‘ப்ளடி பெக்கர்’ – திரைப்பட விமர்சனம்

117

சென்னை:

நடிகர் கவின், மெர்லின் பிலிப், ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகதா, டி.எம்.கார்த்திக், பதம் வேணுகுமார், அர்ஷத், மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அக்க்ஷயா ஹரிஹரன், அனார்கலி நசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுரபண்டுலா, ரோஹித் டெனிஸ், வித்யுத் ரவி, முகமது பிலால், யு.ஸ்ரீ சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம்தான் “ப்ளடி பெக்கர்”. இப்படத்தை சிவபாலன் முத்துக்குமார் எழுதி இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

எந்த வேலையும் செய்யாமல் பிச்சை எடுப்பதுதான் தனது தொழில்  என்று தினமும் கை, கால், கண் இல்லாதவன் என்று பொய் சொல்லி பிழைப்பை நடத்தி வருகிறார் கவின்.  இந்நிலையில் ரோட்டில் பிச்சை எடுக்கும்  பிச்சைக்காரர்களுக்கு மட்டும் பிரம்மாண்டமான அரண்மனை போன்ற  பங்களாவில் நடைபெறும் அசைவ விருந்துக்கு ஆசைப்பட்டு பிச்சைக்கார கும்பலுடன் செல்கிறார் கவின். அப்போது அரண்மனைக்குள் என்ன இருக்கிறது என உள்ளே சென்று பார்க்க ஆசைப்பட்டு அதனுள் நுழைகிறார்.  அவர் எதிர்பார்க்காத வகையில் விருந்து முடிந்த பின்னர் அந்த அரண்மனையை மூடி விடுகிறார்கள். இதனால் வெளியே வர முடியாமல் அந்த அரண்மனைக்குள்  சிக்கிக் கொள்கிறார் கவின்.

அமைதி நிலவும் அந்த அரண்மனையில் யாருமே இல்லை என்று நினைத்து இங்கும் அங்கும் அலைகிறார். என்ன செய்வதென்று ஒன்றும் புரியாமல் தவித்த கவினின் கண் எதிரே திடீரென்று அங்கு ஆள் நடமாட்டம் தெரிகிறது.  அவர்களைப் பார்த்து பயந்து ஓடி ஒளிந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் அங்குள்ளவர்களிடம் கவின் மாட்டி கொள்ள, அந்த அரண்மனையின் வாரிசுகளில் ஒருவராக நடிக்க வேண்டிய வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. இந்த சூழலில் நூறு கோடி ரூபாய் சொத்தை பிரிக்கும் பிரச்சனையில் ஆடம்பர அந்த அரண்மனையில் வாழ்ந்து மறைந்த சினிமா நடிகர் ராதா ரவியின் கொலைகார வாரிசுகளால் கவினின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. பிச்சைக்காரராக வலம் வந்த கவின் தன் பேராசையால் அங்கு பேராபத்தில் மாட்டிக் கொள்கிறார்.அந்த ஆபத்திலிருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் “ப்ளடி பெக்கர்” படத்தின் மீதி கதை.

பிச்சைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கவின் உணமையான பிச்சைக்காரன் போலவே மிக சிறப்பாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து இருக்கிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் இப்படத்தை தேர்வு செய்து நடித்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. வெவ்வேறு தோற்றங்கள் என தனது நடிப்பு மூலம் முழு படத்தையும் தாங்கிப் பிடித்திருக்கிறார். அரண்மனையில் மாட்டி கொண்டு உயிருக்கு பயந்து அலறும் போதும் , விபத்தில் பலியான  மனைவியை பார்த்து கதறும் காட்சிகளிலும்  உணர்வுபூர்வமான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி  அசத்தி இருக்கிறார்.

காமெடிக்காக ரெடின் கிங்ஸ்லி பயன்பட்டிருக்கிறார். ஆனால் அவரது காமெடியை ரசிக்க முடியவில்லை.

அக்சயா ஹரிஹரன் கதாநாயகி போல் இருந்தாலும் அவரது நடிப்பு எடுபடவில்லை.  வில்லனாக சுனில் சுகதா, மற்றும்  மாருதி பிரகாஷ்ராஜ், டி.எம்.கார்த்திக், பதம் வேணுகுமார், அர்ஷத், மிஸ் சலீமா, பிரியதர்ஷினி ராஜ்குமார், அனார்கலி நாசர், திவ்யா விக்ரம், தனுஜா மதுரபாந்துலா, ரோஹித் டெனிஸ், வித்யுத் ரவி, முகமது பிலால், யு.ஸ்ரீ சரவணன் எனப் பலர் நடித்திருந்தாலும் எந்த கதாபாத்திரமும் சொல்கின்ற மாதிரி இல்லை.

ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையும் படத்திற்கு பக்க பலமாக அமைந்து இருப்பதை பாராட்டலாம்.

பலரை ஏமாற்றிப் பிச்சையெடுக்கும் ஒரு மனிதனுடன் உழைத்து சம்பாத்தித்து வாழ்வேன் என்றிருக்கும் ஒரு சிறுவனைச் சேர்த்ததில் தொடங்கி, ஆடம்பர அரண்மனை மாளிகையின் நூறு கோடி ரூபாய் சொத்துக்களை முதன்மைப்படுத்தி இந்தச் சமுதாயத்துக்கு ஏதோ சொல்ல நினைத்த இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இடைவேளைக்குப் பிறகு கதையை எப்படி நகர்த்த வேண்டும் தெரியாமல் தவித்து இருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

மொத்தத்தில் ‘ப்ளடி பெக்கர்’ படம் காமெடி சொதப்பல்.

ரேட்டிங் – 2.5/5.