‘பிரதர்’ – திரைப்பட விமர்சனம்!

110

சென்னை:

நடிகர் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், சரண்யா, வி டிவி கணேஷ்,  பூமிகா சாவ்லா, நட்டி, ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சீதா , பேபி விர்த்தி, மாஸ்டர் அஸ்வின், சதீஷ் கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘பிரதர்’ இப்படத்தை ராஜேஷ்.எம். கதை எழுதி இயக்கி இருக்கிறார்.

இப்படத்தின் கதையைப் பொருத்தவரையில்,

ஜெயம் ரவி தனது தாய் சீதா, தந்தை அட்சியுத் குமார் இவர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவர் வழக்கறிஞர் படிப்பு படித்தாலும் தேர்வு எழுதும் போது பல பிரச்சினைகளை செய்ததால் இவரை தேர்வு எழுத விடாமல் தடுத்து வெளியே அனுப்பி விடுகின்றனர். இதனால் வேலை வெட்டி இல்லாமல் வீட்டில் சும்மா சுற்றிக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி தினமும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி பெற்றோரை வேதனைப்படுத்தி வருகிறார்.  இவர்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள பலரிடம் பல பிரச்சனைகள் செய்து தாய் தந்தையருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்.

இந்த சூழ்நிலையில் ஊட்டியிலிருந்து சென்னைக்கு வந்து தங்கி இருக்கும் இவரது சகோதரி பூமிகா சாவ்லா,  தனது பெற்றோரிடம் தம்பி ஜெயம் ரவியை நான் ஊட்டி அழைத்துச் சென்று இவனை அங்கு நல்ல மனிதனாக திருத்தி சென்னைக்கு அனுப்புகிறேன் என்று கூறி ஜெயம் ரவியை தனது மாமனார் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். ஊட்டியில் உள்ள பள்ளியில் பணி புரிந்து கொண்டிருக்கும் பூமிகா சாவ்லா தனது மாமனார், மாமியார், கணவர், நாத்தனார் என மகிழ்ச்சியாக குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த சூழலில் ஜெயம் ரவியை அங்கு அழைத்துச் சென்றவுடன் தினமும் ஏதாவது ஒரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டு, அங்குள்ளவர்களையும் வேதனைப்படுத்துகிறார்.

எதற்கெடுத்தாலும் நேர்மை, நியாயம் என்று பேசிக் கொண்டிருக்கும் ஜெயம் ரவியினால்,  சகோதரி வீட்டிலும் பெரிய அளவில் பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் ஜெயம் ரவியை வீட்டை விட்டு வெளியேறுமாறு கணவரும், மாமனாரும் சொல்ல, அதனால் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட அப்போது சகோதரி பூமிகா சாவ்லா அவன் இங்கே இருக்கட்டும் என்று சொல்லி சமாதானப்படுத்துகிறார். அப்போது மாமனாருக்கும் கணவனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பூமிகா சாவ்லாவை அவரது கணவர் கன்னத்தில் அறைந்து விடுகிறார். இதனைக் கண்ட ஜெயம் ரவி தன் சகோதரியை அடித்த மாமாவை கோபத்தில் அடித்து விடுகிறார்.

அதனால் பூமிகா சாவ்லா தன் கணவனிடமும் மாமனாரிடமும் கோபித்துக் கொண்டு, ‘என் குடும்பத்தை அவமதித்த நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்டால்தான் நான் மீண்டும் இந்த வீட்டிற்க்கு வருவேன்’ என்று அங்கிருந்து தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனியே பிரிந்து வந்து விடுகிறார். இந்த சூழலில் தன் மகள் பூமிகா சாவ்லாவையும், மகன் ஜெயம் ரவியையும் பார்க்க வந்த அவர்களது பெற்றோர் அங்குள்ள சூழ்நிலையை பார்த்து வேதனைப்படுகின்றனர். இதனால் வேதனையில் இருந்த தனது பெற்றோரிடம் ஜெயம்ரவி,  பூமிகா சாவ்லாவை எப்படியாவது மாமனார் வீட்டில் சமாதானம் செய்து ஒன்று சேர்த்து வைக்கிறேன் என்று உறுதி அளிக்கிறார். இறுதியில் தன் சகோதரி பூமிகா சாவ்லாவை அவரது கணவர் குடும்பத்தில் ஒன்று சேர்த்து வைத்தாரா? இல்லையா? என்பதுதான் ‘பிரதர்’ படத்தின் மீதி கதை.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி தனது எளிமையான, இயல்பான நடிப்பின் மூலம் அனைவரையும் கவருகிறார். அதிகமான கமர்சியல் விஷயங்கள், சண்டைக் காட்சிகள் எதுவும் இல்லாமல் அமைதியான முறையில் மிக சிறப்பாக தன் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடிப்பில் அசத்தி இருக்கிறார்.அவர் செய்த தவறுகளால்தான் தன் சகோதரி குடும்பம் பிரிந்து விட்டது என்று வருத்தப்படும் நேரத்திலும், பெற்றோர் முன் பேச முடியாமல் நிலை குலைந்து நிற்பது , சகோதரியின் மாமனாரிடம் உருக்கமாக மன்னிப்பு கேட்பது போன்ற காட்சிகளில் மிகவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜெயம் ரவி.

பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்தாலும், இந்த படத்தில் பெரியதாக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் இல்லை என்பதால் தனக்கு கிடைத்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு மிக அற்புதமாக நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

கதாநாயகனின் சகோதரியாக நடித்திருக்கும் பூமிகா சாவ்லா,அந்த கதாபாத்திரத்திற்காக இவர்தான் பொருத்தமாக இருப்பார் என சிறந்த முறையில் தேர்வு செய்து இருப்பது பாராட்டத்தக்கது. தம்பி மீதான பாசம்,குடும்பம் மீதான அக்கறை ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்தி அனைவரும் ரசிக்கும் விதத்தில்  நடித்து இருக்கிறார்.அவருடைய கணவராக நடித்திருக்கும் நட்டியும் நடிப்பில் குறை வைக்கவில்லை.

விடிவி,கணேஷ்,எம்.எஸ்.பாஸ்கர்,சதீஷ் ஆகியோர் நடிப்பில் சிரிக்க வைத்தாலும் சிரிக்க முடியவில்லை. சரண்யா பொன்வண்ணன்,ராவ் ரமேஷ்,சீதா ஆகியோரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் அளவாக நடித்து நிறைவு செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் விவேகானந்த சந்தோஷம் கண்ணுக்கு குளிர்ச்சியான ஊட்டியை நமக்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் மக்கா மிஷி பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. பின்னணி இசையை மிக சிறப்பாக அமைத்து இருக்கிறார்.

சகோதரன்-சகோதரி பாசத்தை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். எப்போதுமே ராஜேஷ் படங்கள் என்றால் ஒரு நல்ல சென்டிமென்ட் கதையோடு காமெடி கலந்து படங்களை இயக்கி இருப்பார். அந்த படங்கள் அனைவரும் கவரும் விதத்தில் இருக்கும். ஆனால் இப்படத்தில் வரும் காமெடி காட்சிகள்  ரசிக்கும்படி இல்லை. அதில் தோல்வி அடைந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.  குடும்பங்களுக்கு இடையே நடக்கும் ஈகோ மோதலின் விளைவுகளால் குடும்பம் எப்படி சிதறிப் போகிறது என்பதை ராஜேஷ் சொல்லி இருந்தாலும் அதை ரசிக்க முடியவில்லை என்பதில் வருத்தம்தான்.

மொத்தத்தில்– இந்த ‘பிரதர்’ படத்தை பார்க்கலாம்.

ரேட்டிங் -3/5.

RADHAPANDIAN.