‘வாழை’ – திரைப்பட விமர்சனம்!

172

சென்னை:

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான மாரி செல்வராஜ், தனுஷ் நடிப்பில் ‘கர்ணன்’, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘மாமன்னன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ் திரைப்பட உலகில் ஒரு சிறந்த இயக்குனராக வலம் வந்துக் கொண்டிருக்கும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்தான் ‘வாழை’.

இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், பொன்வேல்,ராகுல்,திவ்யா துரைசாமி,பத்மன், ஜெ.சதீஷ்குமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குளம் கிராமத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பொன் வேல் தனது தந்தையை இழந்த நிலையில், தன் தாய், சகோதரி அரவணைப்பில் அங்குள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான். பொன்வேல் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாலும், குடும்ப வறுமை காரணமாக தன் தாய் வாங்கிய கடனை அடைப்பதற்காக தன் தாயுடனும், சகோதரியுடனும் விடுமுறை நாட்களில் வாழைத் தார் சுமக்கும் பணியை செய்து கொண்டிருக்கிறான்.  அதேபோல் பொன்வேலின் நண்பன் ராகுலும் வாழைத் தார் சுமக்கும் பணியை செய்கிறான். விடுமுறை நாட்களில் பொன்வேலும்,  ராகுலும் வாழைத் தார் அறுக்கும் பணியை செய்தாலும்,  அதிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்று ஏங்கி தவித்துக்  கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தனது பள்ளியில் நடக்கும் ஆண்டு விழாவில் நடனம் ஆடுவதற்காக அங்குள்ள ஆசிரியை நிகிலா விமல் பொன்வேலை தேர்ந்தெடுக்கிறாள். ஆனாலும் பொன்வேலின் தாயார் விடுமுறை நாளான அன்று அவனை வாழைத் தார் சுமக்க அவனது சகோதரியுடன் அனுப்பி விடுகிறார்.

வாழைத்தார் சுமப்பதற்காக லாரியில் ஏறிய பொன்வேலை அவனது சகோதரி பள்ளி ஆண்டு விழாவில் நடனமாட ரிகர்சல் நடக்க இருப்பதால் அவனை லாரியிலிருந்து கீழே இறக்கி விடுகிறாள். அவன் நேரே தனது பள்ளிக்குச் சென்று அந்த தனது ஆசிரியையுடன் சேர்ந்து எப்படி நடனம் ஆட வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்கிறான். இந்த நிலையில் அவன் வீட்டிற்கு வரும்போது ஒரு பெரிய அளவில் நடந்த சோகமான சம்பவத்தில் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறான். அங்கு நடந்த சோகமான சம்பவம் என்ன? என்பதுதான் ‘வாழை’ படத்தின் மீதி கதை.

கதாநாயகனாக நடிக்கும் சிறுவன் பொன்வேல் சந்திக்கும் பல பிரச்சனைகளையும், வேதனைகளையும் மையமாக வைத்துதான் இயக்குனர் மாரி செல்வராஜ் இப்படத்தின் கதையை எழுதி இருக்கிறார்.  தனது வாழ்க்கையில் நடந்த உண்மையான துயரமான சம்பவத்தை மனதிலேயெ வைத்து கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைத்திருப்பதால், படத்தின் மீது மக்கள் மத்தியில்  மிகப் பெரிய  எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

சிவனைந்தன், சேகர் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பொன்வேல், ராகுல் இருவரும் தங்களிடம் உள்ள நடிப்பு திறனை எப்படித்தான் இயக்குனர் சொன்ன காட்சிகளை புரிந்து கொண்டு  வெளிப்படுத்தினார்களோ தெரியவில்லை.  அந்தந்த கதாபாத்திரங்களாகவே உருமாறி  வாழ்ந்து இருக்கிறார்கள்.  இப்படத்தில் இவர்கள் இருவர் செய்யும் சேட்டைகள் நம்மை சிரிக்க வைத்தாலும், வாழைத்தார் வெட்டும் பணிக்கு செல்ல பயந்து பொன்வேல் நடிப்பது, கமலை வெறுப்பது என அனைத்து இடங்களிலும் எதார்த்தமாக நடித்து பாராட்டை பெறுகிறார். பொன்வேல் நண்பன் சேகர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராகுலும், அந்த கிராம மண்ணின் மனம் மாறாமல் மிகச் சிறந்த முறையில் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

பூங்கொடி ஆசிரியையாக நடித்திருக்கும் நிகிலா விமலுக்கு பொருத்தமான கதாபாத்திரம் என்பதால் நடிப்பில் அசத்தி இருக்கிறார். அவரது கனிவான பேச்சும் பள்ளி மாணவர்களிடம் ஒரு வெளிப்படையான ஆசிரியையாக பழகும் விதம், நாம் பள்ளியில் படிக்கும்போது நமக்கு பிடித்த ஒரு ஆசிரியைதான் நினைவுக்கு வருகிறது.

சிறுவன் பொன்வேலின் சகோதரியாக நடித்திருக்கும் திவ்யாதுரைசாமியின் கதாபாத்திரமும் நடிப்பும் அற்புதம்.அவரோடு கண்களாலேயே பேசும் கலையரசன் கவனம் ஈர்க்கிறார். சிறுவனின் தாயாக நடித்திருக்கும் ஜானகி  நடிப்பில் நம்மை உருக வைத்தாலும், கடைசிக் கட்ட காட்சியில் தன் மகனைப் பார்க்கும்போது அவர் வெளிப்படுத்திய நடிப்பு படம் பார்க்கும் அனைவரையும் நெகிழ வைத்து விடுகிறது.

தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் சிறியது என்றாலும், முதலாளித்துவத்தின் ஆணவத்தை காட்டி. தனக்கு கொடுத்ததை நிறைவாக செய்து வெறுப்பை சம்பாதிக்கிறார்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பெரிய அளவில் பலத்தை கொடுத்து இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு அந்த கிராமத்தின் இயற்கை எழில் மிகுந்த பசுமையையும், அங்கு வாழும்  மக்களின் வாழ்க்கை முறையையும் மிகவும் அழகாக காட்சிப்படுத்தியிருப்பதை பாராட்டலாம்.

தன் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவத்தை மனதில்  முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதி இருக்கும் இயக்குனர் மாரிசெல்வராஜ், தான் சிறு வயதில் வாழ்ந்த கிராமத்தையும், அங்கு தன் வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளையும் அப்படியே கண்முன் காட்டி இருப்பதை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும். தனது வாழ்வில் நடந்த ஒரு வேதனையான சம்பவத்தை வைத்துக்கொண்டு, நமது சமுதாயத்தில் உழைப்பாளிகளை அலட்சியமாக நடத்தும் முதலாளித்துவத்தை பற்றி பேசி படமாக்கியிருக்கும் மாரிசெல்வராஜ், கடைசிக் கட்ட காட்சியில் நம் அனைவரையும் கண் கலங்க வைத்து விடுகிறார்.

மொத்தத்தில், ‘வாழை’ கிராமத்தில் உள்ளவர்களின் வலியை சொல்லும் படம்.

ரேட்டிங் 4/5.

RADHAPANDIAN.