‘தங்கலான்’ – திரைப்பட விமர்சனம்!

149

சென்னை:

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் லிமிடெட் – நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் தற்போது வெளி வந்து இருக்கும் படம்தான் ‘தங்கலான்’. இப்படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, டேனியல் கால்டகிரோன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், அர்ஜுன், ப்ரீத்தி கரண், முத்துக்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

பதுனெட்டாம்ஆம் நூற்றாண்டில், தமிழகத்தின் மிகப் பெரிய மாவட்டமான வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள  வேப்பூர் கிராமத்தில் ஜமீந்தாரும், ஆங்கிலேயர்களும் தங்களது  கட்டுப்பாட்டில்  வைத்து இருப்பதால், அந்த கிராமத்தில் வசிக்கும் பூர்வகுடி மக்களான விக்ரம், தன் மனைவி பார்வதி மற்றும் குழந்தைகளுடன் தனது உறவினர்களுடன் விவசாயம் செய்து வயிற்று பிழைப்பு நடத்தி வருகிறார்கள். அங்கு விவசாயம் செய்து வரும் விக்ரம் மற்றும் அவரது உறவினர்களின் நிலங்களை ஜமீன்தார் தன்னுடைய சூழ்ச்சியால் மொத்த நிலங்களையும் அபகரித்து விடுகிறார். அவர்கள் நிலங்களை ஜமீன்தார் பறித்துக் கொண்டாலும் அங்கு விவசாயம் செய்து அனைவரும் தங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் கோலார் பகுதியில் தங்கம் இருப்பதாக அறியும் பிரிட்டிஷ்காரரான டேனியல்,  விவசாயம் செய்து கொண்டிருக்கும் விக்ரம் மற்றும் அவரது உறவினர்களிடம் தங்கம் இருப்பதாக சொல்லி அவர்களை தங்களுடன் அழைத்துக் கொண்டு அந்த தங்கத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். பூர்வகுடி மக்களான விக்கிரமுக்கும் அவரது  உறவினர்களுக்கும் அங்கு கிடைக்கும் தங்கத்தில் ஒரு பகுதியை பங்கு தருவதோடு தினமும் கூலி, உணவு, இருப்பிடம் போன்ற வசதிகளையும் செய்து கொடுப்பதாக உறுதி கூறுகிறார் பிரிட்டிஷ்காரரான டேனியல். ஆனாலும் அந்த பூர்வகுடி மக்கள் விக்ரம்  சொல்வதை நம்பாமல் தங்கத்தை தேடி செல்லும்போது ஆபத்துக்கள்  நேரிடலாம் என்று பயந்து  அவருடன் வர மறுக்கிறார்கள். ஆனால் விக்ரமுடன் இணைந்து பசுபதி, ஹரிகிருஷ்ணன் மற்றும் சிலர் மட்டுமே தங்கத்தை எடுப்பதற்காக அந்த பிரிட்டிஷ்காரர் டேனியலுடன் செல்கின்றனர். அப்போது தங்கத்தை எடுக்க முயலும் போது பலவித துன்பங்களை விக்ரமும் அவரது சகாக்களும் அனுபவிக்க நேரிடுகிறது. தங்கம் இருக்கும் இடத்தை பல ஆண்டு காலமாக ஒரு அமானுஷ்ய சக்தி பாதுகாத்து வருகிறது..இருந்தாலும் எதற்கும் கவலைப்படாமல் விக்ரம் பிரிட்டிஷ்காரன் டேனியலுக்கு கட்டுப்பட்டு தங்கத்தை எடுத்தார்களா? இல்லையா? என்பதுதான் ‘தங்கலான்’ படத்தின் மீதி கதை.

தங்கலான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரம், தான் ஒரு நடிகர் என்பதை மறந்துவிட்டு பூர்வக்குடி மனிதராக உருமாறி மிக சிறந்த முறையில் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நீளமாய் வளர்ந்த தாடி, மீசை, தலைமுடியுடன், சட்டை அணியாமல், இடுப்பிலிருந்து முழங்கால் வரையிலான வேட்டியை வரிந்து கட்டிக்கொண்டு, அழுக்குப் படிந்த உடம்புடன், அடையாளம் தெரியாத அளவுக்கு ஆளே உருமாறிய தோற்றத்தில், அவரின் கடுமையான உழைப்பு மிகப் பெரிய அளவில் அனைவரும் பாராட்டக்கூடிய அளவில் இருக்கிறது.அனைத்து தோற்றங்களிலும் உடல்மொழி, வசன உச்சரிப்பு, உடலமைப்பு என காட்சிக்கு காட்சி பிரமிக்க வைக்கிறார் விக்ரம்.

கதாநாயகனின் மனைவி கெங்கம்மாளாக பார்வதி நடித்திருக்கிறார். அவரது திரையுலக வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத கதாபாத்திரம் இது என்று அவரே கூறியிருக்கிறார். விக்ரமுடன் இணைந்து நடிப்பில் போட்டி போட்டு  ஈடு கொடுத்து  அந்த கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறந்த முறையில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தனது இயல்பான நடிப்பு மூலம் பாராட்டு பெறுகிறார் பார்வதி.

ஆரத்தி என்ற வீரம் நிறைந்த ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும், அச்சுறுத்தும் காட்சிகளிலும் மிரட்டலாக நடித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

பசுபதி வழக்கம்போல் அவரது அனுபவ நடிப்பை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். தங்களது அடிமைத்தனத்தை அறுத்தொழிப்பதற்காக ராமானுஜர் வழியில் பயணிக்க முயற்சிக்கும் பூர்வக்குடி மக்களை அப்படியே பிரதிபலித்து, அந்த கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார்.

தங்கத்தை தேடும் பிரிட்டிஷ்காரராக நடித்திருக்கும் ஆங்கில நடிகர் டேனியல், விக்ரமுடன் பயணிக்கும் பூர்வக்குடி மக்கள், ஜமீன்தாராக நடித்திருக்கும் முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், அர்ஜுன், ப்ரீத்தி கரண்,உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு அதற்கு தேவையான நடிப்பை குறைவின்றி கொடுத்து சிறப்பு செய்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் இன்னொரு நாயகன் யார் என்றால், அது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்தான். தன் மாமா ஏ.ஆர்.ரகுமானையே மிஞ்சும் அளவிற்கு இசையில் புகுந்து விளையாடியிருக்கிறார். பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பு. அதிலும் ‘மினுக்கி மினுக்கி’ பாடல் ஏற்கெனவே பட்டிதொட்டி எங்கும்  பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. பின்னணி இசையில் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பெரிய அளவில் கொண்டாட வைத்து இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் அவரின் ஒளிப்பதிவு மூலம் அனைத்துக் காட்சிகளையும், சண்டைக் காட்சிகளையும் உலகப்படங்களுக்கு இணையாக விரிந்து பரவசம் கொள்ள வைத்திருக்கின்றன. படம் முழுவதும் அவரது காமிரா கோணங்கள் அனைவரும் ரசிக்கும் விதத்தில் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்திருக்கிறார்.

இயக்குனர் பா.ரஞ்சித் படம் என்றாலே ஜாதி அரசியல் இருக்கும் ஆனால் இந்த முறை அவர் பாணியில் இருந்து  விலகி அரசியல் கலந்த ஒரு ஒரு வரலாற்று கதையை கொடுத்து இருக்கிறார். புதிய முயற்சிய் மற்றும் அதற்கான கடினமான உழைப்பு போன்றவற்றால புதிய உலகத்திற்கு ரசிகர்களை அழைத்துச் சென்றிருக்கும் இயக்குநர் பா.இரஞ்சித், பூர்வக்குடிகளின் வாழ்வியலை அழுக்கு படிந்ததாக மட்டும் இல்லாமல், வீரம் மிக்கதாகவும், உலகத்தின் உயரிய பொருளுக்கு நிகராகவும் சொல்லியிருப்பதோடு, அதை தனது மேக்கிங் மூலம் பிரமாண்டமான மற்றும் தரமான படைப்பாக கொடுத்ததில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்.  அவருடைய தனித்துவமான வெற்றிப்படங்களின் பட்டியலில் ‘தங்கலான்’ படமும் நிச்சயம் இடம் பெறும் என்று சொன்னால் மிகையாகாது.

மொத்தத்தில், ‘தங்கலான்’  ஹாலிவுட் தரத்தில் உருவான படம்.

ரேக்கிங் 4/5.

RADHAPANDIAN.