சென்னை:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், பகத் பாசில், ரித்திகா சிங் துஷாரா விஜயன், அபிராமி, ராணா மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையில் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் ‘வேட்டையன்’. இந்த படத்தை லைக்கா ஃபிலிம்ஸ் சார்பாக சுபாஷ்கரன் தயாரித்து வெளியிட்டு இருக்கிறார்.
சமீபத்தில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,
கன்னியாகுமரி மாவட்டத்தின் உயர் காவல்துறை அதிகாரியான ரஜினிகாந்த், குற்றங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை அழிப்பதற்கும் சட்டத்தை விட என்கவுண்டரே சரியான வழி என்ற ரீதியில் பயணிக்கிறார். இவரின் என்கவுண்டர் என்றால் அது நியாயமாக இருக்கும் என்பது காவல்துறையில் பணி புரியும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் போதை பொருள்களை பதுக்கி வைத்திருக்கும் ஒரு கும்பலை பற்றி ரஜினிகாந்திடம் துஷாரா விஜயன் சொல்கிறார் . துஷாரா விஜயனின் தைரியத்தை பாராட்டிய ரஜினிகாந்த் அவரை உஷாராக இருக்கும்படி அறிவுரை கூறுகிறார். இந்த நிலையில் சென்னைக்கு மேற்படிப்பு படிப்பதற்காகவும், ஆசிரியையாக தொடர வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வருகிறார் துஷாரா. சென்னையில் உள்ள நீட் கோச்சிங் சென்டரில் நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் பார்த்து வேதனைப்படுகிறார். இது குறித்து அவர் காவல்துறைக்கு தகவல் கொடுக்க முயலும் போது ஒரு மர்ம மனிதனால் கற்பழித்து கொலை செய்யப்படுகிறார் துஷாரா.
அந்த கொலை பழி ஒரு அப்பாவி மீது விழுகிறது. அந்த அப்பாவியை கைது செய்யும்போது காவல் துறை பிடியிலிருந்து தப்பித்து விடுகிறான். இதனால் காவல்துறையினர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ரஜினிகாந்தை கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு வரவழைக்கிறார்கள். உண்மை தன்மை தெரியாமல் துஷாராவை கொலை செய்த நபரை என்கவுண்டர் செய்து சுட்டுக் கொல்கிறார் ரஜினிகாந்த். சுட்டுக்கொன்ற பிறகு அந்த நபர் நிரபராதி என்று ரஜினிகாந்துக்கு தெரிய வருகிறது. இந்த என்கவுண்டரில் மனித உரிமை மீறல் இருப்பதாக குற்றம் சாட்டும் மனித உரிமை கமிஷன், நீதிபதி அமிதாப்பச்சன் தலைமையிலான ஒரு விசாரணை குழு அமைக்கப்படுகிறது. இந்த என்கவுண்டரின் பின்னணியை வைத்து விசாரிக்கும் போது பல உண்மைகள் வெளிவருகிறது. அதனால் அதிர்ந்து போன ரஜினிகாந்த் துஷாரா விஜயனை கொலை செய்த கொலையாளியை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் ‘வேட்டையன்’ படத்தின் மீதி கதை.
அதியன் என்ற உயர் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இப்படத்தின் முதல் பாதியில் குற்றவாளிகளை என்கவுண்டர் முலம் வேட்டையாடும் வேட்டையனாக அற்புதமாக நடிப்பில் கலக்கியிருக்கிறார். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு இயக்குனரின் நடிகராக வலம் வந்திருப்பது மிகவும் பாராட்டக் கூடிய விஷயம் என்று சொன்னால் மிகையாகாது. தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பில் வழக்கமான ஸ்டைலில் இருந்து மாறுபட்டு அவரது ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் அசத்தி இருக்கிறார். தனக்கே உரித்தான சிறப்பான நடிப்பு மூலம் அந்த கதாபாத்திரத்தை கையாண்டதோடு, “குறி வச்சா எற விழனும்” என்ற பஞ்ச் வசனம் பேசி திரையரங்கையே அதிர வைக்கிறார் ரஜினிகாந்த்.
அமிதாப் பச்சன், தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு வசனங்கள் பேசி, அதற்கு உயிர் கொடுக்கும் விதத்தில் உணர்வுப்பூர்வமாக மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார்.
எதையும் யாருக்கும் தெரியாமல் செயல்படும் ஒரு புத்திசாலித்தனமான, முன்னாள் திருடன் பேட்டரி என்ற கதாபாத்திரத்தில் ஃபஹத் ஃபாசில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ரஜினிகாந்திற்கு மிகவும் நம்பகமான இன்ஃபார்மர் மற்றும் தொழில்நுட்ப நிபுணனான நடிப்பில் கலக்கி இருக்கிறார். மிகவும் சுவாரசியமான அவரது கதாபாத்திரம் பல காட்சிகளில் நகைச்சுவையை கொடுத்து கதைக்கு பலத்தை சேர்த்திருக்கிறது.
ரஜினிகாந்தின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர் நிறைவாக அனைவரும் கவரும் வகையில் அதன் தன்மையை உணர்ந்து அசத்தலாக நடித்திருக்கிறார்.
ஆசிரியையாக நடித்திருக்கும் துஷாரா விஜயனின் நடிப்பு அருமை. அவர் ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரம் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததால், அவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம் என்றுதான் சொல்ல வேண்டும்.
கல்வி வியாபாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராணா டக்குபதி அந்த கதாபாத்திரத்திற்கு மிக பொருத்தமாகவும் அருமையாகவும் நடித்திருந்தாலும், ரஜினிகாந்த்துக்கு எதிரான முறையில் ஒரு சிறந்த வில்லனாக நடித்திருக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரக்சன், மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும், கிஷோர், ரித்திகா சிங்,ஜி.எம்.சுந்தர், அபிராமி, ரோகிணி, ரமேஷ் திலக்,ராவ் ரமேஷ் ஆகியோர் மிக சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
அனிருத் இசையில் பாடல்கள் ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் இருக்கிறது..பின்னணி இசையில் கொஞ்சம் சவுண்டை குறைத்து இருக்கலாம்.
எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில் கண்கவர் மற்றும் மனங்கவர் காட்சிகள் ரசிக்க வைத்திருக்கின்றன.
ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இந்தப் படத்தையும் ஒரு சமூக கருத்தை மிக ஆழமாக அழுத்தமாக கூறி எழுதி இயக்கியிருக்கிறார். போதைப்பொருள் புழக்கம், நீட் உள்ளிட்ட பயிற்சி மையக் கொள்ளைகள் உட்பட பல ஆழமான விசயங்களை மையமாக வைத்து, அவற்றின் ஆபத்துகளை மிக துல்லியமாக சிறந்த முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறார் என்பதற்காக ஒரு மசாலா படம் எடுக்காமல் தனக்கென உள்ள பாணியை சிறப்பாக கையாண்டு ஒரு சமூக கருத்தை அனைவருக்கும் புரியும்படி மிக அற்புதமாக ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில், ‘வேட்டையன்’ படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி வாகை சூடுவது நிச்சயம்.
ரேட்டிங் 4/5.
RADHAPANDIAN.