்றாகப் பொருந்தியிருக்கிறார். பள்ளியில் நடந்த துரோகத்தை மனதில் வைத்துக்கொண்டு, அர்ஜுன் தாஸ் மீது அவர் காட்டும் வன்மம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.

இப்படத்தில் கதாநாயகிகளாக சஞ்சனா நடராஜன், டிஜே பானு நடித்திருக்கின்றனர். கொடுத்த வேலையை பொறுப்பாக தலை மேல் சுமந்து நடித்திருக்கிறார்கள். அதிகாரபலத்தோடு போட்டியிடும் அம்ருதாசீனிவாசன் கோபக்கனல் தெறிக்க நடிப்பில் மிரட்டி இருக்கிறார். காமெடி வேடத்தில் நாயகனின் நண்பராக நடித்திருக்கும் மெர்வின் ரோசரியோ, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜான் விஜய் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு ஏற்றவாறு பயன்பட்டிருக்கிறார்கள்.

ஜிம்சி காலித் மற்றும் ப்ரெஸ்லி ஆஸ்கர் டி செளஸா ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். திரைக்கதையின் தன்மையை உணர்ந்து காட்சிகளை படமாக்கி இருப்பது பாராட்டத்தக்கது.

சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கௌரவ் கோட்கிண்டி ஆகியோரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருக்கின்றன. ஹரீஷ் வெங்கட், சச்சிதானந்த் சங்கரநாராயணன் மற்றும் கௌரவ் கோட்கிண்டி ஆகியோர் பின்னணி இசையை அமைத்திருக்கிறார்கள். பல காட்சிகளில் பின்னணி இசை அதிகமான சத்தமாகவும்  நம் காதை பிளக்கின்ற மாதிரி இருக்கிறது.

வெறும் சீனியர், ஜூனியர் மாணவர்கள் இடையே மோதல் என்றில்லாமல் அதில் அரசியலையும் ஜாதி பாகுபாடுகளையும் கொண்டு வந்து ஒரு சமுதாய கருத்து பேசி படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் பிஜாய் நம்பியார். கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையப்படுத்தி இருக்கும் இயக்குனர் பிஜாய் நம்பியாரின் கல்லூரிக் கதையான ‘போர்’ ரசிகர்களிடத்தில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல், படம் முழுவதும் பெரும் குழப்பத்தை மட்டுமே ஏற்படுத்தி கதையின் தன்மையை கெடுத்து விட்டது. மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கம் அதிகம் என்று சித்தரித்திருப்பது மிகைப்படுத்தும் வகையில் உள்ளது.விதவிதமான பெயர்களுடன் போதைபொருட்களின் பெயர்களை உச்சரிப்பதையெல்லாம் திரையில் தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில், இந்த ‘போர்’ படம் ரசிகர்களை வெறுப்படைய செய்யும் படம்.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.