‘கொட்டுக்காளி’ திரைப்பட விமர்சனம்!

250

சென்னை:

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் படம்தான் ‘கொட்டுக்காளி’. நகைச்சுவை நடிகராக இருந்து ‘விடுதலை’ படத்தின் மூலம் கதாநாயகனாக வளர்ந்து, ‘கருடன்’ படம் மூலம் மாஸ் ஹீரோவாக உயர்ந்திருக்கும் சூரி, ‘கொட்டுக்காளி’ படத்தில்  கதாநாயகனாக நடித்திருக்கிறார். பல்வேறு சர்வதேச விழாக்களில் விருதுகள் வென்றதுடன் ஆஸ்கார் விருது பெற முயற்சி செய்த ‘கூழாங்கல்’  படத்தை இயக்கிய பி எஸ் வினோத் ராஜ்,  இயக்கியிருக்கும் இரண்டாவது படம்தான் ‘கொட்டுக்காளி’

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

தனது முறைப்பெண் மாமன் மகளான அன்னா பென்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார் சூரி. அன்னாபென் பள்ளியில் படிக்கும் போது அவருக்கு உண்டான அனைத்து செலவுகளையும் சூரி கவனித்துக் கொள்கிறார் அவர் 12வது வகுப்பு முடிந்த பிறகு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் இருந்த சூரியிடம் கல்லூரியில் படிக்க ஆசைப்பட்ட அன்னா பென்னை கல்லூரியில் சேர்த்து விடுகிறார். கல்லூரியில்  படிக்கப்போன இடத்தில் வேறு சாதியைச் சேர்ந்த மாணவனுடன் பழகி, காதல் ஏற்பட்டதால்,  சூரியை திருமணம் செய்வதற்கு மறுக்கிறார் அன்னாபென். சூரியை திருமணம் செய்து கொள்ள மறுத்த அன்னாபென் வீட்டில் அமைதியாக, மௌனத்துடன் யாரிடமும் பேசாமல் இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் அவருக்கு பேய் பிடித்து விட்டதாக நினைத்து இரு வீட்டு குடும்பங்களும் மதுரைக்கு அருகே பாலமேட்டில் உள்ள ஒரு சாமியாரிடம் அழைத்துச் சென்று பேய் விரட்ட நினைக்கிறார்கள். முதலில் குல சாமி கோவிலுக்கு சென்று விட்டு, சூரி மற்றும் அவருடைய மாமன் குடும்பத்தினர் 12 பேர் அன்னாபென்னை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்திலும், ஒரு ஆட்டோவிலும் பயணிக்கின்றனர். இவர்களுடன் ஒரு சேவலையும் பலி கொடுப்பதற்காக எடுத்து செல்கின்றனர். சேவலை பலி கொடுத்து அன்னாபென் மீது இருந்த பேயை விரட்டினார்களா? முறை மாமன் சூரியை அவர் திருமணம் செய்துக் கொண்டாரா?இல்லையா? என்பதுதான் ‘கொட்டுக்காளி’ படத்தின் மீதி கதை.

பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூரி, ஆரம்பத்தில் அமைதியாக பயணித்தாலும் திடீரென்று கோபம் ஏற்பட்டு அனைவரையும் அடிக்கும் காட்சியில் மிக யதார்த்தமாகவே நடித்திருக்கிறார். சூரிக்கு அவரது சினிமா வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான படம் என்றுதான் சொல்ல வேண்டும். அவரது தொண்டையில் பிரச்சினை இருக்கும் நபராக படம் முழுக்க கரகரத்த குரலில் பேசுவதும், தன் குடும்பத்தில் பணம் சம்பாதிக்கும் ஒரே நபராக அவர் காட்டும் அதிகாரமும் என ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் வெளுத்து வாங்குகிறார்.

மீனா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் அன்னாபென், கண்களிலும் கண்ணசைவுகளிலும் சின்னச் சின்ன மாற்றம் செய்து தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து முகத்தில் எந்த வித உணர்வுகள் இல்லாமல் ஒரு ஊமைப் பெண் மாதிரி பித்து பிடித்தது போல் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களில் சிலர் ஏற்கனவே படங்களில் தோன்றியவர்களாக இருந்தாலும், பெரும்பாலானவர்கள் மண் சார்ந்தவர்களாக இருப்பதால், அனைவருமே மிக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர்.

இப்படத்தில் இசையே கிடையாது, சுற்றுப்புற ஒலிகளை பின்னணி  இசையாக, குறையே தெரியாத விதத்தில் அமைத்து இசையில்லாததை உணராத வண்ணம் கொடுத்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் சக்தியின் ஒளிப்பதிவு. கிராமத்தின் கரடுமுரடான சாலைகளில் சென்று கொண்டிருக்கும் அந்த ஆட்டோவில் நாமும் பயணிப்பதைப் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி இருக்கிறார்.

இப்படத்திற்கு கதை, எழுதி இயக்கியிருக்கும் பி.எஸ்.வினோத்ராஜ், கொட்டுக்காளி என்கிற பெயரில் தொடங்கி படத்தில் பிரதானமாக இடம்பெறும் சேவல் உள்ளிட்ட சில கதாபாத்திரங்களைக் கொண்டு, எளிமையானவர்களின் அறியாமையை எதார்த்தமான முறையில் சொன்னாலும், அதை பெரும்பாலானவர்களுக்கு புரியாதபடி சொல்லி, தனது படைப்பை மக்களிடமே கொடுத்து புரிய வைப்பது புதுமையாக இருக்கிறது. 103 நிமிடங்கள் மட்டுமே ஒடும் இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் இந்த ‘கொட்டுக்காளி’ படம் புரியாத ஒரு புதிரான படம்.

ரேட்டிங்-3/5.

RADHAPANDIAN.